Search This Blog

Saturday, 25 April 2026

சுழற்சி

 

புனிதவதியின் ஒட்டி வெதும்பிய தேகம் கடற்காற்றில் அடித்துச் செல்லாதவாறு நீரில் நனைந்த மணற்பரப்பு அவள் கால்களை பிடித்து நிறுத்தியிருந்தது.  கோடொன்றை வரைந்து அதனை நிமிர்ந்தியது போன்றும் ஒற்றை பனைமரம் போன்றும் நின்றிருந்த அவளை கடல் எட்டிப் பிடிக்க முயல, அவளோ அதனிடம் எதையோ பேசும் முனைப்போடும் அதேசமயம் அணுகவொட்டாத இயல்போடும் கைகளை கட்டியப்படி நின்றிருந்தாள். அவளுடைய உலர்ந்த முகத்தில் கீற்றுப் போல புன்னகை ஒட்டியிருந்தது. அறியும் ஆர்வம் மேலிட முன்னேறி வந்த கடல் பேசாமடந்தையென நின்றிருந்தவளைக் கண்டு பொறுமையிழந்து சீறியது. இன்னும் சிறிது நேரத்தில் ஆதவன் வேறு அழையாவிருந்தாளியென ஒளிந்துக்கொள்ள வந்து விடுவான். அவள் படபடக்கும் கடலை இரசித்தவளாக நின்றிருந்தாள்.

புனிதவதியின் பிறந்த ஊரான காரைவனத்திலும் இதே கடல்தான். ஆனால் அது பரபரப்புகளால் சூழப்பட்டிருக்கும் கடல். அதன் கரையையொட்டி துறைமுகமும் அதனை மையப்படுத்திய ஏற்றுமதி இறக்குமதி வணிகமுமாக கடற்கரை சாலை எந்நேரமும் அதகளப்பட்டுக் கொண்டிருக்கும். தவிரவும், வெளியூர் வியாபாரிகளுக்கான தங்கும் விடுதிகளும் கடைகளும் மைதானத்திலிருக்கும் குதிரை இலாயங்களும் கரையையொட்டி அமைந்த மீனவக்குடியிருப்புகளும் நெரிசலை கூட்டி விடும். அதற்கு தொடர்பற்றன போன்றிருக்கும் உள்வீதிகள் வணிகர்களின் மாளிகைகளாலும் மாளிகைகள் செல்வத்தாலும் சிவபூசைகளாலும் நிரம்பியிருக்கும். அதிகாலையிலும் அந்திமாலையிலும் கோயில்கள், வீடுகள் எனவெங்கிலும் சிவமந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கி விடும். அம்மாளிகைகளில் ஒன்றில்தான் புனிதவதி பிறந்து வளர்ந்திருந்தாள். உயரமும் எடையும் ஒருங்கமைந்த அவளுடைய  மாந்தளிர் வண்ண மேனியில் செய்து வைத்தன போன்றிருந்தன முகஅவயங்கள். செல்வத்திலும் இளமையிலும் செழித்திருந்தது தேகம். அவள் பெருவியாபாரியும் பெருந்தனக்காரருமான தனதத்தனின் ஒற்றை வாரிசு. அவருக்கு உள்ளுரோடு வெளியூரிலும் வணிகமிருக்க, அதன் பொருட்டு அவர் வெளியூரில் தங்கி விட நேரிடும்போது தாயார் தர்மவதிதான் உள்ளுர் வணிகத்தை கவனித்துக் கொள்வார்.  

காரைவனத்தில் தன் மாளிகையின் மேல்மாடத்தில் அமர்ந்திருந்த அவளை கடல்தான் முதலில் நட்புக்கரம் நீட்டி அழைத்தது. வழக்கம்போல கடற்கரைச் சாலையில் உற்சாக கூச்சலோடு விளையாடும் சிறுவர்களை அவள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கடல் அவளை நோக்கி ஒலியெழுப்பியது. அவளுடைய கவனத்தைக் கவர அலைகளால் நடனமிட்டுக் காட்டியது. அவளும் பதிலுக்கு தாயார்களின் இடுப்பிலும் முதுகிலும் அப்பிக் கிடக்கும் குழந்தைகளையும் ஒரு கையால் குழந்தைகளை அணைத்தப்படி மறுகையால் கரை மணலில் மீன்களைப் பரத்தும் பெண்களையும் அந்தி நேரங்களில் தம் மகவுகளை தோள்களில் வழிய விட்டு மகிழ்விக்கும் தந்தையர்களையும் பெற்றோர்களுடன் ஒட்டிக் கொண்டு வந்து விடும் உமணக்குழந்தைகளையும் அதனிடம் காட்டுவாள். காலவோட்டத்தில் நட்பு இறுகியது. அவள் தன் தனிமையை பகிர்ந்துக் கொண்டாள். பெற்றோருக்கு அவள் வரம் என்றாலும் தவம் என்பது வரம் பெறும் வரை மட்டுமே மேற்கொள்ளப்படுவது. பேரலைச்சலுக்கு பிறகு கிடைத்த பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனன் என்றாவது உபயோகித்திருப்பானா?

”மனிதர்கள் சுயநலமானவர்கள்” என்றது கடல். பிறகு சுதாரித்துக் கொண்டு நீ விதிவிலக்கானவள் என்று சரணடைந்தது. அவள் அதை கண்டுக்கொள்ளாதவள் போல காட்டிக் கொண்டு, “சரி சொல்லு” என்றாள். என்னுள்ளிருந்து அள்ளியெடுத்த மீன்களை என்னை வடித்தெடுத்து பிரித்த உப்பைக் கொண்டு பக்குவப்படுத்தி நான் நடமாடும் கரையில் உலர்த்தும் அவர்களை என்னவென்று அழைப்பது என்றது. அது அவர்களின் வாழ்க்கையல்லவா? என்றாள். இப்போது அவள் சிறுமி அல்ல.

அப்படியானால் என்னுடைய வாழ்வு எது? அதன் அர்த்தம் என்ன? காலங்காலமாக நான் பயணித்துக் கொண்டிருப்பதன் நோக்கமென்ன? படபடத்த கடலுக்கு அவளால் பதில் சொல்ல இயலவில்லை. “தோழியே… நான் என்பது எது? நீரா? நீரின் தொகையா? முழுமையை கடந்து எழும் வெளியா? பருவடிவுக்குள் அடங்கவியலா ஆற்றலா? நாவாய்கள் செல்லும் என் நடுவுடலின் தத்தளிப்பா? நிலம் நோக்கி ஓடி வரும் பெருங்காதலா? ஆவேசமாக நிலத்தை அறையும் பெருங்கோபமா? வளத்தை அள்ளிக் குவிக்கும் பெருங்கருணையா? பகல் முழுதும் உழைத்த களைப்பில் அக்னி வடிய என்னை நோக்கி வரும் ஆதவக்குழந்தையை அள்ளிக் கொள்ளும் வாஞ்சையா? ராட்சசமென பொங்கியெழும் பேரழிவா? எது என் முகம்? எவை என் விழைவு? பேரிரைச்சல்தான் என் சொற்களா? அல்லது அவை ஏதுமற்று நீளும் வாழ்வின் வெறுமையில் எழும் அழுகையின் ஓலமா? ஏமாற்றத்தின் கூச்சலா? அலைகளெனும் நாவை சுழற்றி வானெனும் மேலன்னத்தை தொட முயன்று தோற்று சொற்களற்று தொய்ந்து கரையில் விழுவதுதான் என் வாழ்வா?”

அன்று தனது கேள்விகளுக்கு விடையென பகர ஏதுமற்ற தவிப்பில் நின்றிருந்தவள் இன்று வார்த்தைகள் ததும்பி கிடந்தபோதும் ஏதும் கூறாது நிற்கிறாள். கோபம் கொண்ட கடல் தோழியிடம் உறுமியது. “ம்ம்… உன்னைதான் இத்தனை நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கிடந்தேன். உன் வரவை கண்டு மகிழ்ந்துப் போனேன். ஆனால் நீயோ எதுவும் பேசாது ஏன் இப்படி மௌனம் காக்கிறாய்?” உறுமலாக தொடங்கி கெஞ்சலாக முடிந்தது அதன் வார்த்தைகள். அவள் எதையும் கேளாதவளாக தன்னுள்ளிருந்து திரண்டெழுந்து தன் மீதே விழும் அதன் அலைக்கரங்களை நொடியும் இமைக்காது நோக்கிக் கொண்டிருந்தாள். எழுவதும், மீள்வதும்.. மீள்வதும் எழுவதும்… எந்த நீர் முந்தையது… எது பிந்தையது… நண்பனே… நீ நீராலான பெருஞ்சுழியம். அவன் ஆடுவது அனல் தாண்டவமெனில் நீ ஆடுவது புனல் தாண்டவம்.

கடல் தணிந்தது. “வா.. என்னருகே வா புனிதா…”

கணவன் பரமதத்தன் கூட அவளை அப்படிதான் பிரியமாக அழைப்பான். புனிதவதியின் பெற்றோர்கள் தங்கள் ஒற்றை மகளை பிரிய மனமில்லாது திருமணத்துக்கு பிறகு மகளோடு மருமகனையும் காரைவனத்துக்கு அழைத்து வைத்துக் கொண்டனர். அப்போது அவள் உலகமே நறுமணங்களால் சூழப்பட்டிருந்தது. அவள் அதனை அன்பெனும் துாரிகையால் தொட்டு தொட்டு வரைய, அது அவளும் கணவனுமென்றாகியது. ஆசையாக அழைத்த அவனே ஒருநாள், புனிதவதி… உன் உயரம் என்னை உன்னிடமிருந்து விலக்குகிறது என்று கூறும் வரை அவள் அப்படிதான் எண்ணிக் கொண்டாள்.. அடுத்தடுத்து அவளை தெய்வமென்றான். தான் பக்தனென்றான். தான் சாதாரணன் என்றான். அவளை அசாதாரணமாக்கினான். அவளுயரம் தான் எட்டமுடியா மலை முடி என்றான்.  அவளுடன் ஒன்றிணைந்து வாழும் தகுதி தனக்கில்லை என்று விலகியபோது அவள் பாரம் தாங்காது ஒடிந்து சாய்ந்தாள்.

அன்று தன்னிடம் கதறியோடி வந்தவளை நெகிழ்ச்சியாக வருடிக் கொடுத்தது கடல். கண்ணீரும் கடல் நீரும் கலந்தன. இருவரும் சொல்லிக் கொண்டனர். நம்முள்ளத்தின் ஓசைகளையும் வார்த்தைகளின் மௌனத்தையும் எனக்கு நீயும் உனக்கு நானும் சொல்லிக் கொள்வோம். கேட்டுக் கொள்வோம். வா… மென்மையாக அணைத்துக் கொண்டனர்.

ஆனால் ஒப்பந்தத்தை முதலில் மீறியது கடல்தான். அதுதான் முதலில் அவளிடம் மௌனம் காத்தது. ஓசையற்ற அலைகள் எங்ஙனம் சாத்தியம்?  அவள் புறஒலிகளை இரத்து செய்து விட்டு காதுகளைக் கூர்ந்தாள். அய்யோ… என்னதிது? என்னவாயிற்று உனக்கு? குரலற்றுப் போனதா உன் சொற்களுக்கு? நண்பனே… என்ன வேண்டும் சொல். உனக்கென்ன வேண்டும்? எனக்கென்ன வேண்டும்? நமக்கென்ன வேண்டும்… சொல்… அய்யோ… என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லையே. அவள் கண்களில் நீர் வழிந்தது. அலைகளின் நாவுகள் ஒன்றின் பின் ஒன்றாக கரையை மோதி ஒலிகளற்று பின்னகர்வதை அவள் இதுவரைக் கண்டதில்லை. பதற்றத்தோடு மாளிகையின் மாடத்திலிருந்து கீழிறங்கி ஓடினாள்.

சாலைக்கு அவளை கவனிப்பதை விட வேலைகள் பல இருந்தன. வணிகர்கள், கடைகள், பண்டங்கள், பேரங்கள், மது, புலால், பூசல் என அவரவர்க்கு ஆயிரம் அலுவல்கள். கரையோரங்களில் பண்டங்கள் ஏற்றி வந்த நாவாய்கள் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தன. பண்டகச்சாலைப் பணியாளர்கள் பண்டங்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக மும்மரித்திருந்தனர். பண்டமேற்றி செல்லும் நாவாய்கள் மதுவருந்தி மயங்குவனபோல் நீரின் ஓட்டத்தில் தள்ளாடிக் கொண்டே சென்றன. அவள் கரையெங்கும் அலைந்தாள், திரிந்தாள். அலையோசை எங்கேனும் கேட்கிறதா? என் நண்பனே… ஏன் இத்தனை தவிப்புக் கொள்கிறாய்? எதற்காக குரலற்று கொந்தளிக்கிறாய்? ஏன் பேச மறுக்கிறாய்? உன் ஒலி எங்கே போனது? என் தவிப்பறியாது விளையாடுகிறாயா? நான் என்ன செய்வேன்?

