Search This Blog

Friday 22 September 2017

நாவல்கள்


யாவரும் பதிப்பகம் 2017
எழுத்துப் பதிப்பகம் 2016
NCBH பதிப்பகம் 2015

Thursday 21 September 2017

புகார்

குறி சிற்றிதழ் ஜுலை - செப்டம்பர் 2017ல் வெளியான சிறுகதை

‘மணமேடு’.. பேருந்தின் விரைவோடு தேசிய நெடுஞ்சாலையின் பெயர் பலகையில் கண்ணில் அகப்பட்டு நழுவியோடியது ஊர்.. மணமேடு.. “அட..இங்கதான் இருக்கா இந்த ஊரு..”  எஸ். கதிரேசன்.. B/o பூங்கோதை, பிரதான வீதி.. மணமேடு அஞ்சல்.. மணமேடு.. இந்த முகவரி எனக்கு மனப்பாடம். ஒன்றா இரண்டா எத்தனை புகார் மனுக்கள் அந்த முகவரியிலிருந்து..? எல்லாமே பதிவஞ்சலில். புகார் மனுவுக்கு பதில் எழுத வேண்டியது என் இருக்கைக்கான பணி. பொதுவாக பதில்கள் “நடவடிக்கை எடுக்கப்படும்… சம்பந்தப்பட்டவரிடம் பதில் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..“ என்பது மாதிரியான டெம்ப்ளேட் வகையறாதான்.  ஆனால் கதிரேசன் விடாக்கண்டர். அந்த பதிலிலிருந்து கூட எதாவது கேள்வியை கண்டுப்பிடித்து விடுவார்.



திரும்பி போகும்போது அந்த பெட்டிஷன் பார்ட்டியை’ ஒரு எட்டு பார்த்து விட்டு போகலாமா என்று திடீரென தோன்றியது. இது எனக்கே கொஞ்சம் ஆச்சர்யம்தான். என் இருக்கைக்கே தேடி வருபவர்களை கூட நான் உபசரிப்பதெல்லாம் கிடையாது. “தபால் அனுப்பியிருக்கேன்.. பாத்துக்கங்க..“ என்று எதையாவது வெட்டி விட்டு பேசி விடுவேன். கதிரேசனின் புகார் கொஞ்சம் வித்யாசமாக இருக்க போக இந்த ஆர்வம் எழுந்திருக்கலாம். பூங்கோதை என்றொரு தங்கை அவருக்கு. போர்முனையில் புகைப்படம் எடுத்தாராம். அவரை யாரோ நாசப்படுத்தி கொன்று விட்டார்களாம். புகைப்படங்களும் கையாடலாகி விட்டனவாம். அதற்கான நியாயம் வேண்டும் என்பதுதான் மனுவின் சாரம்.

Friday 15 September 2017

அற்றைத்திங்கள் குறித்து தஞ்சை ஹரணி..

என்றைக்குமான தொடரும் வலிகளைப் பிரசவிக்கும் அற்றைத் திங்கள்

             எழுத்தாளர் கலைச்செல்வி அவர்களை எனக்கு அவரின் படைப்புகளின் வழியாகவே அறிமுகம். குறிப்பாகப் பெரியாயி என்கிற கதையொன்றின் அதீத ஈர்ப்பின் காரணமாக அவரது எழுத்துகளின்மேல் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஒன்றின் விளைவாகவே வாசிக்கத் தொடங்கினேன். அவரின் கணையாழி சிறுகதையொன்று குறித்த விமர்சனத்தை  எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் தஞ்சைக் கூடலில் வாசித்தேன். அலங்காரம் எனும் அக்கதை சீதையின் வனவாசம் பற்றிய வேறு பரிமாணத்தைத் தருவதாகும். அதன்வழியாகவே அவரின் மூன்று படைப்புகள் என்னை வந்து சேர்ந்தன. இரவு எனும் சிறுகதைத்தொகுப்பு மற்றும் அவரின் இரண்டாவது, மூன்றாவது நாவல்கள் புனிதம் மற்றும் அற்றைத்திங்கள்.

Thursday 14 September 2017

எங்க ஊர்ல..



