Search This Blog

Thursday 1 August 2024

சுதந்திரத்திற்கு பின் திரு.காந்தி

 


இந்தியா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தில் பணி செய்வதற்காகத் தங்கி வி்ட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மதத்தின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கும் மிக மிக மோசமான நிகழ்வுகளை கண்ணுற்று அதிர்ந்துப் போயினர். இது… இது… இரண்டாம் உலகப்போரில் நாங்கள் கண்டதை விட இது மிகவும் மோசமானது… மிக மோசமானது… என்றனர் அதிர்ச்சி விலகாமல்.

இரு நாடுகளிலும் தப்பியோடுதல் அதிகரித்த போது எல்லைப்பகுதிகளில் ரயில் பெட்டிகளில் கூட்டம் கூட்டமாய் வந்த அகதிகள்தான் தாக்குதலின் முக்கிய இலக்குகள் ஆயினர். ரயில் பாதைகள் பெயர்க்கப்பட்டு வண்டிகள் கவிழ்க்கப்பட்டு உயிர்கள் எடுக்கப்பட்டன. ரயில்கள் நிலையங்களில் நின்ற போதோ அல்லது வன்முறை கும்பல் அபாய சங்கிலியை இழுத்து வெட்டவெளிகளில் ரயில்களை நிறுத்தியோ உயிர்களை பிணங்களாக்கி அதே ரயில்களில் அனுப்பி வைத்தனர். இந்தியாவில் சுன்னத் செய்யப்பட்டவர்களும் பாகிஸ்தானில் சுன்னத் செய்யப்படாதவர்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். பெண்களின் நிலையோ கூறத்தக்கதாக கூட இருக்கவில்லை. மதத்தின் மூடாக்குகளுக்குள் குழந்தைகளின் மரணக் கதறல்கள் தேய்ந்துப் போயின. ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் பெட்டிகளின் கதவுகள் வழியாக ரத்தம் வழிந்தது.

அவர் சந்தேகப்பட்டு பின் சந்தோஷப்பட்ட கல்கத்தாவின் அமைதியின் மீதும் கல்லெறியப்பட்டிருந்தது. தலைநகர் டில்லியிலும் அதே நிலைமையே. கடும் குளிர் வாட்டி வதைத்த டிசம்பர் மாதத்தின் பின்னாள் ஒன்றில் அவர் வருத்தத்தில் தோய்ந்தெடுத்த வார்த்தைகளை வேதனையின் வலியிலிருந்து பிரசவிக்கிறார்.

காந்தியும் அகிம்சையும்

 

நீங்கள் மனிதர் ஒருவரை எங்களிடம் அனுப்பி வைத்தீர்கள்… நாங்கள் அவரை மகாத்மாவாக்கி உங்களிடம் திருப்பியளித்திருக்கிறோம்…

நாங்கள் அவரை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உங்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் நீங்கள் அவரை கொன்று விட்டீர்கள்…

தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கூறுவது போலவும் இந்தியாவிலிருந்து வெளியேறிய பிரிட்டிஷார் உரைப்பது போலவுமிருக்கும் இக்கூற்றுகளின் பொருளை முழுமையாக உணராதவர்கள் கூட இதனை இயல்பாக பயன்படுத்துவார்கள். மேடை பேச்சுகளிலோ கட்டுரைகள் எழுதும்போதோ அவரை பற்றி ஏதுமறியாதவர்கள் கூட சொல் அலங்காரத்துக்காகவே பொருள் அலங்காரத்துக்காகவோ இதனை சேர்த்துக் கொள்வதுண்டு. அவரை உணர்ந்தவர்கள் இக்கூற்றுகள் அவரை மனிதருள் மேம்பட்டவராகவும் அவர் ஒரு புதையல் அல்லது பொக்கிஷம் போன்று சித்தரிக்கப்படுவதையும் அறிந்து பெருமிதம் கொள்ள முடியும்.