உமணர்களின் வண்டிகள் கடற்கரை மணலை அறுத்துக் கொண்டு முன்னோக்கி வர அவள் அனிச்சையாக நகர்ந்துக் கொண்டாள். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மந்தியொன்று, உமணக்குழந்தையின் கையிலிருந்த கிலுகிலுப்பையை பிடுங்கிக் கொண்டு ஆட்ட, குழந்தை சத்தமின்றி அலற, உமட்டி அதன் தோளில் தட்டி சமாதானப்படுத்த… முற்றிலும் ஒலிகளற்ற செயல்கள்.  ஓசைகளற்ற உலகு.

தொய்ந்து தளர்ந்து அமர்ந்தவளின் மனம் தன்னுள் சிதறிக் கிடந்த வார்த்தைகளை ஒருங்குக் கூட்டியது.

சிவம்… சிவம்… சிவம்….

வண்ணங்கற்ற அவளது இருண்ட உலகில் செம்மையென ஊடுருவியது அவ்வொளிக்கீற்று. அவள் கருக்குழந்தையென அதில் அமர்ந்துக் கொண்டாள். 

“அவன் சிவன்… அப்பன்…” மகள் பினாத்தியபோது தர்மவதிக்குக் கோபம் வந்தது. 

“அம்மா… உத்தமராய் வாழ்ந்தவர் கூட உலர்ந்து விழுந்து இறந்தால் உடலைக் கிடத்தி உறவினர்கள் கூடி பட்டமரம் அடுக்கித் தீயிட்டுக் கொளுத்தி விடுவர். வாழ்வு முடிந்து பிடி சாம்பலுக்குள் அடங்கும் முன் அவன் புகழை பாடவும் கேட்கவும் வேண்டும். உண்ணும் உணவும் அவனே… உடுக்கும் உடையும் அவனே. சுடலையும் அவன் வீடே.. பிணமெறித்த சாம்பலும் திருநீரே… அவனின்றி அடைக்கலம் வேறேது?” 

“புனிதவதி... இப்படியே பேசிதான் இருக்கும் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு விட்டாய்” 

அம்மா… என்னை பற்றி நீயே அறியாததை என் கணவர் அறிந்திருந்தார்” 

“இல்லை புனிதா... அவர் உன்னை பித்தி என்று எண்ணி கொண்டு விட்டார். வணிகர்களால் வீட்டலுவல்களுக்கு நேரமொதுக்க முடியாது. நீ சிவனையே நினைத்துக் கொண்டிருந்தால் அவரை யார் கவனித்துக் கொள்வது? வீட்டலுவல்களை யார் பார்ப்பது? அதனால்தான் உன்னை நீங்கி பாண்டிய நாட்டுக்கு சென்று விட்டார்” தர்மவதியின் குரல் அழுகையில் கட்டிக் கொண்டது. 

“சிவனை வணங்குவள் பித்தியா அம்மா?” 

“அவனே பித்தன்தானே?” என்றவர் ”பித்தனோ… சி்த்தனோ? அவன் ஏன் இப்படி உன் வாழ்க்கையில் விளையாடி விட்டு சென்றான்? எங்கள் ஒற்றை மகளின் வாழ்க்கை இப்படிதானா முடிய வேண்டும்? மகளே… பாண்டிய நாட்டுக்கு சென்றிருக்கும் உன் அப்பா அங்கே உன் கணவனைக் கண்டு உன்னை வாழ வைக்குமாறு இறைஞ்சுவதாக கூறினார்” என்றார் வருத்தத்தோடு. 

அவள் ஆச்சர்யமாக பார்த்தாள். “ஏன் அம்மா? அவர் மறுமணம் செய்து மகவொன்றை ஈந்து அதற்கு புனிதவதி என்று என் பெயரை வைத்து மறுவாழ்க்கைக்குள் நுழைந்து விட்டதை நாம் நேரிலேயே சென்று பார்த்து விட்டு வந்த பிறகும் மீண்டும் ஏன் தந்தை அவரிடம் செல்ல வேண்டும்?”

“ஆண்களுக்கு தாரம் பலவென்றிருப்பது இயல்புதானே பெண்ணே. இளமையும் அதுவளிக்கும் யௌவனமும் மலர்வனம் போல் உன் மேனியில் பூத்துக் குலுங்குவதற்கு என்னடி அர்த்தமிருக்க முடியும்? மலர்கள் மகரந்தம் கொள்வது வண்டணையதானே?” 

“நான் என்னிடமிருப்பதை அழகென்று உணரவில்லை அம்மா” 

“ஆனால் உலகத்தின் கண்கள் வேறல்லவா புனிதவதி?” 

ஆம். உணர்கிறேன் அம்மா. மனதோடு கூறிக் கொண்டாள் புனிதவதி. உருகிய உள்ளத்தை அதன் வழியே ஓட விட்டாள். மூவேளை உணவு தவிர்த்து ஒருவேளையாக்கி அதிலும் ருசி மறுத்தாள். சத்தான உணவு உண்டாக்கிய செழுமை ஒவ்வொன்றாக அவளுடலிலிருந்து நீங்கி மேனி கறுத்து கன்னம் வற்றி பற்கள் வெளிப்புறம் நீண்டு கண்கள் குழிகளுக்குள் இறங்கி பராமரிப்பற்ற முடி உதிர்ந்து வயதான தோற்றம் கொண்டபோது தர்மவதியின் பெற்ற வயிறு அதிர்ந்துப் போனது. 

“மகளே… இது என்ன கோலமடி? நாங்கள் உயிரோடு பிணமாகி விட்டோம் மகளே. உறவினர்களெல்லாம் உன்னைப் பற்றி யாது சொல்கின்றனர் என்று நீ அறிகிலியோ?“ 

“அறிவேன் அம்மா. நானேதான் ஆடியில் என்னை நோக்கிக் கொள்கிறேனே… என் தோற்றத்தை பேய் என்று அவர்கள் வர்ணிக்கிறார்கள். அதற்காக நான் வருந்தவில்லை அம்மா. என் கணவனுக்காக இருத்தி வைத்த இவ்வுடல் அவர் நீங்கியதும் சதைகளற்று எலும்பென்றாவதில் தவறென்ன உள்ளது? என்னப்பன் ஈசனும் எலும்பை மாலையாக அணிந்த பேய்க்கோலம் கொண்டவன்தானே?” 

பெற்றோரின் கண்ணீருக்கு முன் வாதிட வழியற்று அவள் நண்பனை நாடி வந்தாள். தன்னை ஆட்கொண்டவனை காண வேண்டி பயணம் கிளம்புவதாக சொன்னாள். “தோழியே… நானெருவன் இங்கிருப்பதை மறந்து விட்டாயா?” தழுதழுத்தது அதன் குரல். “நீயின்றி நான் மட்டும் எப்படி இங்கு…?” அதன் வார்த்தைகள் கண்ணீரில் சிக்கி தத்தளித்தன. 

”மீளும் வழியறிந்து வருவேன். காத்திரு, அதுவரை பொறுத்திரு” 

“என் பொறுமை வழிந்தோடினால்…” 

“நம் நட்பு அர்த்தமற்றதாகி விடும். நம்பிக்கையே நட்பின் வேர்” 

அவள் திரும்பிப் பாராது நடந்தாள். வழியில் மற்ற சமயங்களும் மந்திரங்களும் அதன் தந்திரங்களும்  குறுக்கிட்டன. 

“ஹா… யோகியாம்… யோகி… உங்கள் ஈசன் எங்களின் உள்ளொளியின் முன் நிற்கவியலாது சுடலையின் இருளுக்குள் உறைந்துக் கிடக்கிறான். அவனை போய் யோகி என்கிறீர்கள்” அந்த புத்தபிட்சு மழித்த தலையிலிருந்து விலகிய காவியுடுப்பை இழுத்து விட்டுக் கொண்டு அவளை ஏளனமாக நோக்கினார். 

“இருள் நிறைந்த மெய்மையின் பாதையில் திசைச் சுடரென வழிகாட்டும் சிவத்தை விட சிறந்த யோகி எவரென கூறுங்கள்” பிட்சுவை ஏறிட்ட அவளின் கருத்த நுதலில் சுடலைப்பொடி பளீரிட்டது. 

“எங்களின் துாய்மை நெறிக் கண்டு அச்சம் கொள்ளும் மனதை வீண் சாமாதானங்கள் சொல்லி ஏமாற்றாதே பெண்ணே… அவன் யோகியல்ல… பித்தன். பிறையை எடுத்து தலையில் சூடிக் கொள்பவன். இடுகாட்டு சாம்பலை உடலில் பூசிக் கொள்பவன். இவனிடம் எந்த மெய்மையைக் காண ஓடோடுகிறாய்” 

“எண்ணங்களால் மட்டுமே அறியப்படும் ஆழுள்ளத்தின் இருளுக்குள் நம்மை வழிகாட்ட எழும் தன்னுணர்வே அப்பிறைநிலவு என்பதை நீவீர் அறிய மாட்டீர். ஆ… இறைவனின் திருமார்பில் அணியப்பெற்ற பன்றி கொம்பையும் அவன் தலையில் சூடியிருக்கும் பிறை நிலவையும் வேறுப்படுத்தி அறிய இயலுமா அவன் நெஞ்சில் அணியென நெளியும் அரவத்துக்கு? 

“நிறுத்து உன் வாதத்தை. பிச்சையெடுத்துண்ணும் பேரெத்தனுக்கு வக்காலத்து வேறு” பின்னால் எழுந்த ஓசைக்கு செவிக்கொடுத்தாள். ”ஓ… சமணமுனியோ. சித்தனை எதிர்ப்பதிலாவது நீங்கள் இருவரும் சேர்ந்துக் கொள்கிறீர்களே… அவ்வகையில் மகிழ்ச்சி” என்றவள் மெதுவாக உதடு பிரித்து “நீவீர் செய்வதும் அதைதானே?” என்றாள். 

”ஆனால் ஏமாற்று வேலைகள் எங்களிடமில்லை” 

“இதோ… பெருங்கடலின் நீர் முழுவதையும் கொட்டி நிரப்பினாலும் நிரம்பாத கபாலமான தன் பலிபாத்திரத்தை தாருக வனத்தில் முனிபத்தினியர் தம்முணர்விழந்து இட்ட சிறு பிச்சையால் நிறைத்துக் கொண்ட அவன் பேரன்பாளனா, பேரெத்தனா?” என்று பதில் வாதம் வைத்தபோதுதான் வாய் வார்த்தைகள் நேரத்தை செலவாக்கும் வீண் வேலைகள் என்றுணர்ந்தாள். 

என் அப்பனே… உன்னை பழிப்போர் மத்தியில் என்னை வாழும்படி செய்து விட்டாய். நான் அலைக்கழிகிறேன். அமைதியற்றிருக்கிறேன். நிறைவின்மை எனும் பீடத்தின் உச்சமேறி நின்று மிச்சமென இருக்கும் என்னை சொச்சமின்றி உண்டு கொண்டிருக்கிறேன். எந்தையேஎன்னை மீட்டு உன்னடி சேர்த்துக் கொண்டு விடு” தடுமாறிய மனத்தை அள்ளித் திரட்டிக் கொண்டு கால்கள் ஒடிந்து விடுமளவுக்கு நடந்தாள். நதிகளும் மலைகளும் குன்றுகளும் சமவெளிகளும் பின்நகர்ந்தன. எங்கோ அவள் நண்பனின் சுவாசம். ஏக்கம் கொண்ட மனதோடு நின்றாள். குறுக்கிட்டது நண்பன்தான். அவனை அள்ளியெடுத்தபோது அது அழுகையென வழிந்தது. அவள் பதைக்க “சென்று வா பெண்ணே… காத்திருக்கிறேன். நீ மீள்வதும் என் மீட்சிக்கே” என்றது தோழமை. 

“அன்றைய நாளுக்கு பிறகு இன்றுதான் உன்னை காண்கிறேன்” அவள் பேசத் தொடங்கினாள். கடல் குழந்தையென வந்து ஒட்டிக் கொண்டது. 

மனம் தவிக்க கால்கள் இழுக்க… கால்கள் இழுக்க மனம் தவிக்க… இலக்கெது? வாழ்வெது? வாழ்வெது? இலக்கெது? விண்ணெது? மண்ணெது? கடலெது? மலையெது? தடுமாறிக் கொண்டே நடந்து வருபவளின் எதிரே வருபவன் அவனா? அவன்தானா எதிரில் வருபவன்? கங்கையை சடையிலும் திருக்கரத்தில் அனலையும் ஏந்தி இறுகக்கட்டிய ஆடையுடன் எரிவீசி நடனமாடும் ஒளிப்பொருந்திய நுதலையுடைய நமச்சிவாயனா என் எதிரில் நிற்பவன்? ஆம். அவனேதான் நின்றிருந்தான். அசையா விழிகளுடனும் திறக்கா அதரங்களுடனும் அவன் அவளை கருணைப் பொங்க நோக்கினான். ஆதியாய் நடுவாய் அளவிலாஅளவுமாகி சோதியாய் சுடராய் உணர்வுகளின் உணர்வுமாகி ஏகமாய் அநேகமாய் ஏகாதிபத்தியனாகி ஆணாகி பெண்ணாகி அனைத்துமாகி ஞானமாகி கருணையாகிய பேருரு கொண்ட என் தெய்வமே நீயா இது? ஐயனே... அப்பனே... நான் யாது செய்ய வேண்டும். சொல்க.“ மெய் கூப்பி நின்றாள். 

