Search This Blog

Sunday 6 March 2022

ஆலகாலம்

 


நாவலுக்கான முன்னுரை

உலகமே நிலையாமையின் கூடு.  உயிர்களாகிய நாம் அதற்கேற்ப பாவனைகளோடு பிம்பங்களை உருவாக்கிக் கொண்டு அலைகிறோம். எதுவும் நிஜமில்லை. எதுவும் நித்தியமில்லை. காலம் மட்டுமே முழு முற்றான உண்மை. நகர்ந்து விடும் காலத்தின் கைகளுக்குள் எத்தகைய முக்கியத்துவங்களும் நழுவியோடி விடும் என்பதே நிதர்சனம். வெறுமையின் தரிசனமே வாழ்வின் பேருண்மை என்பன போன்ற எண்ணங்களுக்கு மத்தியில் இருத்தல் என்பதே அசாத்தியம்தான். அதேசமயம்  உலகம் கூடுதல் பாவனையாளரையே நம்புகிறது, விரும்புகிறது, ஏற்கிறது, கொண்டாடுகிறது. இவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்வதும் ஆபத்தானதாகத்தானிருக்கிறது. நம் முன்னே குவிந்து கிடக்கும் காலங்களை காலால் எவ்வி விளையாடி, பிறகு அதனிடம் தோற்று உருண்டோடி மறைந்துப் போகும் இந்த உலகியல் விளையாட்டு மனம் முழுக்க ஒரு வெறுமையை உண்டாக்குகிறது. மௌனத்தின் இடைவிடாத ஓசை மனதை இம்சிக்கிறது. புறவாழ்வின் அர்த்தங்களுக்கும் அகத்தின் நிலைப்பாடுகளுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே செல்வது சொல்லவியலாத ஆயாசத்தை தருகிறது. 

‘ஆலகாலம்’ என்ற இந்த நாவலை எழுத விழைந்தது எக்கணம் என்று யோசித்துப் பார்க்கிறேன். முன் திட்டமிடல் என்று ஏதுமில்லை. ‘அற்றைத்திங்கள்’ (யாவரும் பதிப்பக வெளியீடு)  நாவலை முடித்திருந்த நேரம் அது. கணினியின் விசைகளை வெற்றாக தட்டியபோது வந்து விழுந்தவற்றை கோர்த்தெடுத்துக் கொண்டேன். வெற்று.. வெறுமை... ஏதுமில்லாமை இவைதான் மனித வாழ்வு என்பதும் அவற்றை கலையோ அவற்றையொத்த விசைகளோதான் முன்செலுத்துபவை என்றும் தோன்றியது. 

பூமி விடியல் முடித்து இரவும் இரவு கழிந்து விடியலையும் அனுபவித்து அவை, நாட்கள், வருடங்கள், நுாற்றாண்டுகள், யுகங்கள் என கடந்தபோதும் வாழ்வின் அடிநாதம் அதுவொன்றுதான். அதை வடிவாக்கும் எண்ணம் கொண்டேன்.  எழுத உட்கார்ந்தபோது அவை பிடிக்கு அகப்படாமல் கலைந்தோடின. பிடித்து அமர்த்தியபோது அது படைப்பாகவில்லை. நானும் பிடிவாதம் கொண்டேன். அதேநேரம் என் மனதை சிறுகதைகள் பக்கம் திருப்பிக் கொண்டேன். இருப்பினும், உள்ளார்ந்து ஓடிக் கொண்டிருந்தவைகளும் என் கவனத்தில்தானிருந்தன. ஒரு புள்ளியில் அவை நிலைகொள்ள, எழுதத் தொடங்கினேன். பாகங்கள் ஒவ்வொன்றாக உருவாகி வந்தபோது ஏதொன்றிலாவது மனம் சிக்கிக் கொண்டு நகரவியலாது நின்று விடும். மிகப் பெரிதாக நான் மூச்சடைத்துப் போனது நான்காவது பாகத்தில்தான். அதில் காந்தியடிகளை கதாபாத்திரமாக்கி உலவ விட்டிருந்தேன். ஆனால் அவரோ என்னை தன் மீது பித்தாக்கி அலைய விட்டு விட்டார். நாவலை அந்தப்புள்ளியில் நிறுத்தி விட்டு காந்திய சிறுகதைகளை எழுத தொடங்கினேன். அதுவும் போதவில்லை. எனது ஆர்வம் கனிந்து ‘ஹரிலால் S/0 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’  என்ற நாவலை எழுத வைத்தது. (இந்நுால் தன்னறம் நுால்வெளியின் பதிப்பாக இதே 2022 ஜனவரி புத்தகக்கண்காட்சியில் வெளியாகியுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்). 

