Search This Blog

Tuesday 30 July 2024

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு - நீலம் நாவல் குறித்த ஒரு பார்வை

 ததும்பும் சொற்கள்

 


சொற்கள்… சொற்கள்.. சொற்கள்.. பெருகி வரும் சொற்கள்… அணியணியான சொற்கள்.. மணிமணியான சொற்கள்… உயிருக்குள் உயிர் நுழைந்து உயிரறுத்து வெளியேறி உயிரென எஞ்சி நிற்கும் உயிர்சொற்கள். மெய்யெனத் திரண்டு மெய்யுள் நிறைந்து மெய்யே அறுதியென்றாகும் காமம் கொண்ட மெய்சொற்கள், தாபமும் தவிப்பும் மோகவும் காதலுமாக உயிருள் மெய் கலந்த உயிர்மெய் சொற்கள். ததும்பி நிற்பன, பொங்கி வழிவன, திகைந்து நிலைப்பன, உயிர் அறுப்பனவென உயிரின் வழியெங்கிலும் சொற்கள் பாதையமைக்க அதனுள் நீலம் வழிந்தோடுகிறது. அதில் ராதை பிச்சியென உறைகிறாள். நிறைகிறாள், மிதக்கிறாள், திரள்கிறாள், அமிழ்கிறாள், ஆனந்திக்கிறாள். பெருகி நிற்கும் தன் உறவுலகுள் தன்னுலகு ஒன்றை கண்டுக் கொள்ளும் பித்தி அவள். பெற்றவளிடமிருந்து வளர்க்கப் போகிறவளுக்கு கை மாறும் நாளன்று அச்சின்னஞ்சிறு சிசு பிஞ்சுப்பாதங்களோடு அவளுலகில் நுழைகிறான். நுழைந்தவுடன் அவளுலகு மூடிக் கொள்கிறது. அவளுக்கும் அவனுக்குமான அவ்வுலகில் யாருக்கும் அனுமதியில்லை. புத்தம்புதிதாய் குடிநிறைந்து நிற்குமவளை ஊரும் உறவும் கொண்டாடி களி்த்திருக்க, அவளோ உஷைப்பொழுதில் தன் மைந்தனை, காதலனை, நண்பனை, பித்தனை தேடியோடுகிறாள். எண்ணமெல்லாம் அவனே… சொந்தமெல்லாம் அவனே… சித்தமெல்லாம் அவனே. ஒவ்வொரு சொல்லும் அவனே ஒரு சொல்லும் அவனல்ல. 

காளிந்தியின் கரையோர கிராமமான பர்சானபுரியைச் சேர்ந்த ஆயர்குடித்தலைவர் ரிஷபானுவின் ஒரே மகள் அவள்.  ராதையின் தாய் கீர்த்திதை. மகளின் குடிநிறைவை தவிப்பும் பெருமிதமுமாக எதிர்க்கொள்ளும் அவர்களோடு ரிஷபானுவின் தம்பிகள் ரத்னபானு, சுபானு, பானு மற்றும் கீர்த்திதையின் தங்களைகள், தீர்த்தமதி, மேனகை, ஷஷ்தி, தாதிரி, கௌரி, தாதகி இவர்களோடு ரிஷபானுவின் தாய் சுகதை, கீர்த்திதையின் தாய் முகாரை, தாத்தா மகிபானு, பாட்டி இந்து, தாய்மாமன்கள் பத்ரகீர்த்தி, மகாகீர்த்தி, மாமியாரை மணந்த மாமன்கள் குசன், கசன் இவர்களோடு ராதையின் தமையன் ஸ்ரீதமன், இக்கூட்டம் போதாதென தோழியர் குழாமும் சேர்ந்துக் கொள்ள மலர்க்கிளையை காற்று அசைப்பது போன்ற அவ்வினிய நிகழ்வில் குலமே கூடுகிறது. கொண்டாடுகிறது, நெகிழ்கிறது, களிக்கிறது. ஆனால் ராதையின் எண்ணம் முழுவதும் அப்பச்சிளம்குழந்தையின்பால் ஒடுங்குகிறது. வளரிளம் பருவத்தில் தாயுடன் விலக்கம் கொண்டு குழந்தைமை உதிர்த்து கள்ளம் புகும் தருணத்தில்அவள் உள்ளம் புகுகிறான் அவன். 