செல்க. விரைக… நாடு, ஊர், வீடு, தந்தை, தாய்… அனைத்தினின்றும் பிடுங்கி வீசும் பெருவல்லமை கொண்ட உள்ளத்தின் விசைக்கு உன்னை அங்ஙனமே ஒப்பளித்திடுக. ஆதவன் தன் கதிர்களை அள்ளியெடுத்து தன்னிடமே வைத்துக் கொள்ள முடியாது. மரம் அதன் கனிகளை தானே ஏந்திக் கொண்டிருக்காது. உதிர்த்த சொல் நாவுக்குச் சொந்தமில்லை. நீ உன்னுடையவள் அல்ல. உடலென்பது உள்ளம் தொடவியலா ஆழத்தையும் அதன் முழுமையையும் கண்டறிய புலன்கள் சூடி அமர்ந்திருக்கும் சாதனம் மட்டுமே. மலர் மணத்தை விலக்கிவிடின் அதன் பெயரென்ன? கதிரவன் ஒளியை விலக்கிவிடின் அதன் நிலை என்ன? 

ஒரு காலெடுக்கையில் மறுகால் துணை செய்தது. அவனை சுமப்பதால் கனத்த இதயம் நடக்க நடக்க இலகுவானது. கால்களில் சக்கரங்கள் முளைத்தன. தோள்களில் இறக்கைகள் தோன்றின. மேலது கீழது, தலையெது காலெது… நடந்துச் செல்க. கடந்துச்  செல்க.  ஆதியும் அந்தமும் அவனே. அனலும் புனலும் அவனே. கயிலையும் அவனே. கயிலையிலும் அவனே. பனி மலைகள் உருக்குலைக்கும். பாறைகள் உருள வைக்கும். பாம்புகள் மிரள வைக்கும். விலங்குகள் உயிர்க் குடிக்கும். பள்ளங்கள் சரிய வைக்கும் அச்சம், அருவருப்பை விலக்கு. ஐயத்தை நகர்த்து. எங்கும் அவனே. எதிலும் அவனே. பனிமலைகளும் அலைகளற்றக் கடல்களே. ஓசையற்ற அலைகள்… அசைவற்ற மலைகள்… ஆழியின் ஆழம். மலையின் முகடு… அது கருமை. இது வெண்மை… வெண்மை தகதகத்தது, வெள்ளி பொன்னாகியது. பொன் விண்ணாகியது. 

“அம்மே….“ உடல் சொடுக்கி நின்றது. யாரழைத்தது? யாரை அழைத்தது? உள்ளம் சுழன்றது. தவித்தது. துடித்தது.. அவள் வேறொன்றாகினாள். கண்களை கூசச் செய்வது வெளியா… ஒளியா… அனலா… தெரிவது உருவா… அருவா… அருவுருவான திருவுருவா…? உள்ளம் மிரண்டது. திகைத்தது, பனிந்தது. உருகியது. வழிந்தது. கரைந்து ஒன்றென திரண்டது. ஈமவனம் பேரமைதியின் பேருச்சம். பிணத்தின் நிணம் வெடித்து நீர்ச் சிதற எலும்புகள் தெறித்துடைய பரவிய அனல், இன்மையில் எழுந்து முடிவிலியில் ஆடியது. தாவிப் பற்றி முளரியையும் கள்ளியையும் தீய்த்தது. எட்டி, இலவம், ஈசை, சூரை, காரை மரங்களை நாவால் தொட்டு மீண்டது. நீண்ட பல்லும் குழிந்த கண்களும் கொண்ட பேய்கள் கூடி எழுந்து ஈமத்தைச் சுற்றித் துணங்கை ஆடின. 

செவ்வொளி எழுந்தபோது அவள் அந்தி நேரத்து கதிரவனோ என மனம் குழம்பி நின்றாள். கதிரவனும் குழம்பியது. அப்படியானால் அது அவன்தான். அன்று கண்ட அவனேதான். தழல் போன்று சிவந்த உடலில் சுடலைப்பொடியை பூசியிருந்தான். தலையோடுகளை எலும்புகளால் கோத்து மாலையாக்கி உந்தி வரை அணிந்திருந்தான். புலித்தோலாடையை இடையுடுத்தி நீண்டு தொங்கும் சடைகளை மேலுயர்த்தி சடாமகுடமாக்கி அதில் கொன்றையும் எருக்கனும் வன்னியும் பெய்த மலர்களைச் சூடியிருந்தான். 

அணங்கு காடெனும் அந்த நாட்டிய அரங்கு நடனத்துக்கு தயாரானது. 

சச்சரி, கொக்கரி, தக்கை, தகுணி, துந்தபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழவு மொந்தையென இசைக்கருவிகள்  இசை முழக்க, அவன் அசையத் தொடங்கினான். மனம் அசைய உணர்வு இசைய அனைத்தும் ஒன்றென திரண்டது. துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என ஸ்வரங்களுடன் பண் கெழுமி எழ, இசைக்கேற்ப ஜதியாக கால் அசைந்தது. முத்திரையுடன் கை அசைந்தது. இசையும் நாட்டியமும் இணைந்தியங்க அவன் அணங்கு காட்டில் சுழன்றாடினான். சிவனாட சக்தியாட சகல தத்துவங்களும் ஆட, சதாசிவம் ஆட, உயிர்களுடன் ஒட்டி நிற்கும் சித்தம் ஆட, அசைவன அசையாதன ஆட உடலின் ஆதாரங்கள் ஆட நாவொலிகள் ஒன்றென திரண்டன. சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்..   

கோட்டானோடு ஆண்டலை பாட, ஆந்தை அதன் மேல் குதித்தோட பிணத்தோடு வைத்த பலிச்சோற்றை குறுநரி எடுத்துக் கொண்டோட ஓங்கிய மூங்கில்களில் பற்றிய தீயில் பேய்கள் கூந்தலை உலர்த்தின. மாயன் ஆட மலைமகள் காண ஈமவனமே அனலில் ஆடியது. அவன் கரங்கள் துடித்தன. கால்கள் சீறின. தசைகள் துள்ளின. கைகளை மேலுயர்த்தி ஒற்றைக்காலில் அனலென சுழன்றான் அவன். சடைமுடிக்கற்றைகள் அவன் உடலெங்கும் பிரிந்தாடியது. கூத்தனோடு கூத்தாடிகளென நுண்பூதங்களும் பருப்பூதங்களும் புவனங்களும் அண்டங்களும் இணைந்துக் கொண்டன. ஐம்பூதங்களிலும் பொறிகளிலும் புலன்களிலும் வேதங்களிலும் ஆகமங்களிலும் காலங்களிலும் கலைகளிலும் ஊழியாகிய சங்காரத்திலும் கலந்து ஒன்றி ஆடும் இறைவா... குவிந்த மனங்கள் பொங்கி எழுந்தன. சிவாய நமஹ.. சிவாய நமஹ.. சிவாய நமஹ.. சிவாய நமஹ.. சிவசிவ சிவாய நமஹ. அவன் ஒட்டியும் ஒட்டாத பதத்தில் நின்றும் நிற்காத விரைவில் கடந்தும் கடக்காத முடிந்தும் முடியாத முடிவற்ற பாதையில் உலகே ஒன்றென்றாகியும் ஒன்றையொன்று கலந்து விடாததாகியும் சுழன்றான். இடதுகாலை நிலம் ஊன்றி வலதுகாலை வான் நோக்கி உயர்த்தினான். ஊர்த்துவன், பூரணன்.

நிலவும் பூரணத்திலிருந்தது.

அம்மையே…

கண்களோடு தலையும் சுழன்றது அவளுக்கு.

“அழைக்கிறேன், கேட்கவில்லையா?”

“அப்பனே..” சுழல்பவன் எவனோ அவனே அழைத்தவன். நிற்காத சுழற்சியில் ஆதி எது? அந்தம் எது? அந்தம் எது? ஆதி எது? ஆதி எது? அந்தம் எது?

அவள் இறக்கி வைத்த பெருமிதத்தோடு நண்பனை நோக்கினாள்.

புரண்டு வந்த அலைநீர் எழும்பி வட்டமென சுழன்று, மீள, நீரில் விழுந்தது.

“நண்பனே… உன் அலைநீரின் சுழற்சியில் தொடக்கம் எது இறுதி எது என்பதை அறிவாயா நீ? உனது இந்த பெருநீர் தொகையின் முதலும் முடிவும் எதுவென அறிய இயலுமா உன்னால்? வாழ்வும் அங்ஙனமே என்றான். அவனிலிருந்து கிளம்பி அவனில் சேர்வது. வேண்டுவதை கேள் என்றான். அப்போது அவன் விழிகள் மோனத்திலிருந்தன”

அவள் குழந்தை போல காலில் தவழ்ந்த நீரை கையில் ஏந்தியபோது அது நுரையென விரலிடுக்குகளில் எஞ்சியது.    

“அறிவேன் நண்பனே உன் ஆற்றாமையை. வேறெங்கிலும் நகரமாட்டாத நீ எங்ஙனம் அவனை நாடியோட முடியும் என்றெண்ணுகிறாய்”

கடல் கண்கொட்டாமல் அவளை நோக்கியது.

“தனிமையின் தாளாதுயரில் காலமற்று கரையில் அறைந்தலையும் உனக்கு நிலத்திற்குள் பாய்ந்து விடும் ஆற்றல் இருக்கவில்லையா? அல்லது நகரும் வித்தையை நீ அறியாதவனா?  நண்பனே… பயணம் என்பது புறவுலகில் நிகழ்வதல்ல. அது அகத்தின் உணர்தல். நீதி கேட்டு நிலம் நோக்கி ஓடி வர விழையாத உன் மனமே அவன். அவனே சிவன். உன்னுள்ளேயே அவன். அவனன்றி எவன்?”

“கேள் நண்பனே… அனற்காட்டில் சிவந்தும் பனிமலையில் ஒளியுமென திகழும் அவன் அம்மையே… என்ன வேண்டும், கேள்… என்றான். பிறவாமை வேண்டும்… பிறப்புற்றால் உனை மறவாமை வேண்டும் என்றேன். அவன் சுழன்றாடுகையில் என்றென்றும் அவனடியின் கீழிருக்க வேண்டும் என்றேன். தந்தேன் என்றான். யுகங்கள் நகர்வதும் வான் சுழல்வதும் வானம் பெருகுவதும் வனம் நிறைவதும் மண் குளிர்வதும் உயிர்கள் உய்வதும் அவனாலான்றோ? அதனையறிந்து அவனை உணர்ந்து கருக்குழந்தையென அவனுள் அமர்வதே பிறவிக்கடன். அதுவே மெய்மை… அதையே உணர்த்தினான். அதுவே உரைக்கிறேன்” அவள் மகிழ்வோடு நீரையள்ளி முகத்தில் அறைந்துக் கொண்டாள்.

முன்னகர்ந்து நகர்ந்து கொஞ்சியது அலை. அதில் உற்சாகத்தோடு துள்ளி தெறித்தன மீன்கள்.

“உன்னுள் உயிர்கள்… உயிர்கள்...” என்றாள்.

”ஆம்… நிலத்திலும் உயிர்கள்”

”ஆம்… உன்னால் காப்பாற்றப்படுபவை”

அவள் குனிந்தமர்ந்தபோது கடல் அவளை அணைத்து முத்தமிட்டது. சிரிக்கும் வெண்பற்களென அதன் நுரைகள் அவள் மேனியெங்கும் வழிந்தன.

 

***

 2025 சொல்வனம்

 

Friday, 24 April 2026

மாதவரே...

லோத்ர மரங்கள் நிரம்பிய அந்த மலைச்சரிவின் கிழக்கிலிருந்த அப்பெரும்பாறை அச்சரிவை சற்றே மேலெழுப்பி உள்நோக்கி வளைத்து குகையொன்றை உருவாக்கியிருந்தது. தவமுனிவர்கள் தங்கவில்லையெனில் அதில் ஏதேனும் மிருகங்கள் வந்து அடையலாம். அருகிலிருந்த நீரோடை தெளிவான நீரோடு அதிக சலனங்களற்று நகர்ந்துக் கொண்டிருக்க, அதன் ஒரு மருங்கில் நின்றுக் கொண்டிருந்த பெருமரங்களில் அதன் உயரத்துக்கே கொடிகள் மேலேறி கீழே விழுதுகளென தொங்கின. வண்ண வண்ண மலர்களால் நிறைந்திருந்த செடிகள் ஆற்றில் ஒரு வேரும் சேற்றில் ஒரு வேருமாக பரவியிருந்தன. புதர்கள் பூத்திருந்தன. குகையையொட்டி வேதமுனி ஒருவரின் தவச்சாலையும் சரிவுகளில் ஆங்காங்கே சீடர்களின் குடில்களும் பரவியிருந்தன. நீர்விளிம்பில் அதன் யாகசாலை அமைந்திருக்க அதன் எதிர்புறம் வனம் அடர்ந்திருந்தது. குடிலின் மேற்கிலிருந்த அதிக புழக்கமற்ற பாதை அருகாமை சிற்றுார்களை நோக்கி மண்வரிகளாக ஓடிக் கொண்டிருக்க பொழுதிணைவை வரவேற்பது போல காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.