அந்நாவலை எழுதி முடித்த பிறகு மனம் மீண்டும் பிடிவாதம் கொள்ள தொடங்கியது. எழுதி வைத்தவைகளை எடுத்து பார்த்தபோது அதனை தொடர்ந்து செய்யும் ஆர்வம் கிளர்ந்தெழுந்தது.  நான் அடையாளம் காண வேண்டிய புள்ளி வடிவென துலங்கி வர,  அதை நோக்கி பயணப்பட தொடங்கினேன். ஆலகாலம் உருவானது. 

இந்நுாலுக்கு முன்னுரை எழுதியளித்த நண்பர் சரவணன் மாணிக்கவாசகம் அவர்களுக்கு நன்றி. இந்நுாலின் இறுதிப்பகுதியில் எழும் கவிதைகளை தந்துதவிய கவிஞர்.மஞ்சுளாதேவிக்கும் உடனுக்குடன் வாசித்து கருத்துகளை பகிர்ந்துக் கொண்ட எழுத்தாளர் கண்மணிக்கும் நன்றி. மேலும் இந்நுாலின் உருவாக்கத்தில் துணிப்புரிந்த எண்ணற்ற நுால்களின் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

இந்நுாலை சிறந்த முறையில் பதிப்பித்த “யாவரும் பதிப்பகத்தாருக்கு“ என் நன்றியும் மனமார்ந்த அன்பும். 

என்னை என் மனநிலையில் முடிந்தவரை தக்க வைத்துக் கொள்ள உதவிய குடும்பத்தாருக்கு என் அன்பு.

ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் கா்ந்தி நாவலுக்கான முன்னுரை

 

இவ்வாண்டு (2022 பிப்ரவரி) புத்தகக் கண்காட்சி, சென்னையில் ‘யாவரும் பதிப்பக’த்தின் வெளியீடாக வெளியாகியிருக்கும் எனது ‘ஆலகாலம்’ என்ற நாவலில் காந்தியடிகளை ஒரு கதாபாத்திரமாக்கியிருந்தேன். அதன்பொருட்டு நிறைய நுால்களை படிக்க வேண்டியிருந்தது. காந்தி எழுதியவைகளும் காந்தியைப் பற்றி எழுதப்பட்டவைகளுமாக கொட்டிக் கிடக்கும் பரந்தவெளியில் எடுக்க எடுக்க குறையாத எழுத்துகளை அள்ளியள்ளி ஏந்திக் கொண்டேன். அது கடலை போன்றது. அள்ள அள்ள தீராதது. யாருக்கேனும் அவற்றை ஒட்டு மொத்தமாக அள்ள முடிந்தால் அதுவே சாதனைதான். ஆனால் அச்சாதனையை அவர் வாழ்வாக வாழ்ந்திருக்கிறார். அது கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இமயம் போன்றும் பெருகியோடும் கங்கையைப் போன்றும் பிரம்மாண்டமானது.

