கணையாழி இதழில் வெளியானது.. இலக்கிய சிந்தனை அமைப்பு தேர்ந்தெடுத்த 2016ன் பனிரெண்டு சிறுகதைகளுள் ஒன்று.
“அய்யோ.. அம்மா..“ வரலட்சுமியின்
வாயிலிருந்து விட்டு விட்டு முனகல்கள் வந்துக் கொண்டிருந்தன. அதுவும் வெகு ஈனமான ஸ்வரத்தில்.
அண்ணியின் மடியில் தலை சாய்த்து துவண்டுக் கிடந்தாள் வரலட்சுமி. நேற்றிலிருந்து சாப்பிடாத
பசி மயக்கமும் அதில் கலந்திருந்தது. வெயிலின் தகிப்பை மரத்தின் நிழல் சற்று போக்கிக்
கொண்டிருந்தது.
கணவன்
வீட்டு பூர்வீக நிலம் அது. இரண்டு ஏக்கர் பூமி. “நஞ்ச காடு ரெண்டு ஏக்கரு தேறும்..
ஒத்தப் பயதேன்.. பங்கு பாவனக்கு ஆளு கெடையாது.. வெள்ளாமகாரங்களுக்கு பவுனுதான் சொத்து..
முன்னபின்ன பாக்காம செஞ்சுப்புட்டீவன்னா காலத்துக்கும் ஓஞ்சுக் கெடக்கலாம்..“ அவளை
பேசி முடிக்கும் அன்று நாச்சிமுத்துவின் தாய்மாமன் இப்படிதான் பேசினார்.
”எ லெச்சுமி..
இத்த குடிடீ.. இந்தாடீ.. ஏய்..” மடியில் சரிந்துக் கிடந்த நாத்தியை எழுப்பினாள் அண்ணி.
நேரம் மதியம் இரண்டை தொட்டிருந்தாலும் வெயிலின் உக்ரம் இன்னும் குறையவில்லை. “அய்யோ..
எம் மவன்..” அழுது அழுது சரிந்துக் கிடந்தவளை இப்போதுதான் மாமரத்தின் நிழலில் கைத்தாங்கலாக
அழைத்து வந்து கிடத்தியிருந்தாள். ஊண்சத்து அத்தனையும் வடிந்தவள் போலக் கிடந்தாள் வரலட்சுமி.
கலைந்துக் கிடந்த சேலை கரிய வயிற்றை அப்பட்டமாகக் காட்டியது. ஒட்டி உலர்ந்த மார்பு
வெறும் துணிக் குவியலாக தெரிந்தது. முழங்காலுக்கு ஏறிக் கிடந்த பாவாடையில் பிசிறலாக
நுால் பிரிந்துத் தொங்கியது. கரிய உடலில் மண் படிந்து கிடக்க துறுத்திக் கிடந்த சிறு
கற்கள் உடலில் உறுத்துவது சிந்தையில் படியாமல் கிடந்தாள் வரலட்சுமி. ஏழிலும் ஐந்திலுமாக
இருந்த மகள்கள் அவளின் கால் மாட்டில் ஒண்டிக் கிடந்தனர்.