அன்புள்ள கலைச்செல்வி
நேற்றும் முந்தாநாளுமாக இரு தினங்களில் ’மாயநதி’ தொகுதியை தொடர்ச்சியாக உட்கார்ந்து படித்துமுடித்தேன். மனிதர்களை மிக்நெருக்கத்திலிருந்து எடுத்த படங்களின் தொகுப்பைப் புரட்டிய உணர்வை அடைந்தேன். ஈரமில்லாமல் இரக்கமில்லாமல் கருணையில்லாமல் மாறி தன்னை நிறுவ முனையும் மனிதர்கள் ஒருபுறமாகவும் இயலாமையோடும் இல்லாமையோடும் வதைபட்டு வாழ்வின் விளிம்பில் மரணத்துக்கு அருகில் தவித்துப் புலம்பும் மனிதர்கள் மற்றொருபுறமாகவும் நிறைந்திருக்க, இரண்டுக்குமிடையே உங்கள் மாயநதி ஓடுவதாக ஒருகணம் தோன்றியது. பெரும்பாலான கதைகளில் வறுமைச்சித்திரங்கள் மிகமிக இயல்பாக இருக்கின்றன. நம்பகத்தன்மை மிக்க உரையாடல்கள் அத்தகு சித்திரங்களுக்கு வலிமையளிக்கின்றன.