சுஜாதை பசிய சரிவினுாடே நகர்ந்து வந்த அந்த துவாரடையை பெரிதாக எழாத ஆர்வத்தோடு நோக்கினாள். வனத்தின் தாழ்ந்த கிளைகளுக்குள் நிழலும் வெயிலுமாக அந்த மனிதரை உருவம் செய்த அந்தி சூரியன் சற்றே மேல் நகர்ந்து அவர் கண்களில் பளீரிட்டபோது அவளுக்கு மின்னல் வெட்டியது போலிருந்தது. கீரை கொய்துக் கொண்டிருந்தவள் உறைந்து நின்று விட அவர் அழகிய சிலையொன்று அமைதியாக செல்வது போல நடந்துக் கொண்டிருந்தார். கைகள் முழங்கால்கள் வரை நீண்டுத் தொங்கின. ஆர்ப்பாட்டமான அசைவுகளற்ற உடல். தேவையான தொலைவுக்கு மேல் செல்லாத பார்வை, அளவெடுத்தது போன்ற பாதப்பதிவுகள். வேகமானதா மெதுவானதா என்றுணரவியலாது பதுமை போன்ற நடை. இது அவர்தானா… அவரேதானா… அல்லது அவரை பற்றி கோசலம் முதல் மகதம் வரை பேசப்படுவதால் நினைவுகளை இழுத்து தேக்கி அன்று கண்ட அவ்வுருவை நினைவில் பதித்துக் கொண்டதன் விளைவா? மனம் குழம்பி மீள்வதற்குள் உடல் அவரை நோக்கி நகர்ந்திருந்தது.

கால்கள் நிற்க தலையை மட்டும் திருப்பி பார்த்தார்.

“சுஜாதை…?” குரல் சற்றே சந்தேகத்தோடு இழுப்பட்டது.

“ஆம்…. நீங்கள்… நீங்கள்… அவர்தானே?”

“ஆமாம்… உருவேலா வனத்தில் நீ பார்த்த அதே மனிதன்தான்” அவர் மெலிதாக புன்னகைத்தார். பொலிவோடிருந்தது முகம். ஆனால் அன்று அவர் தோள் வறண்டு வயிறு ஒடுங்கி நிறம் மங்கி புஜங்களும் முதுகும் உடலுக்குள் அமிழ்ந்து சூம்பிய கால்களுடன் இருந்தார். கன்னங்கள் ஒடுங்கி கண்கள் குழிகளுக்குள் ஒளிந்திருந்தன. ஆனால் அவை அசாதாரணமானவை. அதையே அவள் அறிவு பொத்தி வைத்திருந்தது.

“நான்… நான்… இங்கே… உ… உங்களை சந்திப்பேன் என்று நினைக்கவேயில்லை. ஆனால் ஆனா… உங்களை நான் மறக்கவேயில்லை” வியப்பில் அவளுக்கு வாய் குழறியது.

“எப்படி அடையாளம் கண்டுக் கொண்டாய்?”

“உங்கள் கண்கள். அவைதான் நீங்கள் யாரென்றது. அன்று உங்கள் உடலில் ஜீவனோடு இருந்தவை அவை மட்டும்தான். ஆனால் அமைதியற்றிருந்தன. அது சோர்வில்லை. தேடல் என்று நான் அப்போது உணர்ந்திருக்கவில்லை” அவள் இயல்புக்கு திரும்பியிருந்தாள்.

“நல்லவேளை… தேடல் என்று எண்ணியிருந்தால் அன்று எனக்கு பால் பாயசம் கிடைத்திருக்காது. நானும் இந்நேரம் இருந்திருக்க மாட்டேன்” அழகாக புன்னகைத்தார்.

“தர்மராஜரே… இப்போதும் அது கிடைக்கலாம், நீங்கள் கொஞ்சம் பொறுத்திருந்தால். வீடு சற்று தொலைவில் தான் உள்ளது” அவள் தான் வைத்திருந்த கொய்த கீரைகள் நிரம்பிய மரக்கூடையை கீழே வைத்து விட்டு அவரை நோக்க, “போதும் சுஜாதை. நீ அன்று கொடுத்ததே போதும். பசி என்னை எந்நேரமும் விழுங்கி விடலாம் என்ற நிலையில் நீ அளித்தது உணவல்ல. உயிர்”

அவள் சற்றே நெகிழ்ந்தவளாக நின்றிருந்தபோது அவர், வா… வந்து அமர்ந்துக் கொள்” என்றபடியே அங்கிருந்த பாறையில் அமர்ந்துக் கொண்டார்.   

“அய்யா… நீங்கள் தனியாகவா வந்தீர்கள்?” அவள் எதிரிலிருந்த ஒற்றைப் பாறையில் அமர்ந்துக் கொண்டாள். சூரியன் அவர்களை சரிவாக நோக்கியது.

“இல்லையம்மா. உடன் வந்தவர்கள் அருகாமை கிராமங்களுக்கு உணவு பெற்று வர சென்றிருக்கிறார்கள். இரு நாட்களுக்கு முன்பு வந்தோம். அதோ அங்கே பர்ணசாலை அமைத்து  தங்கியிருக்கிறோம். கோசல தேசத்தை நோக்கிச் செல்ல உத்தேசம். பயணத்தின் நடுவே இந்த இளைப்பாறலை முடித்து விட்டு இரண்டு நாட்களில் கிளம்பலாம் என்று திட்டம்”   

“சரிதான். துவராடையோடு நிறைய பேர் வனங்களிலும் நகரங்களிலும் அலைந்துக் கொண்டிருப்பதை நானும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். சிராவஸ்தியிலும் ராஜகிருகத்திலும் இப்போது உங்களை பற்றியே பேச்சாக இருக்கிறது என்கிறார் என் கணவர். அவர் மகத ராஜ்ஜியத்தின் படைக்கலத்தலைவர். மன்னர் பிம்பிசாரர் எடுக்கும் பேச்செல்லாம் உங்களில் தொடங்கி உங்களிலேயே முடிவடைகிறதாம். என்றாவது ஒருநாள் உங்களை சந்திக்க வேண்டும் என்று எண்ணினேன். அது நடந்தேறி விட்டது”

”நல்லது பெண்ணே… நீ சேனாநிகமம் கிராமத்தை சேர்ந்தவள் அல்லவா? இங்கு எப்படி வந்தாய்”

“ஆஷாட மாதத்தில் நடக்கும் திருவிழாவிற்காக என் உறவினர் இல்லத்துக்கு வந்தேன். அப்படியே இப்பெருவாய்ப்பையும் அனுபவிக்கிறேன்”

”ஆகா… நான் பாக்கியவான்”

“நானும்தான்” என்றவள் “அன்று நைரஞ்சரை நதிக்கரையில் உருவேலா வனத்தில் எலும்பும்தோலுமாக உங்களை சந்தித்தபோது அஜபால விருட்சத்தில் உறையும் யட்சதேவதை என்றே நினைத்துக் கொண்டேன். பிறகெப்போதோ அவர் சாக்கிய தேசத்து இளவரசர் என்றார்கள். அன்று நம்ப முடியவில்லை. இன்று துவராடை உடுத்தியிருந்தாலும் உங்களை இளவரசராக பொருத்திக் கொள்வதில் எனக்கு மறுப்பேதுமில்லை ஐயனே” மென்மையாக சிரித்தாள்.

“தோற்றத்தில் என்னவிருக்கிறது? உள்ளம்தானே அதை நிர்ணயிக்கிறது. சரிதான். இப்போது உன் மகன் வளர்ந்து விட்டிருப்பானே?”

“ஆமாமாம்… அவன் உங்களை சந்திக்கும் முன் நான் உங்களை சந்தித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். உங்களை கண்டால் அரசர்களும் தாய்மார்களும் தங்கள் மகன்களை ஒளித்து வைத்துக் கொள்கிறார்களாம். நீங்கள் அவர்களை துறவியாக்கி அழைத்துச் சென்று விடுகிறீர்களாம். ஆனால் நான் ஒளித்து வைக்கப் போவதில்லை. ஒருவேளை என் மகன் உங்களுடன் செல்வதாக கிளம்பி விட்டால் அவன் செல்லுமிடம் எப்படிப்பட்டது என்று நான் அறிய வேண்டுமல்லவா?”

“அப்படியானால் நானும் உன் கேள்விகளுக்கு தயாராகி விட்டேன் சுஜாதை. ஒருவகையில் நீ என் தாயாருக்கு சமமானவள். பெற்றவளை பார்த்தறியேன். கௌதமிதாய் என்னை வளர்த்தார்கள். நீ உயிர்க் கொடுத்தாய்”

“அத்தனை பெரிய வார்த்தை வேண்டாம் கௌதமரே. நானில்லை என்றால் மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டி வருபவர்களோ சுள்ளி பொறுக்க வருபவர்களோ கூட தாங்கள் எடுத்து வந்திருக்கும் உணவையோ அங்கிருக்கும் பழங்களையோ உங்களுக்கு அளித்திருக்க முடியும்”

““நீ நேர்மையானவள் சுஜாதை”

“நீங்களும்தான். கபிலவஸ்துவின் இளவரசர் ஏன் அங்கிருந்து நீங்கினார் என்பதை அறிய நான் ஒருமுறை உங்கள் கபிலவஸ்துக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து மீளவே மனமில்லை. மலைமுடிகளைப் போல உயரங்கொண்ட தேவதாரு மரங்களின் அண்டையில் தாயின் கதகதப்புக்குள் பாதுகாப்பாக வாழும் கோழிக்குஞ்சாய் இருக்கிறது உங்கள் கபிலவஸ்து. ரோகிணி ஆறு நிலங்களை பசுமையாக்கி வயிறை குளிர வைத்து விடுகிறது. இனிய தட்பவெப்பம் வேறு. மன்னரின் சீராட்சி. மக்களுக்கு என்ன கவலை? அதனால்தான் விழாக்களை உருவாக்கி கொண்டாடிக் கொண்டே இருக்கிறீர்கள் போலும். அதிகாலையில் பனிமலையின் தங்கசிகரங்களை பார்த்தபடியே துயிலெழலாம். அதுவே அந்தியில் சிவந்தும் இரவில் இருளுக்குள் வரையப்பட்ட கரிய ஓவியமெனவும் திகழ, பனிமலையின் இனிய குளிர்மையில் உறங்கி எழுவதில் எது உங்களை பிரச்சனைக்குள்ளாக்கியது மாதவரே? அதிலும் நீங்கள் இளவரசர் வேறு. நீங்கள் நினைத்தால் அடைய முடியாததென்று என்ன இருந்து விட முடியும்?”

“அடையக் கூடியது என்று நீ எதை சொல்கிறாய் சுஜாதை? அரசதிகாரமும் அடிமை மக்களுமா? பட்டாடைகளும் பருவப்பெண்களுமா? அல்லது அருசுவை உணவும் பகட்டு வாழ்வுமா?” குரலை உயர்த்தாது வார்த்தைகளை பிசிறின்றி அழுத்தமாக உச்சரித்தார்.

“அதுதானே இங்கு எல்லோருடைய பிரார்த்தனைகளாகவும் இருந்துக் கொண்டிருக்கிறது அய்யனே”

“அம்மா… என்றாவது ஒருநாள் அதிகாரம் நீங்கி விடலாம். பகட்டு வாழ்வு முடிந்து விடலாம். பருவப்பெண்கள் முதிர்ச்சிக் கொள்வர். அடிமை மக்கள் கிளர்ந்தெழுவர். இவையனைத்தையும் பெற்றுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அனைத்தும் இழந்தோர்களாகி விடுவர் அல்லவா? இழப்பது துயர் என்றால் பெறுவதும் துயரே”

“அய்யா… அதுதானே இயற்கை. நீங்கள் மனித சமுதாயத்தின் துக்கம் அனைத்தையும் அகற்றி விட வழி தேடுகிறீர்கள். அது எந்த காலத்திலும் எவராலும் இயலாத செயல். முள் ஏன் கூராக இருக்கிறது? பாகல் ஏன் கசக்கிறது? அவை அதனதன் இயற்கை. தானாக அமைந்தவை. மேலும் இவற்றையெல்லாம் ஆய்ந்தறிந்து அதன் நிவாரணத்துக்கான வழிமுறைகளை சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷகம், மீமாம்ஸை, வேதாந்தம் போன்ற எத்தனையோ சிந்தனைகளும் அவர்களின் தத்துவங்களும் பேசுகின்றனவே? பூரணகஸ்யபரின் அக்கிரிய வாதம், மக்கலிகோசாலனின் நியதிவாதம், சஞ்சய பேலட்ட புத்தனின் விட்சேப வாதம், நிகண்டநாதரின் சாதுர்யாம சம்வரவாதம் அஜிதகேச சம்பலனின் உத்தேசவாதம், பார்சுவமுனிவரின் கைவல்யம் என சிந்தனைப்பள்ளிகளுக்கு இங்கு குறைவுண்டா என்ன? தவிரவும் இது குறித்து ஞானதர்க்கங்களும் மேலெழும்பல்களும் நாடெங்கிலும் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கின்றன. இவை அனைத்தையும் விட்டுவிட்டு நீங்கள் வேறு ஒரு பாதைக்கு இட்டுச் சென்றால் எதை கடைப்பிடிப்பது என்று மக்கள் குழம்பி விட மாட்டார்களா? அதிலும் வேத மதம் அரசர்களின் பேராதரவு பெற்றிருக்கிறது. அதன் வேள்விகளையும் சடங்குகளையும் கடைப்பிடிக்காத அரசர்கள் யார் இருக்கின்றனர் இங்கு?”

