டிசம்பர் 2017 சொல்வனம் இணைய இதழில் வெளியானது
கடல், நீரையள்ளி தெளித்ததில் தரையோடு படிந்துக் கிடந்த மணல் காலடிகளை உள்வாங்கி தடமாக பதித்திருந்தது. ஃபாதர் தாமஸ்ஃபிலிப்புக்கு வளமையான பெரிய கால்கள் வேறு. அச்செடுத்தது போல இங்குமங்குமாக படிந்துக் கிடந்தன. இருள் விலகாத, பகல் பிரியாத நேரமது. இளங்காலை நேரத்துக் கடல் முதிய தாயைப் போல ஆதுரமாக அணைத்துக் கொள்ளும். அதன் அலைகள் பொக்கை வாயில் வழியும் கனிந்த சிரிப்பை போல கடலெங்கும் ததும்பி கிடக்கும். இந்த அனுபவத்துக்காகவே அவ்வப்போது அவர் இங்கு வருவதுண்டு. கடலும் அலைகளும் அதன் இறைச்சலும் வெற்றுக் காட்சிகளாக இன்று அவர் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தன.
கடலையொட்டி
அமைந்த புனித தேவாலயத்திற்கும் தாமஸ்ஃபிலிப்புக்கும் கிட்டத்தட்ட முப்பதாண்டுப்
பழக்கம். அது அவரின் வயதில் நான்கில் ஒரு பகுதி. இத்தனை ஆண்டுகளும் பூசை..
புனிதங்களை தவிர்த்து, கடலையும் அவரையும் தவிர வேறு யாருமற்ற தனிமை. அவராகவே
விரும்பி ஏற்றுக் கொண்டதா.. அல்லது விதிக்ப்பட்டதை விருப்பமாக்கிக் கொண்டாரா
என்பது அவருக்கே தெரியவில்லை.