இலக்கியப்படைப்பென்பது வாழ்வை கண் முன்பாக வைப்பதல்ல. அதன் அடிப்படைகளை ஆராய்ந்து
அதன் போக்கோடு சென்று திரண்டவைகளை திரட்டி நேர்மையாக முன்னிறுத்துவதே என்பதை சொல்லும்
சித்திரமே விஷ்ணுபுரம்.
அரசியல் மற்றும் அதிகார ஆசைக்கொண்டோரின் தந்திரத்தால் உருவாகிறது விஷ்ணுபுரம் என்னும் நகரம். இரும்புதாது கலந்த பாறைகளின் வழியே ஊறி வரும் சோனா ஆற்றின் அக்னி நிறத்தையொத்த அக்னிதத்தன் என்ற வேதபண்டிதன் வடக்கிலிருந்து அங்கு வந்து சேர்கிறான். சித்திரபீடசபை என்ற ஞானசபையில் அக்னிதத்தன் விவாதம் புரிந்து வென்றதில் அங்கு வைதீகம் ஆட்சியாகிறது. அப்பகுதி பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் விஷ்ணுபுரத்தை பொறுத்தவரை மன்னர் என்பவரெல்லாம் இந்திய குடியரசின் ஜனாதிபதியை போன்றவர்தாம். அங்கிருக்கும் சிலையை விஷ்ணுவாக மாற்றி பிரம்மாண்ட கோபுரங்களையும் சாஸ்திரங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறது வைதீகம். விஷ்ணுபுரத்தில் விஷ்ணுவிலிருந்து தொடங்கி எல்லாமே பிரம்மாண்டம்தான். விஷ்ணுவின் சிலை அறுநுாறு கோல் நீளம் கொண்டு முகவாசல், உந்திவாசல், பாதவாசல் என்று மூன்று வாசல்களை கொண்ட கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்திருக்கிறது. அப்பிரம்மாண்ட கருவறையின் திறக்கப்படும் வாசல்களுக்கேற்ப அங்கு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பாதவாசல் திறக்கப்பட்டு சித்திரா பௌர்ணமி நாளில் நடைபெறும் ஸ்ரீபாத திருவிழா காலம்தான் நாவலின் முதற்பாகம்.