எனது நிலம் என்பது எது? சொந்த நிலமென்று எதை சொல்வது? பூர்வீகம் என்று எங்கோ ஒன்றிருப்பதையா? சூழ்நிலையின் பொருட்டு தாயாரின் பிறந்த வீட்டிலோ தந்தையாரின் ஊரிலோ பிறந்து விடுவதையா? வளரும் சூழலில் வேலைநிமித்தமோ வேறு எந்த நிமித்தமோ குடியேறி கொள்ளும் இடத்தையா? திருமணமாகி சென்று சேரும் ஊரையா? அவரவர் வாங்கும் திறனுக்கேற்ப கிடைக்கும் யாரோ ஒருவரின் முன்னாள் வயற்காடு அல்லது ஏதோ ஒரு ஊரின் முன்னாள் சுடுகாடு அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நீர்நிலை அல்லது ஏமாற்றி தலையில் சுமத்தப்பட்ட அரசாங்க புறம்போக்கு என்றிருக்கும் பூமியில் வீடு கட்டிக்கொண்டு காலம் முழுதும் கடனை சுமக்க வைக்கும் தற்போதைய வாழ்விடத்தையா? எதை நமது நிலமென்பது? உடைமை கொண்டதெல்லாம் பிடித்தமானதாகி விடப்போவதில்லை. உரிமை இல்லாததன் மீது பிரியம் வராது என்பதை சொல்வதற்குமில்லை.