அவர் 1869 முதல் 1948 வரையிலான தன் வாழ்நாளுக்குள் பல நுாறு வாழ்க்கைகளை வாழ்ந்து விட்டவர். நாடு, மதம், இனம், மொழிகளை கடந்த நட்பும் மனிதக்குலத்தின் மீது தீராத காதலும் கொண்டவர். அவரை குறித்து ஆன்மீகவாதியா, அகிம்சைவாதியா, அரசியல்வாதியா, அறவாளரா, துறவாளரா, குடும்பஸ்தரா, சமூக நீதி காவலரா என்று எதை கேட்டாலும் ஆம்.. ஆம்.. ஆம்…  என்று கூறிக் கொண்டே போகலாம். அதே சமயம் அவர் ஏதொன்றிலும் நிலைப்பெறுபவர் அல்ல. விரிக்க விரிக்க விரிந்தும் எடுக்க எடுக்க பெருகியும் விளையாடும் வித்தகர். எதையொன்றை முடிவு செய்துக் கொண்டு அவரை அணுகினாலும் அதனை மீறி நழுவிச் செல்பவர். ஆழம் துழாவி அகழ்ந்தெடுத்தாலும் மிச்சமென நிறைபவர்.

அதிசயத்தக்க மனிதர்களை காவிய நாயகர்களாக்கி காவியங்கள் புனையலாம். கவிப்பாடி மகிழலாம். நாமும் அவற்றை வாசித்து எங்கோ எப்போதோ நிகழ்ந்தவையென புளங்காகிதம் கொள்ளலாம். ஆனால் காந்தியடிகளோ அவற்றை நம் கண்ணெதிரே இரத்தமும் சதையுமாக நிகழ்த்தி விட்டு போயிருக்கிறார்.  வாசிக்க வாசிக்க பெருகி நின்றவரை என்னால் ஒரு கட்டத்தோடு நிறுத்த இயலவில்லை. பல்வேறு தலைப்புகளில் காந்திய சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். ஹரிலாலைக் குறித்தும் எழுத  வேண்டுமென எண்ணம் தோன்றியது. அதற்கான தரவுகளை திரட்டத் தொடங்கியபோது அதனை சிறுகதைக்குள் அடக்க முடியாது என்பதை உணர்ந்தேன். அவ்வாறு உருவானதுதான் ‘ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்ற இந்நாவல். (இந்நாவலின் இரண்டாம் பகுதியை எழுதிக் கொண்டுள்ளேன்)

நான் எழுதிக் கொண்டிருந்த “ஆலகாலம்” என்ற நாவலை அதேப்புள்ளியில் நிறுத்தி விட்டு ஹரிலாலை எழுதத் தொடங்கினேன். இதனை எழுதிய மூன்று மாதக்காலமும் நான் காந்தியவர்களின் குடும்பத்துக்குள்ளேயே இருந்தது போலிருந்தது எனக்கு. இதற்கு தேவைப்பட்ட பல நுால்களுள் ஒன்றான GANDHIJI’S LAST JEWEL  என்ற நுாலை திரு.அண்ணாமலை, இயக்குநர், தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுடெல்லி அவர்கள் எனக்கு PDF வடிவில் எடுத்து அனுப்பி வைத்தார்கள். இதனை ஒரே நாளில் வாசித்து வாழ்த்திய திரு.மோகன், சேர்மன், காந்தி கல்விநிலையம் அவர்களுக்கும் திருமதி.பிரேமா அண்ணாமலை, திரு.சு.சரவணன் அவர்களுக்கும் என் இனிய நட்புகளான கவிஞர்.மஞ்சுளாதேவி மற்றும் எழுத்தாளர்  கண்மணி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

மேலும் இந்நுாலின் உருவாக்கத்தில் துணைப்புரிந்த மோகன்தாஸ்காந்தி உட்பட எண்ணற்ற நுால்களின் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி.

காந்தியவர்களை வாசித்தபோதினில் நெகிழ்ந்தும் ததும்பியும் நின்ற நேரங்களில் எனக்கு உறுதுணையாகவும் ஊக்கமளித்தும் இந்நாவலுக்கு முன்னுரையும் வழங்கியுமாக நிறைவான நட்பை வழங்கிய எனது இனிய நண்பர், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

தன்னறம் என்ற சொல் எழும்போதே அதனை ‘சிவராஜ்’ அவர்களின் வாய் நிறைந்த சிரிப்புடன் மனம் கோர்த்துக் கொள்கிறது. அதே நெகிழ்வும் மகிழ்வுமாக  இந்நாவலை வெளியிட முன்வந்த தன்னறம் நுால்வெளிக்கு என் மனமார்ந்த நன்றி.