“ஆனால் அவை மனிதனின் துயரை போக்கி விடவில்லையே. காமம், பேராசை, வெறுப்பு, துவேஷம் போன்ற இருள்மைகளெல்லாம் மனதிலிருந்து நீங்காமல் மந்திர தந்திரங்கள், யாகங்கள், உயிர்ப்பலிகள், பிரார்த்தனைகள் செய்வதால் துயரம் நீங்கி விடுமா? பாவங்களை பரிகாரங்களால் போக்கி விட முடியும் என்ற போதனை சரியானதுதானா? இவையெல்லாம் நிலையற்ற ஒன்றை நோக்கி செய்யப்படும் திறனற்ற வழிமுறைகள் என்றே சொல்வேன் நான்”  

“ஆனால் அவர்கள் இன்பமாகதானே வாழுகிறார்கள். நீங்களும் உங்கள் பிக்குகளும்தான் நிலையான வாழிடமின்றி வண்ணமயமான உடுப்புகளின்றி உணவை கூட இரந்துப் பெற்று உண்ணும் துன்பம் அடைகிறீர்கள்”

”சுஜாதை… நீ கூறும் அந்த இன்பம் எல்லோருக்கும் பேதமின்றி கிடைக்கிறதா? அடுக்கி வைக்கப்பட்ட ஆசைகளே இங்கு பிரார்த்தனைகளாக உள்ளன. சிலர் பவித்திரமான உணவினால் புண்ணியம் கிடைத்து விடும் என்கின்றனர். அப்படியானால் மான்களே புண்ணியமூர்த்திகள். பாம்புகளை போல காற்றை உள்வாங்கி நாள்கணக்கில் பட்டினி கிடந்தும் தகிக்கும் அனலிலும் கழுத்தளவு குளிர்ந்த நீரில் மூச்சடக்கி நின்றும் தவம் செய்கின்றனர். நீருள் மூழ்குவதால் சுவர்க்கம் கிட்டும் என்றால் மீன்களும் தவளைகளும் சொர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? சடைமுடி தாங்கி வேத கோஷங்களுடன் மந்திர பாராயணம் செய்வதும் ஓமத்தீ வளர்த்து வழிபாடு நிகழ்த்துவதும் நீரை தெளிப்பதால் மனிதனோ இடமோ புனிதமாகி விடுவதாக நம்புவதும் எந்த துயரை போக்குவதற்காக?

“புனிதரே… நியமங்கள் சொல்வது அதைதானே?”

“அதைதான் தவறு என்கிறேன். அண்டம், பேரண்டம் என்றெல்லாம் சிந்தனை விரிவுக் கொண்டவர்களால் மனிதர்களுக்குள் எப்படி பேதமிட முடிகிறது? பெரும்சக்தி ஒன்று இருக்கிறது என்று நம்பும்போது அதன் முன் அனைவரும் ஒருசேர மண்டியிடுவதுதானே சரியான வழிமுறையாக இருக்க முடியும்? ஆனால் வேதமந்திரங்கள் பாமரனின் காதில் விழுவதே பாவம் என்றல்லவா சொல்லப்படுகிறது? பரிகாரம் என்ற பெயரில் கொலை வேள்விகளை நடத்துவதென்பது பிள்ளையைக் கொன்று கறி சமைத்து அதன் பெற்றோரை அழைத்து விருந்து வைப்பதற்கு ஈடானது. பிராணிகளின் உதிரத்தால் யாரும் பரிசுத்தராக முடியாது. அப்படியானால் கடவுள் என்பவர் யாகங்களில் தரப்படும் கறிச்சோற்றுக்காக காத்துக் கிடக்கும் கையாலாகாதவரா? அல்லது இது போன்ற வேள்விகளை அனுமதிக்கும் கருணையற்றவரா?”

“கடவுளின் விருப்பத்தை நீங்கள் அறிந்துக் கொண்டீர்களா புனிதரே?”

“ஒருபோதும் அறியமுடியாத ஒருவரைப் பற்றி யார்தான் அறிந்திருப்பது? ஆனால் இது குறித்து இங்கு வீண்வாதம் புரிந்து ஒருவரையொருவர் கொல்லவும் சித்தமாக இருக்கிறார்கள். விந்தைதான். பரிபூரணமான கடவுள் நமக்குத் தெரிந்த எதனுடனும் தொடர்பு கொள்ள முடியாத ஒன்று என்றால், அந்த ஒன்றைப் புரிந்து கொள்வது எங்ஙனம்? உலகில் உள்ள எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவையே. தொடர்புபடுத்த முடியாத எதுவுமே உலகில் இல்லை”

அவர் அவள் அளித்த சுரைக்குடுவையிலிருந்த நீரை எடுத்துப் பருகினார். அவர் அதனை கையிலேந்திய விதமும் அருந்திய பாங்கும் அரசக்குலமாந்தர்க்கே உரிய கம்பீரமான தோரணையென தோன்ற அது அவரறியாது அவருள்ளிருக்கும் பிறப்பின் பதிவு என்றெண்ணிக் கொண்டாள்.

“சுஜாதை. தேன் மிகவும் இனிப்பானதுதான். ஆனால் அது மற்றவரிடமிருந்து அபகரித்த சேமிப்பல்லவா? அதை விட ஆற்றில் ஓடும் நீர் அதிக இனிப்பானது. பரிகாரங்களையே இன்பம் என மயங்கி அதிலேயே அமிழ்ந்து போவதால் நமக்கு தேட வேண்டிய உண்மை இன்பம் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் போய் விடுகிறது. அழுக்கு அழுக்கைப் போக்காது. உலகம் முழுவதையும் வென்ற மன்னனுக்கும் தங்குவதற்கு ஒரு அறை இருந்தால் போதுமல்லவா?”

“அய்யா… இப்படியே போனால் நீங்கள் நிறைய எதிரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்”

“மானுடசமுதாயம் எதிர் கொள்ளும் துன்பங்கள்தான் என் எதிரிகளே தவிர, மானுடர் யாருமல்லர் அம்மா”

“சோதரரே… அப்படியானால் யசோதரை உங்களுக்கு எதிரி இல்லையா?”

அதன் நுணுக்கத்தை புரிந்துக் கொண்டவராக “தீப்பற்றி எரியும் வீட்டிலிருந்து வெளியேற எண்ணுவது தவறா? என்னால் இருக்க முடியவில்லை சுஜாதை. போதும்… போதும்… புறப்படு. விழித்துக் கொள் தெளிவு கொள். நிலையற்ற அழிந்து போகிற ஐம்புல இன்ப சுகங்களில் மூழ்கி விடாதே. காலம் வீணாகிறது. நிலையாமை உணர்ந்து நிலையான இன்பம் நாடு. எழு. விழி, விலகு, நட.. என நெருப்பாய் எரிந்தது என் நெஞ்சம். அதன் மீது பட்டுத்துணிகளைப் போர்த்தி என்ன பயன்? பிறப்பின் மறுமுனை இறப்பு. பிணி, பசி, மூப்பு, துன்பம் இவைதான் வாழ்க்கை. எல்லா பொருள்களும் மாறி விடுகின்றன. அழிவை நோக்கி விரைந்து செல்கின்றன. காமக்கனலில் கருகும் சருகு தான் உடல். அது ஆற்றங்கரையோரம் வளரும் மரம் போன்றது. கணந்தோறும் அலையடிக்கும் நீர் அதன் வேரிலுள்ள மண்ணை கரைந்துக் கொண்டிருக்கிறது.  உடல் மரணம் என்ற பறவை வாழும் கூடு. புல் நுனி மேல் அமர்ந்திருக்கும் நீர். நிலையற்ற இவ்வாழ்வில் ஆசையில் அமிழ்வதும் இன்பத்தில் நாட்டம் கொள்வதும் அறிவுடையோருக்கு ஏற்ற செயல் அல்ல”

“ஆனால் இங்கு அதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு ததாகதரே. மாமுனிவர் வசிஷ்டர் அகஷ்மாலாவை போகித்து கபிங்க்லாதனை பெறுகிறார். மாமன்னர் யயாதி, முதுமை எய்தி உடல் தளர்ந்த பின்பும் அப்ஸர மங்கை விஸ்வாகியை மோகிக்கவில்லையா? மனைவியைக் கூடினால் மரணம் வரும் என்று தெரிந்தும் மாத்ரியின் அழகில் பாண்டு மயங்கிப் போகிறாரே?”

“மிக உயர்ந்தவர்கள் கூட இன்ப ஆசைக்கு இரையானவர்களே என்று நீ கூறுகிறாய். ஆனால் அவர்களும் இறுதியில் அடைந்தது அழிவைத்தானே? நான் உலகியல் நோக்கை இகழவில்லை சுஜாதை. உலகம் நிலையற்றது என்ற உண்மை என் நினைவிலிருப்பதால் இதில் என் மனம் இன்பம் காணவில்லை என்கிறேன்”

சூரியன் மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. உடலைத் தழுவிய இதமான காற்றை அனுபவிப்பவர் போல அவர் கண்களை மூடி அமர்ந்திருக்க,  அவளே பேச்சை முன்னெடுத்தாள். “கௌதமரே… இந்த காற்று உங்களுக்கு புதிதல்ல. கபிலவஸ்துவை போல இங்கும் சாகவிருட்சங்கள் அதிகம். அதனை தொட்டு எழும் இந்த காற்றை நீங்கள் இயற்கையாகவே விரும்புகிறீர்கள்”

”சுஜாதை… ஒன்றறிவாயா? போர்க்களத்தில் ஆயிரம் பேரை வெல்வதை விட தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வதென்பது மிகவும் கடினமானது”

“புரிகிறது புத்தரே… ஒழுக்கவிதிகளில் இத்தனை கண்டிப்பு காட்டும் நீங்கள் அடுத்தவர் நலன் மீது கருநிழலென கவிய உங்களை அனுமதிக்கலாமா? நீங்கள் திருமணத்தை மறுத்திருக்கலாம். அல்லது மணமான பின் உங்கள் மனதை மாற்றிக் கொண்டிருக்கலாம். குறைந்தபட்சம் உங்கள் மனைவியை சிறிதுசிறிதாக உங்களின் இந்த பிரிவுக்கு பக்குவப்படுத்திவிட்டு காலம் கனிந்ததும் வெளியேறியிருக்கலாம். நாமறியாது மரணம் வந்து தழுவுவதை போல அறிந்து ஒரு துயரை நீங்கள் நிகழ்த்தி விட்டு போனது துரோகம் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?”

சற்று மௌனித்து விட்டு பேசினார். “சுஜாதை… வேள்விச்சாலையிலிருந்து அரணியை எடுத்து வந்து ஈர விறகில் தீ உண்டாக்க முயன்றால் அதில் தீ தோன்றுமா? அல்லது நன்கு காய்ந்த விறகின் மீது அரணி கடைந்து அனல் கறந்தெடுத்து மூட்டினால் அது பற்றிக் கொள்ளுமா? விறகின் ஈரம் தான் உடலின் காமம்”

வானில் பெரும் பறவையென தோற்றம் உண்டாக்கி பறந்துச் சென்ற பறவைக் கூட்டத்தில் ஏதோவொன்று விலகி விட உருவம் சிதைந்து அது இணைந்தபின் மீண்டும் உருக் கொண்டு பறந்து கண்களிலிருந்து விலகிச் சென்றது.

“கூடு அடைய செல்கின்றன அவை” என்றாள் அவள் எதையோ சொல்லி வைப்பது போல.

“உன் கேள்விகள் முடிந்து விட்டதா சுஜாதை? எதை யார் கூறியிருப்பினும் எதுவொன்றும் புனிதமல்ல. தங்கத்தை நெருப்பிலிட்டு பார்ப்பதுபோல அதனை உன் அறிவென்னும் நெருப்பிலிட்டு பகுத்தறிந்த பின்னரே ஏற்றுக் கொள். ஏனெனில் அறியாமையே அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை” 

சற்று நேரம் நிலவிய மௌனம் இடைவெளியொன்றை உருவாக்க அவர் எழுந்து பர்ணசாலைக்கு செல்ல எத்தனித்தார். சுஜாதையும் அவருடன் இணைந்துக் கொள்ள விவாதம் இயல்பாக தொடர்ந்தது.

“சரத்காலத்தில் வயல்களில் தானியக்கதிர்கள் முற்றியிருக்கும்போது உழவன் அவற்றை பறவைகள் அண்டாமல் விரட்டுகிறான். கவன்கல் அடித்து கொன்றும் விடுகிறான். போலவே, நானும் காமம், ஆசாபாசம், உலகப்பற்று, பகைமை உணர்வு, பிறரை துன்புறுத்தும் எண்ணம் போன்றவை என்மனதில் எழாமல் விழிப்புடன் பார்த்துக் கொள்கிறேன்”

“ஆனால் நீங்கள் இப்போது உங்கள் மகனையும் விட்டு வைக்கவில்லையே”

“அவன் வாரிசாக தன் பங்கை கேட்டான். நான் எதைக் கொண்டுள்ளேனோ அதை தானே அவனுக்கு அளிக்க முடியும்? நான் என்ற அகங்காரத்தை அகற்றாததாலேயே நாம் பந்தங்களில் சிக்கி உழல்கிறோம்”

“ஆன்ம தத்துவத்தை நீங்கள் மறுக்கிறீர்களா அய்யனே?”