ஆய்ர்குடியின் அழகான இளங்காலைகள் பசுக்கள் தொழுவங்களிலிருந்து அழைக்கும் குரலே இனியநாதம். அந்நாதவொலியில்அடியார்கள் நாதனைப் பற்றுவதுபு்போல ஆயர்கள் பசுவின் காம்பைப் பற்றுகின்றனர். அவை ஆனந்தமாக தலையசைத்து புல்லுண்ணும்போது எழும் கழுத்து மணியசைவில் ஆயர் குழந்தைகள் விழிக்கின்றன. கரையோரச் சோலைகளில் பறவைகள் கிளர்ச்சிக் கொண்டு குரலெழுப்புக்கின்றன. இளந்துாறல் பரவிய மென்வெளிச்சத்தில் பொங்கி பொங்கி எழுகிறது புள்வேதம். மையல் கொள்கிறது மணிப்பொழில். கிழக்கின் இளங்கதிர்களால் யமுனை ஒளிப்பெருக்காக மாறியபோது ராதை குசவனத்தையும் கொன்றை வனத்தையும் செண்பகவனத்தையும் கடந்து பர்சானபுரியிலிருந்து கோகுலம் வருகிறாள். 

எவர் நடந்துச் செல்வதற்கான பாதை அவள்? யாதொன்றும் யாரும் அறிந்திருக்கவில்லை. அன்னை பசுக்கள் கன்றை அருகழைக்க குரலெழுப்புவதுபோல கால் சலங்கைகள் இசையெழுப்ப, அவள் நீலம் நாடி நிலம் தாண்டுகிறாள். கோகுலம் அன்னைப் பசு நக்கி நக்கி துவட்டிய ஈரநாத்தடம் படிந்த மென்மயிர் உடலுடன் சிலிர்த்து நிற்கும் சிறு கன்றென குளிர்வானிலிருந்த எழுந்த தென்றலில் புல்பரப்புகள் படிய நின்றிருந்தது. கொதிக்கும் எண்ணெயில் நீர் விழும் ஒலியை போல ஊரெங்கும் கறவையொலி எழும்ப, இலைகள் தென்றலில் சலசலக்க, கன்று அன்னையே… என்றழைக்க, பசு, மகவே.. என்று குரலிசைக்க, புல்கூரைக் கவிழ்ந்த இல்லங்களின் முற்றத்துத் துாண்களில் கட்டப்பட்ட மத்துக்களால் முந்தைய பால் வெண்ணையாகி நெய்யாய் உருகி மணமாய் காற்றை நிறைக்க, நேற்றைய பால் வெண்ணெயாய் திரள, நுரைத்த புத்தம்புதிய பாலை ஞானத்தின் அமைதிக் கொண்ட சிறுபாற்குடங்கள் பெருங்கலத்தில் ஒழிந்தபின் முக்தியின் வெறுமையை அள்ளிக் கொள்ள, அவளும் சின்னஞ்சிறு பாற்குடமென்றாகி பெருங்கலம் தேடியோடினாள். அவளுக்கான கலம் ஊர்த்தலைவர் நந்தகோபரின் இல்லத்திலிருந்தது. இரண்டடுக்கு கூரைக் கொண்ட அப்புல் வீடு ஊரின் நடுவே இருந்தது. அதன் வாயிலில் நின்ற அண்ணாந்து அன்னையின் அன்னையின் அடிவயிற்றை நக்கும் இளம் கன்றைப் போன்று வானைத் துழாவிய நீலக்கடம்பும் காதல் தேங்கிய விழிகளென பளபளத்த இரட்டை மருதுகளும் வரவேற்பு தோரணமிட பசுஞ்சாணி தெளிக்கப்பட்ட முற்றத்தில் ஓரிரு வெண்மலர்களுடன் ஒரு பொற்கடலென பழுத்த இலை ஒன்று விழுந்துக் கிடக்க, அவள் அவ்வில்லம் நுழைகிறாள். 

