அன்று
விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான்.
படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாரளமாக புரண்டபோது
முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை திடுக்கிட வைத்த்து. திரைசீலையை
இழுத்து விட்டுக் கொண்டு வெளியே பார்வையை செலுத்தினாள். மணி ஏழை
தாண்டியிருக்கலாம். மனம் பதறினாலும், அதுவே
எழுந்துக் கொள்ளலை தடுத்தது. எட்டுமணிக்கு வீட்டு வேலைக்கு ஆள்
வந்து விடும். அதற்குள் சமைத்து விடலாம். இல்லையென்றாலும் ஒற்றையாளுக்கு என்ன பிரச்சனை இருந்து விடப்போகிறது..?
அலைபேசி வழியே அலுவலகத்திற்கு மதியஉணவை தருவித்துக் கொள்ளலாம்.
மின்னேற்றியிலிருந்து அலைபேசியை உருவி எடுத்தபோதுதான் அது ஒலித்தது.
மூத்தசகோதரனினிடமிருந்து. இந்நாள்வரை அவனிடமிருந்து
வந்த அழைப்புகளை ஒரு கை விரல்களுக்குள் அடக்கி விடலாம். பொதுவாக
அதையே அவன் இயல்பாக்கியிருந்தான். அவ்விடைவெளிகளை அடைக்கும் பொறுப்பை
அம்மாவே ஏற்றுக் கொண்டிருந்தாள், ஓராண்டுக்கு முன்பு வரை.
மின்னுாட்டத்திலிருந்து அகற்றியபோது அழைப்பொலி முடிந்து, பிறகு மீண்டும் ஒலித்தது.
பேச்சுவார்த்தைகள் அற்று போன நீண்ட கொடுந்தனிமைக்கு பிறகு வரும் முதல்
அழைப்பு. அந்நீண்ட இடைவெளியில் அவளின் தீண்டப்படாத அழைப்புகள்
அவன் அலைபேசியிலிருந்து எங்கோ ஓடி மறைந்திருக்கலாம்.
ஹலோ
என்பதற்கு பதிலாக “சொல்லுண்ணா..“ என்றாள்.