“ஒரு மனிதனானவன் அவனது ஸ்துால உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாக இருக்கிறான். ‘நான் இருக்கிறேன்’ என்கையில் மனிதனால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பொருள் அல்ல. ஸ்கந்தங்களின் கூட்டுறவினாலேயே அந்த ‘நான்’ தோன்றுகிறது. மானுடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தனித்த ஆன்மா என்ற எதுவுமில்லை. ஒரு பொருளையும் அதன் குணத்தையும் நாம் நம் கருத்தால் பிரித்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரத்யட்சத்தில் அவ்வாறு பிரிக்க முடியாது. உதாரணமாக நெருப்பில் உள்ள வெப்பத்தை நாம் கருத்தால் பிரித்து உணரலாம். நடைமுறையில் அப்படி வேறுபடுத்தல் முடியாது. ஆன்மதத்துவமோ குணங்களை பிரித்து விட்டு பொருளைத் தனியே விட்டு விடலாம் என்கிறது”

“நீங்கள் கூட தான் காண முடியாத பலனைக் கருதி கண்முன் கிடைக்கும் பயனைக் கைவிட்டு வந்தீர்கள். இது குறித்து என்றாவது அச்சம் கொண்டதுண்டா?”

”நான் அச்சத்தை விட்டு என்றோ விலகி விட்டேன் அம்மா. வனங்களில் தனித்து தவமிருந்த காலங்களில் சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி ஆகிய தினங்களின் இரவுகள் கொடிய அச்சமுண்டாக்குபவையாக இருந்தன. அந்நாளில்தான் துர்தேவதை உபாசனைகள், உயிர்பலி வழிபாடுகளெல்லாம் அங்கு நடக்கும். மரத்தினடியிலும் மயானபூமியிலும் இரவுகளை கழிக்கும்போது ஒரு இலையோ உலர்ந்த குச்சியோ விழுமோசை கூட பயமுறுத்தும். மானோ, குழிமுயலோ அசைவது கூட அச்சமூட்டும். நான் மனதிற்குள்ளேயே, பய அரக்கனை காணவும் வெல்லவுமே இங்கே வந்துள்ளேன் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொள்வேன். அச்சத்தை வெல்லாதவனால் அருந்தவங்கள் புரிய முடியாது அல்லவா?”

அவர் சுலபமாக நடந்தார். பர்ணசாலை வந்திருந்தது.

“மாதவரே… இந்த பர்ணசாலையை எப்படி அமைத்தீர்கள்?”

“இது சிறுகுடிசை பெண்ணே… நிழல் தங்கலுக்காக எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். மரத்தோடு இணைத்து குச்சிகளை நட்டு அங்கே வளர்ந்து கிடக்கும் கொடிகளை அதன் மீது போட்டு விட்டால் போதும். தங்கிக் கொள்ள ஏதுவாகிவிடும்.”

“பிறகேன் நகர்புறங்களில் பிக்குகளுக்காக பெரியளவில் விஹாரைகள் கட்டப்படுகின்றன? நாளையே உங்களை அதில் கடவுளாக்கி அதில் வேதமந்திரம் கூட ஒலிக்கலாம் அல்லவா?”

“ம்ம்… பெண்கள் நன்றாக சிந்திக்கத் தெரிந்தவர்கள்”

“அதனால்தான் கேள்விகளும் எழுகின்றன. மாதவரே… செல்லுமிடமெங்கிலும் இளைஞர்களையும் சிறுவர்களையும் உங்கள் நெறிக்கு கவர்ந்திழுத்துக் கொள்ளும் உங்களுக்கு அவர்களின் பெற்றோரிகளிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று தோன்றவில்லையா? அல்லது உங்கள் தகப்பனார் பட்ட துயரை நீங்கள் எல்லா தந்தையருக்கும் பரவலாக்கும் எண்ணம் கொண்டு விட்டீரா?”

“அம்மா… தவறுகளும் சரிகளும் மத்திம பார்வைக்குட்பட்டவை. அதை தனிப்பட்ட பார்வை முடிவு செய்து விடாது” அவர் குடிலின் உள்ளே மெலிதாக எரிந்துக் கொண்டிருந்த விளக்கை துாண்டி விட்டு விட்டு அதன் தாழ்ந்த வாயிலுக்கேற்ப தலையை குனிந்தவாறு வெளியே வந்தார்.

“பெண்ணே… உன்னை போலவே மற்றொரு பெண்ணும் நினைவுக் கொள்ளத்தக்கவள். அன்று உடலை வருத்திக் கொள்வதன் மூலம் ஞானம் பெற்று விடலாம் என்று உபவாச முறைகளை கடைப்பிடித்து உயிரறும் நிலையில் இருந்தேன். உருவேலா வனத்தில் உருவில்லாமல் போய் விடுவேனோ என்று தவிப்பும் தத்தளிப்பும் கொண்டேன். எழவும் சக்தியற்றிருந்தது தேகம். அந்த கணத்தில்தான் அந்த தேவகீதம் ஒலித்தது. அது அவ்வழியே வந்த பாணர்குல பெண்ணொருத்தியின் பாடல்.

கட்டாதே… கட்டாதே… யாழின் நரம்பை வலிந்து கட்டாதே

நரம்பு இற்றுப் போனால் இசை அற்றுப் போகுமடி…

கட்டாதே.. கட்டாதே… யாழின் நரம்பை மெலிந்து கட்டாதே

நரம்பு விடைத்து இயங்காவிட்டால்

இசை அற்றுப் போகுமடி தோழி

சமன் செய்து முடுக்கிய நரம்பினில்

சுருதி கூட்டி மீட்டிட,

இனிய நாதம் பிறக்குமடி தோழி

யாழினை வாங்கி, நரம்பணைவாய் 

யாழின் தந்தியை அதிகம் முடுக்கினால் அறுந்து விடும். தந்தி மிகவும் தளர்ந்தால், நாதமெழாது. வலிவும் மெலிவுமின்றி சமமாக முடுக்கப்படும் தந்திக்கம்பியில்தான் இனிய நாதத்தை எழுப்ப முடியும். இது யாழின் இசை நுட்பம் மட்டுமல்ல. மானுட சரீரத்தின் வாழ்க்கை நுட்பமும் கூட என்பதை அவளிடமிருந்தே அறிந்துக் கொண்டேன். உடலுக்கு உணவு ஈனும் முடிவு செய்தேன். பிறகே உன்னை சந்தித்ததும் நீ அளித்த பாயசத்தை பருகி உயிர் மீண்டதும்” குடிலின் வாசலில் அமர்ந்திருந்த அவரின் தலையை சுற்றிலும் விளக்கொளி சூழ்ந்திருக்க, அதன் நடுவே அவர் பரவசமான உதடுகளோடு பேசினார். 

பந்தலில் வேயப்பட்ட கொடிகளில் பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. காற்று தழுவும்போது அது சுகந்தமெழுப்பியது. 

“பொழுது இருட்டி விட்டதல்லவா?” அவள் கிளம்ப வேண்டியது நினைவுக்கு வந்தவராக கேட்டார்.  குனிந்ததால் தலையிலிருந்து விலகிய ஆடையை இழுத்து விட்டுக் கொண்டார். 

“சூரியன் சென்று விட்டால் என்ன அய்யனே? மேலே பாருங்கள். ஆஷாட மாதத்து முழுநிலவு. பேதங்களெல்லாம் மனிதர்களுக்குதான். நிலவுக்கு இல்லை. நம்மை போல தத்துவங்கள், சாத்திரங்கள், நியமங்களும் அதற்கில்லை. அதனால்தான் நிலவு தன்னொளியை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வழங்குகிறது. புனிதரே… நீங்கள் கொள்ளும் ஆண் பெண் பேதங்களெல்லாம் கூட அதற்கு கிடையாது” 

அவர் அவளை நிமிர்ந்து நோக்கினார்.

“ஆம் சாக்கியரே… பெண்கள் நன்றாக சிந்திக்கிறீர்கள் என்கிறீர்கள். பாணத்தி ஒருவளின் கானம் உங்களுக்கு உண்மையை உணர்த்தியது என்கிறீர்கள். ஆனால் உங்கள் சங்கத்தில் பெண்களுக்கு ஏன் இடமிருப்பதில்லை?”

“சுஜாதை… திடசித்தம் குன்றும்போது மனிதன் எந்த தவறையும் செய்யத் துணிந்து விடுகிறான். அதற்கு  நியாயமும் அவனால் கற்பித்து விட முடியும்” என்றவர் சற்று நிதானித்து “உனக்கு புரிகிறதல்லவா?” என்றார். “பெண்களும் ஆண்களும் சேர்ந்திருக்கும் அமைப்பை புறச்சமயிகளால் எளிதாக குறை கூறி விடவும் முடியும்”

“ததாகாதரே… பண்படாத மானுட உள்ளத்தின் பலவீனத்தை பெண்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் வென்று விட முடியும் என்று எண்ணுகிறீர்களா? அச்சமறுத்தவர் எதைக் கண்டு அஞ்சுகிறீர்கள்?”

காற்றில் தீபச்சுடர் படபடத்தது.

தொலைவிலெழுந்த வெளிச்சப்புள்ளிகள் அருகருகே நகர்ந்து வந்தபோது அவை பிக்குகள் என்றாயின. அவர்கள் ஏந்திய விளக்கும் எடுத்து வரும் உணவுமாக பர்ணசாலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கிளம்ப எத்தனித்து தன்னிடம் விடை கோரி நின்ற சுஜாதைக்கு அவர் தலையைசைப்பால் விடைக் கொடுக்க அவள் கீரைக்கூடையை எடுத்துக் கொண்டு சரிவில் இறங்கி கிராமத்தை நோக்கி நிதானமாக நடக்கத் தொடங்கினாள்.

ஆஷாடமாதத்து முழுநிலவு மேலே தவழ்ந்துக் கொண்டிருந்தது. அவர் நோக்கிக் கொண்டிருந்தார். அவர் விழிகள் மூடியிருந்தன.

                                     ***

நவம்பர் 2026 காலச்சுவடு



மைத்ரேயி

வான் கருங்கூரையென கவிழ்ந்திருக்க அவற்றின் மீது தெளித்து விட்டனபோல் விண்மீன்கள் பரவிக் கிடந்தன. எங்கோ விழுந்துக் கொண்டிருந்த அருவியின் ஓசை இரவில் சீராக ஒலித்துக் கொண்டிருந்தது. ஓடையில் நீரருந்திக் கொண்டிருந்த மானுக்கு நீர் அதனுருவை காட்ட நிலவு அதனை இரசித்துக் கொண்டிருந்தது. பறவைகள் சிந்தையால் வானை நோக்கியபடி மரக்கிளைகளிலும் பொந்துகளிலும் கூடுகளிலும் அடைந்துக் கிடக்க, அதன் குஞ்சுகள் கிளைகளின் ஊசலாட்டத்தில் மயங்கிக் கிடந்தன. 

மைத்ரேயி அவ்வட்ட வடிவ குடிலின் படலைத் திறந்து வெளியே வந்தாள். மண்ணாலான தரையும் வட்டமான மூங்கில் சுவரும் அடக்கி வைத்திருந்த குளிரை வெளி வெளிச்சமிட அதை அனுபவிப்பவள் போல வாயை திறந்து மூச்சு விட அது பெருமூச்சு போன்று ஒலித்தது. குடிலின் இருபுறமும் அமர்வதற்கேற்ப அமைக்கப்பட்டிருந்த நீள்பீடங்கள் காற்றில் சில்லிட்டிருந்தன. திண்ணை சிறு மண்டபம் போல் நீட்டப்பட்டு மரத்துாண்களால் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளிருந்ததை விட வெளிப்பார்வைக்கு குடில் இன்னும் இருண்டிருந்தது.  இருள் என்பது குறைந்த ஒளி என்று யாரோ உச்சரித்த சொற்கள் அவள் நினைவில் எழுந்தன. மாணக்கர்களின் குடில்கள் குந்தி அமர்ந்திருக்கும்  வேழம் போன்றும் மலைகள் பெற்றெடுத்த சிறுகுன்றுகள் போன்றுமிருந்தன. புதர்களை காற்று தழுவிக் கொண்டபோது அவை சிம்மம் போல பிடறி சிலிர்த்தன. பிருகதாரண்யகம் என்றழைக்கப்படும் அவ்வேதவனம் இரவை தான் அமைந்திருந்த அடர்வனத்திடம் ஒப்படைத்து விட்டு வேத ஒலிகளற்ற அமைதிக்குள் ஆழ்ந்திருந்தது. 