அரையிருளில் தரையிலட்ட புல்பாயில் மரவுரி விரிப்பின் கீழ் ஒருக்களித்து கிடந்தது வாளாளும் விரிநீலம். ஓடும் கால்களென ஒன்றிலிருந்து ஒன்று தாவி எழுந்து நின்றன அதன் செவ்வல்லியிதழ்ப் பாதங்கள். முக்குற்றி மலரிதழென நகங்கள். தெச்சிப்பூங்கொத்தென விரல்கள். நீலக்குவளை மலர் குழாயென கணுக்கால்கள். கரண்டையில் எழுந்த சிறு மடிப்பு. நீலம் செறிந்த மூட்டுகள். அவள் நெகிழ்ந்து உருகினாள். இப்புவியாள இரு பாதங்களே போதுமே… ஏன் முழுதாக வந்தாய். பாதங்கள் புன்னகைக்குமோ? மெல்ல உட்குவித்து முகம் சுளித்து செல்லமாக சிணுங்குமோ, கட்டை விரல் உள் நெளித்து நாணங்கொள்ளுமோ..? அவள் உருகி மயங்கினாள். மயங்கி மயங்கி அவனது படிந்த சிறுபண்டியின் செவ்வரியிலும் சிறுபுயங்களில் விழுந்த கோட்டுக்கும் இறந்துப் போகிறாள். விரிந்த செவ்விதழ்களுக்குள் பால் விழுது தங்கிய ஈறு நுனிமொட்டு உயிருசுப்ப, மீண்டும் பிறந்து அவனின் கண்நீலக்கருமணியி்ன் மூக்கு வளைவின் அழுந்தலில் மீண்டும் இறக்கிறாள். அவனை தழுவி அள்ளியுண்டு அதன் பெருங்களிப்பில் ஏதும் எஞ்சாமல் சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து பித்தின் பெருவெளியின் விளம்பில் நின்று அவள் அவனேயென்றாகிறாள்.

 

விருஷ்ணிகுலத்து விடூதரின் கொடிவழி வாரிசும் வசுதேவனின் தந்தையுமான சூரசேனர் மதுராவுக்கு உரிமைக் கொண்டவர். ஆயினும் ஆட்சி விடூதரின் தம்பி குங்குரரிடம் கை மாறுகிறது. குங்குரரின் வாரிசுகளான உக்ரசேனர் மதுராபுரிக்கும் தேவகர் உத்தரமதுராபுரிக்கும் அரசர்களாகின்றனர். விதர்ப்ப நாட்டு வேடர்குல இளவரசி பதுமாவதியை மணக்கும் உக்ரசேனர் கம்சனை பெற்றெடுக்கிறாள். சூரசேனரின் ஆண்வாரிசான வசுதேவர் ஆயர்குடி வாழ்க்கையில் லயிப்பற்று மதுராபுரிக்குச் சென்று அங்கு உச்ரசேனரின் அரசவையில் அமைச்சராகிறார்.  பெண்வாரிசான பிருதை மார்த்திகாவதியின் போஜர்குலத் அரசர் குந்திபோஜரின் வளர்ப்பு மகளாகிறாள். குந்தியை மணந்து போஜர்களை இணை்து யாதவ குலங்களைத்தையும் ஆளும் முதன்மை கொள்ளாலாமென்பது கம்சனின் திட்டம். ஆனால் குந்தியோ அஸ்தினபுரியின் இளவரசை மணந்துக் கொள்கிறாள். 

அஸ்தினபுரியின் மீது பகைமைக் கொள்ளும் கம்சன் அவர்களின் பொது எதிரிதியான மகதத்தின் அரசன் ஜராசந்தனின் மகள் உறவுகளான ஆஸ்தி, பிராப்தி என்ற பெண்களை மணந்துக் கொள்கிறான். உத்தரமதுராபுரியை மதுராவுடன் இணைக்க முடிவு செய்கிறான். ஆனால் அதற்கு தேவகரின் நான்கு மகன்களை வெற்றிக் கொண்டாக வேண்டும். அதை விட உத்தரமதுராபுரியின் இளவரசியும் ஒன்று விட்ட தங்கையுமான தேவகியை தனது அமைச்சர் வசுதேவருக்கு மணமுடித்து அம்மண்ணை தனதாக்கிக்  கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வசுதேவருக்காக தேவகியை சுயம்வரத்தில் வெல்கிறான். 