ஊரின் மையத்திலிருந்தது அந்த வேம்பு. ஆலமரம் போல தழைத்து நிறைந்திருந்த அதன் படர்வான நிழலில் கிழக்கு நோக்கி ஒரு கருத்த பிள்ளையார் அமர்ந்திருந்தார். கூடவே ஒரு சூலமும். எண்ணெய் மினுங்கிய அவர் மேனியில் வேம்பின் இலையும் பூவும் உதிர்ந்து ஒரு மாதிரியாக புனிதம் குவிந்திருந்தது. ”நம்பூர போட்டோ எடுத்து வெளிநாட்டு நீஸ்பேப்பர்ல்லாம் போடுவாங்களாம்..“ தகவல் வந்ததையடுத்து பெண்கள் காலை வேலையை ஒதுக்கி விட்டு குளித்து முடித்திருந்தனர். சின்தடிக் புடவையும் அதனுடன் இணைந்த சின்தடிக் ரவிக்கையும் அணிந்துக் கொண்டனர். பெரிய பெரிய பூக்களை கொண்ட புடவைகள் புகைப்படத்தில் திருத்தமாக பதிவாகும் என்பதில் நிறைய நம்பிக்கையிருந்தது அவர்களுக்கு. சராசரியாக எல்லோருக்குமே மெல்லிய உடல்தான். அதனை இறுக கவ்விக் கிடந்தது மெல்லிய சின்தெடிக் ரவிக்கைகள். இளந்தாரி பெண்கள் சீவி முடிந்த கூந்தலில் கனகாம்பரம் பூ சூடியிருந்தனர். நடுத்தர வயது பெண்களுக்கு பூக்களின் மீது அத்தனை ஆர்வமில்லை. குட்டியும் குளுவாணிகளுமாக சந்தடியாக கிடந்தது அந்த வேம்படி.

Tuesday 12 September 2017

நேர்காணல் ஒன்றில்..


      பொதுப்பணித்துறையில் பணியாற்றும் தாங்கள் தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு நாவல் சிறுகதைகள் எழுதி வருகின்றீர்கள். தாங்கள் எழுத தொடங்கியது எப்போது? முதல் படைப்பு சிறுகதையா.. நாவலா..?

பொதுப்பணித்துறை பணி என்பது எனது படிப்பிற்கான பணி. இலக்கியமோ எனக்கு வாழ்விற்கான ஆதாரம் என்று தோன்றுகிறது. சிறு வயது முதற்கொண்டு வாசிப்பில் ஆர்வம் உண்டு. என் தந்தையார் வழி வந்த ஆர்வம். அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அத்தருணத்தில் எனக்கு அறிமுகமானவைகள் அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி போன்றன. ஆனாலும் நுாலகங்கள் மூலமாக நுால் வாசிப்பு தீவிரப்பட்டது. திருமணம், அரசுப்பணி, குழந்தைகள் என்ற சூழலுக்குள் அல்லது சுழலுக்குள் சிக்கி மீண்ட போது காலம் பத்து வருடங்களை நகர்த்தியிருந்தது. மீண்டும் வாசிப்பு. இம்முறை வாசிப்பு பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்தது. சிற்றிதழ்கள் நிறைய வாசிக்கத் தொடங்கினேன். அதன் மூலமாக அயல் நாட்டு இலக்கியங்கள் அறிமுகமாயின.

தொடர்ந்த வாசிப்பும் ஏகாந்தமான தனிமை உணர்வும் என்னை எழுத்துக்குள் செலுத்தியது எனலாம். கதை எழுதும் நோக்கமென்று இல்லாமல் ஒருமுறை கணினியில் நான் அனுபவித்த.. கேள்விப்பட்ட.. விஷயங்களை கோர்வையாக்கி எழுதினேன். அது தானாகவே கதை போன்று வடிவெடுத்திருந்தது. ஒரு பெண்ணின் காத்திருப்பு அது. அல்லது சமுதாயம் பெண்ணின் மீது திணித்துள்ள பொதி எனவும் கொள்ளலாம். வைதேகி காத்திருந்தாள் என்று பெயரிட்டேன். அப்போது தினமணியில் சிறுகதை போட்டி அறிவிப்பு வந்திருந்தது. நடந்த ஆண்டு 2012. நெய்வேலி புத்தகக்கண்காட்சியும் தினமணி நாளிதழும் இணைந்து நடத்தும் போட்டி அது. இக்கதையை அந்த போட்டிக்கு அனுப்பி வைத்தேன். இரண்டாவது பரிசு கிடைத்தது. என் முதல் கதையே பரிசு பெற்றது ஒரு நிறைவு என்றால் பரிசு பெறும் நிகழ்வு என் பிறந்த ஊரான நெய்வேலியில் நடைப்பெற்றது மற்றுமொரு நிறைவு.

