“குறி“ மே-ஜுன் 2018 சிற்றிதழில் வெளியான சிறுகதை
இடைப்பட்ட
ஐந்து வருடம் என்பது நீண்ட நெடுங்காலமல்ல என்னைப் பொறுத்தவரை. ஆனால் இம்முறை எனக்கு
ஆர்வமிருந்தது. ஒருவேளை பணத்தால் ஆகும் பயனெல்லாம் ஓரளவு அனுபவித்த பிறகு ஏற்படும்
சலிப்பான மனநிலைக்கு இதை ஒரு மாற்றாகக் கருதியிருக்கலாம். அதோடு கோவிந்தின் புலம்பல்
வேறு. என்ன சொன்னாலும் அவர்களின் தலை ஆமோதிப்பாகவே அசைகிறதாம்.
இதைக்
கேட்பதற்கு உங்களுக்குப் புதுமையாக இருக்கலாம். நானும் அப்படித்தான் முதலில் உணர்ந்தேன்.
இப்படி ஒரு கிராமத்தை நான் பார்த்ததேயில்லை என்றேன். இத்தனைக்கும் பள்ளி நாட்களில்
எனக்கு நன்கு அறிமுகமான கிராமம்தான் அது. கோவிந்த் என் இளமைக்கால வகுப்புத் தோழன்.
என் அப்பாவின் பணி, பிறகு என் அயல்நாட்டு பணி இவையெல்லாம் என்னை அவனிடமிருந்து முற்றிலும்
பிரித்து விட, ஐந்து வருடங்களுக்கு முன் ஒருவழியாக நாங்கள் ஒருவரையொருவர் மீட்டுக்கொண்டோம்.
மீட்டுக்கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியப்
பயணங்கள் சம்பிரதாயமாக மாறிக்கொண்டிருந்த நேரமது. சிறுவயதுத் தோழமை பயமறியாத ஆர்வத்துடனும்,
கொச்சையான கோபதாபத்துடனும் ஆர்ப்பாட்டமான எதிர்பார்ப்பு அல்லது எதிர்பார்ப்பற்று கட்டமைக்கப்படுவதால்
யாதார்த்தம் தொலையும் வயதுகளில் பால்ய தோழமை மீதிருக்கும் பிரேமை கூடி விடுகிறது. அதுவே பயணத்திற்கு ஒருவித ஈர்ப்பை கொடுத்தது. இரண்டு
முழு நாட்களை அவனுடன் ஒதுக்கிக் கொண்டேன். அவனும் ஏமாற்றவில்லை. இரு பிள்ளைகளுக்குத்
தகப்பனாக, கிராமப் பஞ்சாயத்தின் தலைவனாக, தாட்டியமான ஆகிருதியுடன் வாய் நிறையப் பல்லாக
என்னை கட்டிக் கொண்டான். அவனின் மனைவியும் வாய் நிறைய வரவேற்றார். கணவனைப் போலவே அவரும்
நீள அகலங்கள் நிறைந்தவராக இருந்தார். குனிந்தால் நிமிரவெல்லாம் முடியாது. இருவருக்கும்
நிறைய அன்னியோன்யம் இருந்தது. மனைவியைக் கேட்காமல் அவன் தும்மக் கூட விரும்ப மாட்டான்
என்று தோன்றியது.