ஏப்ரல் 2018 தடம் இதழில் வெளியான சிறுகதை
சுவரின் மறுபக்கம் அவை உறும தொடங்கியிருந்தன.
ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால் அந்த ஒலியே அவளை மருள வைத்தது. கைகள் இரண்டையும் மடித்து
உடலை குறுக்கி சுவரோரமாக பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு
நின்று விடலாம். ஆனால் அது வெகு சில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக
மாறி விடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பது போலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டி
பார்க்கும்போது யாதும் தட்டுப்படுவதில்லை. ஆனால் அது கூட வெகு சில நேரங்களில் மட்டுமே.
ஒருவேளை இப்போதும் அப்படிதானோ.. சுவற்றோடு காதை நெருக்கி வைத்துக் கொண்டாள். இல்லை..
அவை நடமாடுகின்றன. அவளை கண்காணிப்பதற்கு தோதான இடத்தை தேடி அங்குமிங்கும் அலைகின்றன.
விறுக்கென்று அடி வயிறு குழைந்து பயம் கவ்வி
இழுத்தது அவளை.
அவளை கண்காணிக்கவே அவை வருகின்றன.
அவளுடையவை அத்தனையும் இப்படிதான் உருவப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து தான் கண்காணிப்பில்
இருப்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள். உறுமல்கள்
சன்னமாக கூடின. பிறகு குரைப்பாக மாறும். குரைப்பு முதலில் ஒன்றிலிருந்துதான் தொடங்கும்.
பிறகு அடக்க முடியாததாகி விடும். நாலைந்து.. இல்லையில்லை.. ஏழெட்டு இருக்கலாம்.. அடர்
கருப்பில்.. அல்லது திட்டுதிட்டான கருப்பில்.. வெளிர் செம்மண் நிறத்தில்.. நிறம் வெவ்வேறாக
இருந்தாலும் எல்லாமே வளர்த்தியாகவும்.. தாட்டியமாகவும்.. இடைவிடாது குலைக்கும் சுபாவத்துடனும்
இருந்தன. கலவரத்தோடு கதவை ஏறிட்டாள். தாழிடப்பட்டுதானிருந்தது. ஆனாலும் உளுத்துப் போன
தாழ்ப்பாள். எப்படியாக இருந்தாலும் தாழ்ப்பாள் வீட்டுக்கு பாதுகாப்பு.. வீடு அவளுக்கு
பாதுகாப்பு.. வீடு என்றாலே பாதுகாப்புதானே.. அதுவும் நிறைந்த வீடென்றால்.. கணவன்..
மூன்று மகன்கள் என நிறைந்த வீடு. பூர்விக வீட்டை இடித்து விட்டு புதிதாய் கட்ட தொடங்கியபோது
அகல கால் வைக்கிறோமோ..? அவளுக்கு பயம் வந்தது. கணவன் சொன்னான்.. “வருசம் ஒருக்காவா
கட்றோம்..?” பிறகு கணவனுக்கு பயம் வந்தது.. ”மூணு பயலுவன்னு ஆயிடுச்சு.. சின்னதுன்னாலும்
ஆளுக்கொரு ரூம்பா தடுத்ததுட்டா நல்லாருக்கும்..” அவள் சொன்னாள். “நல்லாதான் இருக்கும்..”
ஆமோதித்தான். இரட்டை கட்டு வீடோ.. முற்றம் வைத்த பெரிய பரப்போ இல்லையென்றாலும் முன்கூடம்..
சமையலுக்கு ஒன்று.. பத்தாயம் வைக்க ஒன்று.. படுக்க ஒன்றுமாக இருந்த அறைகளை புதிதாக்கினார்கள்.
மிஞ்சிய மணலில் பயல்கள் ஏறி விளையாடுவதும்.. விளையாடிய களைப்பில் அதிலேயே உறங்குவதுமாக
நாட்கள் கடந்தபோது அந்த தொழிற்சாலை அங்கு வரப்போவது யாருக்கும் தெரியவில்லை.. அல்லது
யாரும் உணரவில்லை.