பொதுப்பணித்துறையில் பணியாற்றும்
தாங்கள் தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு நாவல் சிறுகதைகள் எழுதி வருகின்றீர்கள்.
தாங்கள் எழுத தொடங்கியது எப்போது? முதல் படைப்பு சிறுகதையா.. நாவலா..?
பொதுப்பணித்துறை பணி என்பது எனது படிப்பிற்கான பணி. இலக்கியமோ
எனக்கு வாழ்விற்கான ஆதாரம் என்று தோன்றுகிறது. சிறு வயது முதற்கொண்டு வாசிப்பில் ஆர்வம்
உண்டு. என் தந்தையார் வழி வந்த ஆர்வம். அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அத்தருணத்தில்
எனக்கு அறிமுகமானவைகள் அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி போன்றன. ஆனாலும் நுாலகங்கள் மூலமாக
நுால் வாசிப்பு தீவிரப்பட்டது. திருமணம், அரசுப்பணி, குழந்தைகள் என்ற சூழலுக்குள் அல்லது
சுழலுக்குள் சிக்கி மீண்ட போது காலம் பத்து வருடங்களை நகர்த்தியிருந்தது. மீண்டும்
வாசிப்பு. இம்முறை வாசிப்பு பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்தது. சிற்றிதழ்கள் நிறைய
வாசிக்கத் தொடங்கினேன். அதன் மூலமாக அயல் நாட்டு இலக்கியங்கள் அறிமுகமாயின.
தொடர்ந்த வாசிப்பும் ஏகாந்தமான தனிமை உணர்வும் என்னை எழுத்துக்குள்
செலுத்தியது எனலாம். கதை எழுதும் நோக்கமென்று இல்லாமல் ஒருமுறை கணினியில் நான் அனுபவித்த..
கேள்விப்பட்ட.. விஷயங்களை கோர்வையாக்கி எழுதினேன். அது தானாகவே கதை போன்று வடிவெடுத்திருந்தது.
ஒரு பெண்ணின் காத்திருப்பு அது. அல்லது சமுதாயம் பெண்ணின் மீது திணித்துள்ள பொதி எனவும்
கொள்ளலாம். வைதேகி காத்திருந்தாள் என்று பெயரிட்டேன். அப்போது தினமணியில் சிறுகதை போட்டி
அறிவிப்பு வந்திருந்தது. நடந்த ஆண்டு 2012. நெய்வேலி புத்தகக்கண்காட்சியும் தினமணி
நாளிதழும் இணைந்து நடத்தும் போட்டி அது. இக்கதையை அந்த போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.
இரண்டாவது பரிசு கிடைத்தது. என் முதல் கதையே பரிசு பெற்றது ஒரு நிறைவு என்றால் பரிசு
பெறும் நிகழ்வு என் பிறந்த ஊரான நெய்வேலியில் நடைப்பெற்றது மற்றுமொரு நிறைவு.