அவள் குளிரை தணிப்பதுபோன்று கைகளை முன்புறம் கட்டிக் கொண்டு வேள்வி மண்டபத்தை நோக்கி நடந்தாள். அகன்ற பாதை ஈராள் செல்லும் வழியென குறுகியிருந்தது. அதன் கால்படாத பாகமெங்கும் புல்லின் விதைகள் முளைக்கும் முனைப்புடனிருந்தன. மழை அதன் தருணம். வேள்விக்குண்டங்களில் குவிந்திருந்த சாம்பலில் அணையாதிருந்த நெருப்பு கங்குகள் சிவந்த மூக்குடன் எட்டிப் பார்த்தன. குண்டங்களை தழுவி எழுந்த காற்று லேசான வெதுவெதுப்பிலிருந்தது. அமமண்டபத்தின் நீள்அரங்கில் அமைக்கப்பட்டிருந்த குருபீடத்தில் ஒளிர்ந்த நெய்விளக்கு பறவையின் கூட்டுக்குள் மாட்டிக் கொண்ட மின்மினிப்பூச்சியென மினுக்கியது. பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்டிருந்த தரையின் மீது இரவை நழுவ விடக்கூடாத தவிப்பில் கரையான்கள் விறுவிறுப்பாகப் பரவிக் கொண்டிருந்தன. அவள் பாறையில் வடியும் வெண்ணிற அருவியை பிய்த்தெறிந்தது போன்று விரவிக் கிடந்த விண்மீன்கள் நிறைந்திருந்த வானை நோக்க, அது  நள்ளிரவு என்றது. யாரோ தன்னை நோக்கும் உணர்வு தோன்ற அவள் திரும்பியபோது திடுக்கிட்ட அவ்விழிகள் நீண்டு மான் உருக் கொண்டன. அது தன் பின்னோடு வந்ததா? அல்லது அங்கேயே நின்றுக் கொண்டிருந்ததா? உற்று நோக்கியபோது அதன் உருளை விழிகள் மருண்டன. அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது எங்கோ ஓடி மறைந்தது. உயிரச்சம் கொண்டதோ? பொருளில்லாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன?

பிருகதாரண்யகத்தில் அதன் முதலாசிரியரின் மெய் தேடலானது அவளது கணவர் யாக்ஞவல்கியரால் தொகுக்கப்பட்டு கல்வியாக கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு அவர் தன் மனைவி காத்யாயினியோடும் மகன்களோடும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் மைத்ரேயி தன்னையும் அப்பயணத்தில் இணைத்துக் கொண்டிருந்தாள். அவர்களின் மையக்குடில்களை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மாணக்கர்களின் குடில்களில் விடியல் தொடங்கும் முன்பே அலுவல் தொடங்கி விடும். கிழக்கில் கதிரவன் எழுகையில் பசுக்களின் பால் மடிகள் வற்றியிருக்கும். கழனிகள் நீர் கண்டிருக்கும். ஆதவன் ஓடை நீரில் செம்மஞ்சளென படர்ந்து, குன்றின் பின்னிருந்து ஒளிர்ந்து பின் எழுந்து தன்னை வெளிக்காட்ட துவங்கும் முன் கல்வி பயிலுவதற்காக நகர்களிலிருந்து மாணவர்கள் வரத் தொடங்கி விடுவர். அரசசபைகளிலிருந்து ரிஷிகளுக்கு அழைப்போ குருநிலைக்கு நன்கொடைகளோ ஏந்தி கொண்டு தேர்கள் அங்கு வரலாம். தங்கள் குரு மரபை நிலைநிறுத்த வேற்று மரபிலிருந்து ரிஷிகள் வருவதும் குருவை மறுத்து அவரிடம் முரண்பட்டு இங்கிருக்கும் கல்வியை ஏற்க மாணக்கரும் வரலாம். 

அவள் இருளில் ஆழ்ந்திருந்த கண்களை மீட்டுக் கொண்டாள்.  இத்தனை இருளும் பகலொளியில் எங்கு சென்று தன்னை ஒளிந்துக் கொள்கின்றன? கரிய கோடுகளென தெரியும் மலைகளை மினுக்க வைக்கும் பகலொளி இரவுகளில் எங்கு செல்கிறது? மலர்களும் மலைகளும் விண்ணும் மண்ணும் நதியும் காடும் ஏந்திக் கொண்டு வரும் வண்ணங்கள் இவ்விருளுக்குள் எங்கிருக்கிறது? இருளென்றும் ஒளியென்றும் ஏதுமில்லையெனில் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும்தான் என்ன?

“மைத்ரேயீ…”

யாரோ அழைத்தது போலிருந்தது.  அது அவளுள் எழுந்த ஒலி. அவள் தன்னை குனிந்து நோக்கிக் கொண்டாள். மரவுரி தரித்த உடலில் இன்னும் இளமை தீர்ந்து விடவில்லை. ஏவலும் காவலும் காதலும் சூழ்ந்த உலகியல் ஏன் தன்னுடன் என்னை அணைத்துக் கொள்ளவில்லை? அதற்காக அவள் மணம் துறந்தவளும் அல்ல. மனைவியும் மைந்தர்களும் கொண்ட தந்தையின் வயதையொத்த யாக்ஞவல்கியர் என்ற புகழ்பெற்ற ரிஷியுடன் எது தன்னை இணைத்தது? எனது மெய்ஞான தேடலா? நான் சந்நியாசம் தேடியே இல்லறத்தை அடைந்தேனா? அவள் ஆழுள்ளத்தை கூர்ந்து நோக்கினாள். நான் வருந்துகிறேனா? அப்படியானால் எது என்னை வருத்துகிறது? முடிக்காமல் வந்து விட்ட உலகியல் கடமைகளா?  இக்கேள்வி இவ்வளவு காலம் கழித்து இப்போது ஏன் என்னுள் எழுகிறது? யாக்ஞர் இங்கிருந்து செல்லவிருக்கிறார் என்பதனாலா? எனில் அவரை மட்டுமே வாழ்வென கொண்டிருந்தேனா? அதுதான் உண்மையா? அவ்வுண்மைதான் என் உறக்கத்தை போக்கி விட்டதா? இருள் மெல்ல அசைந்தது. காத்யாயனி அங்கு வந்திருந்தாள்.

“உறங்கவில்லையா மைத்ரேயீ… நீ எழுந்து வருவதை கண்டேன். திரும்பி விடுவாய் என்றெண்ணி காத்திருந்தேன்”

“ம்ம் அக்கா”

“நம் கணவர் துறவறம் மேற்கொண்டு இவ்விடம் நீங்கி செல்லவிருப்பதாக கூறியது உன்னை வருத்துகிறதா?”

மைத்ரேயிக்கு தமக்கையின் இயல்பான மனநிலை சற்று ஆச்சர்யமாக இருந்தது. 

“ரிஷிப்பத்தினிகளுக்கு இது ஒன்றும் புதிதல்லவே பெண்ணே” என்றாள் ஆறுதலாக.

”ஆம் அக்கா..”

“பிறகேன் எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறாய்”

“அது எதை என்றுதான் சிந்திக்கிறேன்” லேசாக புன்னகைத்தாள். 

“நான் கூறட்டுமா? கணவர் நம் இருவருக்குமானவர் என்றாலும் நான் பிரவிருத்தி மார்க்கம் ஏற்று இல்லறம் கொண்டு மகன்களை பெற்றவள். நீயோ நிவிருத்தி மார்க்கத்தை தழுவியவள். இறுதிக்காக மைந்தர்களைப் பெறவில்லை என்று வருத்தம் கொண்டிருப்பாய். அல்லது மனிதனின் இந்த உடம்பு பிளந்த வேர்க்கடலையின் பாதியை போன்றது. ஒருபாதி ஆண் என்றால் மறுபாதி அவனது மனைவியாலேயே நிரப்பப்படுகிறது என்று கூறிய அவர் பாதி கடலைகளை இங்கே விட்டு விட்டு செல்வது குறித்து கவலைக் கொண்டிருப்பாய்” படபடப்பாக பேசி விட்டு “அப்படிதானே பெண்ணே…” என்றாள். 

“இரண்டுமே இல்லை அக்கா. நான்தான் மெய்வழிநோக்கும் என் பயணத்தை இளமையிலேயே வகுத்துக் கொண்டு விட்டேனே”

“விதேகத்தின் மாமன்னர் ஜனகரும் மெய்ஞானிதான். ஆயினும் ஞானம், கர்மம் என்ற இரண்டு வாள்களையும் சேர்த்து சுழற்றவில்லையா?”

“அக்கா… ஒருவரை போல் ஒருவர் இருக்க முடியாதல்லவா… மாமன்னர் ஜனகரின் அவையில் நடைபெறாத மெய்தேடல்களா? ஆனால் அங்கிருக்கும் அமைச்சர்களோ மற்றவர்களோ அதனுள் ஆழவில்லையே? லௌகீகம் சார்ந்த இன்பங்களுக்கு குறைவற்ற எனது இல்லம் கூட என்னை எந்த வகையிலும் கவரவில்லை. நம் கணவர் தான் உருவாக்கிய இந்த குருநிலையையும் மாணவர்கள், மைந்தர்கள், நீங்கள், நான் என அனைத்தையும் உதறி விட்டு செல்ல எண்ணுகிறார் எனில் அதை விடவும் வேறேதோ உயர்ந்த ஒன்றை கண்டுக் கொண்டிருக்கலாம் அல்லவா?”

“உதறுவது அவருக்கு புதிதல்லவே மைத்ரேயி? தனது குரு வைசம்பாயரையே உதறி விட்டு வந்தவரவல்லவா அவர்?” என்றபோது காத்யாயினியின் வார்த்தைகளில் கனம் கூடியிருந்தது. அவள் அகமறிந்து கலவி கொண்டவர் ஆழமறிந்து கல்வி கற்பிக்க எண்ணம் கொள்ளவில்லை என்ற ஏக்கமிருந்தது. 

“குருவிடமிருந்து கல்வியை பெறுவது என்பது அதை அங்ஙனமே மனனம் செய்வதல்ல. அதனை புள்ளியென கொண்டு அதிலிருந்து சித்திரத்தை எழுப்புவது அல்லவா? சித்திரங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே. மாறுபட்ட தன்மைகளோடு அவை இணைந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வைசம்பாயனரே கௌஷீதக குருநிலையில் முரண்பட்டு  விலகி வந்தவர்தானே? யாக்ஞர் தன் குருவிடமிருந்து தான் பெற்றவற்றையும் கற்றவற்றையும் உதறி விட்டு பிறிதொன்றில்லாத மெய்மையை தேடி குருவையடைந்ததில் உருவானதுதானே இந்த பிருகதாரண்யகம்” வார்த்தைகள் படபடப்பாக விழுந்தன.  

“என் மீது கோபம் கொண்டு விட்டாயா மைத்ரேயி?” எதையோ மறைக்க எதற்குள்ளோ ஆழ்ந்தது போன்றோ யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை வேறு யாரிடமோ கேட்பது போன்றோ இருந்தது காத்யாயனியின் குரல். 

“அக்கா.. இறைவன் என்ற மாபெரும் ஜோதியிலிருந்து தோன்றிய சுடர்கள்தானே நாமனைவரும். இதில் நான் நீங்கள் என்ற பேதமெல்லாம் ஏது அக்கா” 

காத்யாயினி மைத்ரேயியின் அருகே நெருங்கி அமர்ந்து அவள் கையை எடுத்து தன் தொடை மீது வைத்துக் கொண்டாள்.

“பின் ஏன் வருந்துகிறாய் மைத்ரேயீ? நானும் உன்னை போல உலகியலின் மீது நாட்டமின்றியே இருந்தேன். இவரை மணக்கும்போது கூட மனைவி என்ற நிலையை விட மாணவி என்ற நிலையையே விரும்பினேன். ஆனால் நினைப்பதனைத்தும் நடந்து விடுமா என்ன? சரி.. அதிருக்கட்டும். நீ அவரை முதன்முதலில் எங்கு சந்தித்தாயாடீ பெண்ணே?” குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது. 

உருளை விழிகள் அவர்களை விழித்து நோக்கின. காத்யாயினி நாவை மடக்கி மெல்லிய ஓசையெழுப்ப, மான் அவளை உரசிக் கொண்டு வந்து நின்றது. அவள் அதன் கழுத்தை தடவிக் கொடுக்க அது உடல் குழைத்தது. 

“அக்கா… ஜனகரின் அவையில் பிரம்மவாதினியான கார்க்கி வாசக்னவீயுடன் நடந்த மெய்விவாதத்தின்போது தான் அவரை முதன்முதலில் அணுகி நோக்கினேன். எது எதனை வியாபித்துள்ளது என்பதை பற்றிய கார்க்கியின் கேள்விகள் ஸ்துாலமான பூமியில் தொடங்கி சூட்சுமத்தை நோக்கி நுண்ணியதாகிக் கொண்டே வர அவருடைய பதில் பிரம்மலோகத்தில் வந்து முடிந்தது. விவாதம் என்னவோ அத்தோடு முடிவடைந்து விட்டது. ஆனால் அவர்கள் விடையென ஆகவியலாததும் வினாவென எழவியலாததுமான  மெய்மையை உணர்ந்திருந்திருக்க வேண்டும்”

காத்யாயனியின் கை தடவலை நிறுத்தியிருந்தது. 

“அவர் அந்த மெய்மையை நோக்கி தன்னை செலுத்திக் கொள்ள விழைகிறார் என்று நினைக்கிறேன். அதை அறிந்துக் கொள்ளும் ஆவல் என்னை உந்துகிறது அக்கா”

“நீ அவருடன் செல்ல விழைகிறாயோ?”

“இல்லறம் துறக்கும் ஒருவர் தன் துறவுநிலைக்கு மனைவியையும் துணைக்கழைத்துக் கொண்டார் என்று நீங்கள் கேள்வியுற்றதுண்டா”

“அவர் துறவு நிலைக்கொண்டபின் இக்குருநிலைக்கு ஆசானென மீள மாட்டார் என்று கருதுகிறாயா மைத்ரேயீ?” 