Saturday 9 September 2017

எதற்காக எழுதுகிறேன்..

பதாகை இணையஇதழில் ஜுன் 2016 வெளியான கட்டுரை..

எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்.  பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

பெண் எனப்படுபவள் யாரெனில்..

பேசும்புதியசக்தி மார்ச் 2017ல் வெளியானக் கட்டுரை

சமீபகாலமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினம் எங்கள் அலுவலகத்திலும் கொண்டாடப்படுகிறது.. அதே விமரிசையோடு.. அதன் அத்தனை அசட்டுத்தனங்களோடும் கூட.. அன்றைய நாள் முழுக்கவும் கும்மாளமும் குதுாகலமும்தான். ஆண்களுக்கு அங்கு முற்றுமுழுக்க தடா. ஒரே விதமான ஆடை.. (பெண்கள் தினம் செவ்வாய்.. வெள்ளி கிழமைகளில் வந்து விட்டால்.. ‘செவ்வா..வெள்ளி உடுத்தற புடவைல கொஞ்சமாச்சும் சரிகை இருக்கணும்..’)அணிகலன்கள்.. உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மதிய உணவு.. போதாக்குறைக்கு போட்டிகள்.. பேட்டிகள் என்றெல்லாம் களைக்கட்டும். உயர் பெண் அலுவலர்கள் தாங்கள் இந்நிலையை அடைவதற்கு காரணமாக இருந்த தகப்பனைக்கும் இன்று குழந்தை பராமரிப்பு.. குடும்ப பராமரிப்பில் அனுசரிப்பாக இருக்கும் கணவனுக்கும் கண்ணோரம் நீர் கோர்க்க தழுதழுப்பான குரலில் நன்றி தெரிவிப்பார்கள். இந்நேரத்தில் பிரச்சனைக்குரிய அலுவலக கோப்புகளை நீட்டினால் உடன் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. யாரும் இதுவரை முயன்றதாக தெரியவில்லை. சென்ற ஆண்டும் கோலப்போட்டி.. பாட்டுப் போட்டி.. நடனம் என களைக் கட்டியது எங்கள் மினி அரங்கம். அதில் ஒப்பனை போட்டி என்றொரு போட்டி.. அதுதான் பெண்மையின் அதிஉச்சம் என சொல்லலாம். இதில் கலந்துக் கொண்ட பெண் அலுவலர்களுக்கு தனித்தனியே ஒப்பனைப் பெட்டி கொடுக்கப்பட, ஒப்பனை செய்து கொள்ள பெண் அலுவலர்கள் உற்சாகமாக முன் வந்தனர். அரை மணி அனுமதிக்கப்படும் அதற்குள் முகம் மற்றும் தலை அலங்காரம் செய்து விடுவதுதான் போட்டி. கோலப்போட்டியின் கலர் பொடிகள் ரங்கோலியாக  முகத்தில் படிந்ததை மேக்கப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று ஜட்ஜம்மா சொன்னது தனிக்கதை. மருந்துக்கும் இலக்கியம்.. வாசிப்பு என்ற தளங்களுக்கு யாரும் நகரவில்லை என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஒருவேளை கொண்டாட்ட மனப்போக்குக்குள் சிந்தனையான விஷயங்களை அனுமதிக்க வேண்டாம் என்று நேர்மறையாகயும் எண்ணிக் கொள்ளலாம்.

Wednesday 6 September 2017

கட்டுக்கழுத்தியம்மா

உயிரெழுத்து செப்டம்பர் 2017 இதழில் வெளியானது.



பூசாரி தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பூசை சாமான் அடங்கிய பொட்டலங்களை ஒவ்வொன்றாக பிரித்தார். அடுக்கியிருந்த தொன்னைகளை வெளியே எடுத்து தனிதனியாக பரப்பி வைத்தார். விபூதி பொட்டலத்தைப் பிரித்து தொன்னையில் கொட்டிய போது அவர் வாய் தாமாகவே முணுமுணுத்துக் கொண்டது.
ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ
ஓம் ஸ்ரீ குல தேவதாய நமஹ
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதாய நமஹ
ஓம் ஸ்ரீ அதிஷ்ட தேவதாய நமஹ