Search This Blog

Friday 29 January 2021

தங்கநொடிகள்



வசிட்டா ஏரியில் நீர்பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரைக்கும் படுகைக்கும் இடையே உயர்ந்திருந்த ஈரமான நிலங்கள் கிராமங்கள் என்றாகின. அவை வரிசையாக அமைந்திருந்தாலும் கோடு கிழித்தாற் போன்றிருப்பதில்லை. ஏரிக்குள் வளைந்தும் படுகைக்குள் நுழைந்துமாக அமைந்த கிராமங்களில் நகருடன் இணையும் பிரதான சாலையின் அருகாமையில் இருந்தது சர்வாடா கிராமம். நீரின் செழிப்பும் நிலத்தின் வளமும் கிராமங்களை வயல்களுக்குள் புதைத்திருந்தன. போக்குப்பாதைகளைத் தவிர்த்து சிறு மண்பரப்புகளைக் கூட தாவரங்கள் தவற விடவில்லை. காணுமிடமெங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. படுகைகள் நீண்டு காடுகளாகியிருந்தன. வங்கத்தின் மாரிக்கால மாதமொன்றில் தகரத்தாலான அந்த சிறிய வீட்டின் தாழ்வாத்தில் ஹுக்காவைப் புகைத்தப்படி நின்றிருந்தார் சந்தா. தாழ்வாரமும் உள்ளறையும் கொண்ட அச்சிறுவீடு ஈரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தது. சுப்பையா மழையால் தளர்ந்திருந்த பாகல் கொடிக்கு முட்டுக்கொடுத்து இழுத்துக் கட்டிக்கொண்டிருந்தான்.