அவரும் அதையேதான் கூறினார். இருள் பிரியாத அந்நேரத்தில் யாக்ஞவல்கியரின் குடிலில் ரிஷியும் அவரது பத்தினிகளும் கூடியிருந்தனர். பீடத்தின் மீது விரிக்கப்பட்டிருந்த தர்ப்பையாலான விரிப்பில் ரிஷி அமர்ந்திருக்க அவரெதிரே பெண்கள் இருவரும் நீளமாக விரிந்திருந்த தர்ப்பை பாயில் அமர்ந்திருந்தனர். பின்னிருந்த மாடத்தில் ஒளிர்ந்த நெய்விளக்கு அவருக்கு ஒளி வட்டமிட்டது. அவர் அன்பே உருக்கொண்டவர் போலிருந்தார்.  

பெண்களே… இதுநாள்வரை என்னையும் இக்குருநிலையையும் எவ்வித பிறழ்வோ பிசகோ இன்றி நீங்கள் இருவரும் கவனித்துக் கொண்டீர்கள்” அவர் இவ்வார்த்தைகளை ஏற்கனவே முடிவு செய்தவர் போல பேசினார். குரல் கனிந்திருந்தது. பொருத்தி வைத்தது போன்ற நீண்ட நாசி அவருக்கு. அளவான காதுகளும் இதழ்களை பாதியளவுக்கு மறைத்து நெஞ்சு வரை வளர்ந்திருக்கும் நீள்தாடியுமாக அமர்ந்திருந்தவரின் கண்களில் கருணை ஒளியென பொருந்தியிருந்தது.

“உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் நான் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டவன் எனினும் நான் இங்கிருந்து அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையிலுள்ளேன்” 

குடிலை சாத்தியிருந்த படலிலிருந்து எழுந்த பசும்புல்லின் மணம் அறையை நிறைத்திருந்தது. 

“நான் என் வாழ்வின் இந்நிலையை விட்டு விட விரும்புகிறேன். இங்கிருந்து செல்ல விழைகிறேன். அவர் சற்று நிறுத்தி விட்டு, “அதன் பொருட்டு நான் பராமரித்து வந்த செல்வத்தை உங்கள் இருவருக்கும் பிரித்து தர வேண்டும். கணவனாக இது என் கடமை என்று கருதுகிறேன்” மீண்டும் பேச்சை நிறுத்தி விட்டு அவர்களை கூர்ந்துக் கவனித்தார். 

“செல்வம் என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் யக்ஞரே?” என்றாள் மைத்ரேயி.

“இங்கு பயிலும் மாணவர்கள், அவர்களின் பராமரிப்புக்கான அளிக்கப்படும் செல்வம், அவர்களது குடில்கள், இங்கிருக்கும் கழனிகள், பசுக்கள், அரசர்களின் ஆதரவு…”

அவரை முடிக்கவிடாது குறுக்கிட்டு “இவற்றையெல்லாம் எங்களுக்கு பிரித்தளிக்க எண்ணுகிறீர்கள். அப்படிதானே?” என்றாள் மைத்ரேயி.

“ஆம் பெண்ணே… நானில்லாத நிலையில் இனி இவையே உங்களை காக்கும். உங்கள் முதுமை சிறக்க இச்செல்வம் தேவைப்படும் என்பதை நான் அறிவேன்”

“நீங்கள் ஈட்டியவற்றை எங்கள் முதுமைக்காக அளித்து விட்டால் உங்களின் இறுதியை நீங்கள் எப்படி கழிப்பீர்கள்? உழைத்து வருமானம் ஈட்டும் வயதையெல்லாம் நீங்கள் கடந்து விட்டீர்கள் அல்லவா?” என்றாள் காத்யாயனி.

“காத்யாயனி.. என் அன்பே… நான் உழைத்து பிழைக்கப் போவதில்லை. இச்செல்வமும் எனக்கு தேவையில்லை. இல்லறம் துறந்து தவவாழ்வில் ஈடுபடபோகும் எனக்கு அழியக்கூடிய இச்செல்வம் பெரும் தடைகளே”

“அப்படியானால் அழியக்கூடிய இச்செல்வத்தை எங்களுக்களித்து விட்டு அழிவற்ற ஒன்றை நீங்கள் தேடி செல்ல போகிறீர்களா யக்ஞரே?” இடைபுகுந்தாள் மைத்ரேயி.

“ஆனால் இவைகளற்ற வாழ்வு உங்களுக்கு துயரளிக்கக் கூடியதல்லவா?”

காத்யாயினி “நீங்கள் இங்கிருந்து நீங்குவதும் துயரளிக்க கூடியதே” என்றாள். 

“எவ்வகையிலாவது அது நிகழ்ந்துதானே ஆக வேண்டும் காத்யாயினி”

“யக்ஞரே… நீங்கள் அழியும் தன்மைக் கொண்ட இச்செல்வத்தை விட, எங்கள் மீது கொண்டிருக்கும் அன்பை விட உயர்ந்த ஒரு நிலையை உணர்ந்திருக்க வேண்டும். அதுவே உங்களை வேறிடம் செலுத்துகிறது. நான் கோருவதும் அதையே. எது அழியவியலாத பெருநிலையை அளிக்குமோ அதை எங்களுக்கு அளியுங்கள் சுவாமி”

யாக்ஞவல்கியர் பரிவுடன் அவளை நோக்கி விட்டு, “மைத்ரேயி… பிரபஞ்சத்தின் துாண்டுசக்தியே அன்புதான். ஆனால் யாரும் யாருக்காவும் நேசிக்கப்படுவதில்லை என்பதை அறிவாயா நீ?” என்றார்.

எங்கிருந்தோ வந்த பறவையொன்று கூரையின் இடைவெளிக்குள் புகுந்து  குறுக்குக்கழியில் அமர்ந்துக் கொண்டது. சிவந்த நீள்மூக்கும் தலையின் மையத்தில் வெண்ணிற பொட்டும் மஞ்சள் பூசிய மேற்புறச் சிறகும் சாம்பல் வண்ண உடலுமான அதன் மீது விளக்கொளி ஆழ்மஞ்சள் பூசியிருந்தது.

“இவ்வுலகம் ஒன்றின் மீது ஒன்று கொண்டிருக்கும் நேசமென்பது அவ்வொன்றின் மீதானதல்ல. ஏன்… நீங்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பும் நான் உங்கள் மீது கொள்ளும் அன்பும் கூட ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பல்ல. இங்கு அளிக்கப்படுவதும் பெறப்படுவதுமான அன்பு அனைத்தும் ஆன்மாவின் பொருட்டே. ஆன்மாவிற்காகவே அனைத்தும் நேசிக்கப்படுகின்றன. இசைக்கருவிகளில் அதனதன் ஆதாரநாதமின்றி அதில் ராக ஆலாபனைகள் செய்ய முடியாததுபோல ஆன்மா என்ற ஆதாரமின்றி படைப்புகள் எதுவும் நிகழ முடியாது. ஆன்மாவிலிருந்து ஒரு பொருளைப் பிரித்து அதனிடம் பற்றுக் கொண்டால் அப்போதே அதற்கொரு பிரதிச்செயல் வந்து விடும். அதன் விளைவு துன்பமும் துயரமும்தான். கடலில் கரைந்து விடும் உப்பை போன்று இறைவனும் பிரபஞ்சப் பொருள் எல்லாவற்றுள்ளும் பிரிக்க முடியாதப்படி கலந்திருக்கிறார். மைத்ரேயி… இந்த பிரபஞ்சம் முழுவதும் அவரிடமிருந்து தோன்றி அவரிடமே ஒடுங்குகிறது. இதற்கப்பால் அறிவோ அழிவோ மரணமோ இல்லை”

“யக்ஞரே… தனித்துவங்களாக உள்ள ஒவ்வொன்றின் உள்ளேயும் பரம்பொருளே ஒளிர்கிறார் எனில் தீமைகள் ஏன் நிகழ்கின்றன?”

“மைத்ரேயி… குழந்தைப் பருவத்தில் நீ தீயை நெருங்கும்போது உன் தாயார் என்ன சொல்வார்?”

“நெருங்காதே… சுட்டு விடும் என்பார்”

“இன்று வேள்விக் குண்டங்களில் வளர்க்கப்படுவதும் அதே நெருப்புதானே? அதனை நீ நெருங்கவில்லையா? குழந்தை பருவத்தில் நாம் நல்லது என்று எண்ணிய எத்தனையோ பொருட்கள் உண்மையில் தீயவையாக இருந்துள்ளன. தீயவை என்றெண்ணுபவை அவ்வாறில்லாமல் போவதுமுண்டு. நன்மை தீமை என்பன கருத்தில் ஏற்படும் மாறுபாடு மட்டுமே. உண்மையே நிலையானது. எப்போது அறியாமையை களைந்து ஆன்மாவின் இனிமையை காண்கிறோமோ அப்போதே நாம் உண்மையை உணர்ந்தவர்களாவோம். பொறிகள் சிதறுவதைப் போல் நாம் இறைவனிடமிருந்து தோன்றியுள்ளோம். அவரை அறிந்ததும் அவரிடமே கலந்து விடுவோம். நாமேதான் எங்கும் நிறைந்த பொருள்”

“யக்ஞரே… இவ்வுணர்வை அடைந்த பிறகு தனிப்பட்ட உணர்வு ஏதும் இருப்பதில்லையா?”

“ஆன்மாவை அறிந்த ஒருவன் ஆன்மாவாகவே ஆகி விட்ட பிறகு தனி உணர்வு எழுவது எங்ஙனம்? எதை அறிவது? எந்த ஒன்றால் இந்த அனைத்தும் அறியப்படுகிறதோ அதனை எதனால் அறிவது? அவர் நிறுத்தி விட்டு தொடர்ந்தார், என் அன்பே… அறிவழிந்து அறிவென அமர்ந்திருப்பவனே அறிபவன். அவனை எதனால் அறிவது?”

இடைக்கழியில் அமர்ந்திருந்த பறவை தலையை சாய்த்துக் கொண்டு நோக்கியபோது அதன் கண்கள் பளபளத்து தெரிந்தன. காடு வண்ணம் கொள்ள காத்திருக்க கரிச்சான்களும் கணவாய்களும் அதனை வரவேற்க மென்வாய் திறக்கத் தொடங்கியிருந்தன. 

“யக்ஞரே… இந்த அறியாமையிலிருந்து விடுதலை பெறுவது எங்ஙனம்?”

“அன்பே மைத்ரேயி… தனித்துவங்களாக உள்ள ஒவ்வொன்றின் உள்ளேயும் அவற்றின் மூலமாகவும் எல்லையற்ற பரம்பொருளே ஒளிர்கிறார் என்ற அறிதலின் வழியே அனைத்தும் ஆன்மாவின் வெளிப்பாடுகளே என்றுணர்ந்துக் கொள்வதே விடுதலை”

“யக்ஞரே… அந்த அறுதி ஆன்மீக நிலையை அடையும் மெய்யான செல்வத்தை எங்களுக்கும் அளித்திடுக” மைத்ரேயி அவரை குனிந்து வணங்கினாள். 

“அன்பே… நன்மை தீமை என்ற பிரிவினையின்றி உலகில் தோன்றியுள்ள அனைத்தும் அவரே. உடலின் எல்லா ஆற்றலிலும் இருப்பதும் அவரே. புலன் அனுபவங்கள் அனைத்தும் அவரே. தன்னொளியாக உடலில் திகழ்பவர் அவரே. அவரே அனைத்தும். அவரே ஆன்மா. தன்னொளி கொண்டவரும் அழிவற்றவருமான அவரே இந்த உலகின் ஆனந்தம். அவரே பிரம்மம்”

“எனில்…” மைத்ரேயியின் குரல் தடுமாறியது.

அவர் உபதேசித்தார். “ஆம்… நானே பிரம்மம்… நான் கடவுள். அஹம் பிரம்மாஸ்மி”

”குருவே… குருவே…” கூப்பிய அவளின் கரங்கள் நடுங்கின.   

வழக்கத்திற்கும் மாறாக முன்னரே வந்து விட்ட ஆதவன் படலின் இடுக்குகளில் நுழைந்து குடிலுக்குள் தலை நீட்ட, ஒளியைக் கண்டதும் அப்பறவை ட்டுரூ… என்று மகிழ்ச்சியொலி எழுப்பிக் கொண்டு பறந்து விட்டதை தவிர அங்கு வேறு ஓசை ஏதும் எழவில்லை. 

கணங்கள் நழுவிக் கொண்டிருந்தன. அவள் நிமிர்ந்தபோது அவர் கண்கள் மூடி அமர்ந்திருப்பதைக் கண்டாள். கேட்க எண்ணிய கேள்வியை வாய்க்குள் விழுங்கிக் கொண்டாலும் மனம் உச்சரித்துப் பார்த்தது. குருவே… பிரம்மம் நாமெனில்… குருவே… நீங்கள் எதை தேடி எங்கு செல்ல விழைகிறீர்கள்…?

அவள் அவரை உற்று நோக்கியபோது அவரது மூடிய இமைகளுக்குள் விழிகள் நிலையற்று உருள்வதைக் கண்டாள். 

சுழற்சி