வென்றெடுத்த மணமகளோடு மதுராபுரிக்குச் செல்லும் வழியில் முதுமகளொருத்தி பித்துப் போலாகி கம்சனிடம் கொடுஞ்செய்தி ஒன்றை சொல்கிறாள். யாதவக்குலங்கனைத்தையும் இணைத்து அதன் மையத்தில் அரியாசனம் அமைக்கவிழையும் மன்னனுக்கு தற்போதிருக்கும் ஆசனமே ஆட்டம் கண்டு விடும் என்றும் தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டவாது மைந்தன் தாய்மாமனின் உயிர்க்குடித்து தலைமுறை பழி தீர்ப்பான் என்றும் அவன் என்றுமழியா பெரும்புகழ் பெறுவான் என்றும் அப்பித்திமகள் கூறியதை கேட்டு குலம் நடுங்கிப்போன கம்சன் தங்கையையும் அமைச்சரையும் சிறையிலடைக்கிறான். அவர்களுக்கு பிறக்கும் ஏழுக் குழந்தைகளும் கொல்லப்படுகின்றன. எட்டாவதாக ஆவணி மாதம் அஷ்டமிரோகிணி நாளல் கிருஷ்ணன் வந்து பிறக்க, அவன் அங்கிருந்து கோகுலத்துக்கு மறைத்து எடுத்துச் செல்லப்பட்டு, கோகுலத்தில் வாழும் யசோதை என்ற ஆயர்க்குலப் பெண்ணருகே மகவாக கொண்டு வைக்கப்படுகிறான். 

எட்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு மணிமுடிச் சூடி அக்கணமே அதனைக் கொன்று அம்முடியை தான் சூடிக்கொள்வதன் மூலம் அப்பித்தியின் கொடுஞ்சொல்லிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தோடு தேவகியை தேடி வர, அவளருகில் இருந்ததோ பெண்மகவு ஒன்று. அது யசோதையின் மகள். அதிர்ச்சியுற்றாலும் அப்பெண் குழந்தையை கொன்று விடுவதில் அவனுக்கு தயக்கமேதுமில்லை. அதனை பலிபீடத்தில் வைத்து வாளை உருவிய போது கால்களை உதைத்துக் கொண்டு மேலெழுந்த அச்சிறுமகவு தலையால் மணிமுடியைத் தட்டி மறுபக்கம் விழ வைத்ததோடு, உருவிய அவ்வாளுக்கு உடல் கொடுக்காமல் காலுதைத்து மேலேழுந்து பலிபீடத்திலிருந்து மணிமுடி மேல் விழுந்து இறந்துப் போகிறது. அது எட்டாவது மகவு சூடாத மணிமுடி அல்லது கம்சர் இதுவரை சூடிக்கொண்டிருந்த மணிமுடி. அதிர்ச்சியிலிருந்து மீளாத கம்சன் எட்டாமானவன் எங்கோவிருக்கிறான் என்ற நிமித்திகர் சொல் கேட்டு அம்மகவைத் தேடி நாடெங்கிலும் அன்றைய அஷடமிரோகிணி திதியில் பிறந்த அத்தனைக் குழந்தைகளையும் கொன்று குவிக்கிறான். 

கண்ணா… அவனை அள்ளி தன் முகம் சேர்த்து ஆவி உருகிக் குளிர்ந்து சொட்டும் அகக்குரலில் அழைக்கிறாள் ராதை. “ஆம்.. அதுவே நான்“ அவள் கூந்தலிழைப் பற்றியது குழந்தை. உலகத்தின் குறும்பனைத்தையும் குணமாக கொண்டவனின் திறந்த வாயினுள் புடவியே விரிகிறது. வளருகிறான் கண்ணன். வசுதேவரின் மூத்த மனைவி ரோகிணிக்கும் வசுதேவருக்கும் பிறந்தவனான பலராமன் அவனுக்கு மூத்தவனாகிறான். 

இதற்கிடையே தன் இல்லத்தின் வாயிலை நிறைக்கும் குலதெய்வங்களான மருதமரங்கள் திடீரென்று விழுந்து விட அதனால் அச்சம் கொள்ளும் நந்தகோபர் குடும்பத்தோடு விருந்தாவனம் செல்கிறார். இப்போது தாகமும் தவிப்பும் கொண்ட ராதையின் கால்கள் பர்சானபுரியிலிருந்து விருந்தாவனம் நோக்கி நடக்கின்றன. அவனை அவள் துரத்தவில்லை. அவள் துரத்துவது அவளையேதான். கருநாகத்தை விழுங்கிய பொன்நாகம், இரண்டும் இணைந்து ஒன்றாகும்வரை வலிக்கொண்டு நெளியத்தான் வேண்டும். 

திமிறும் காளைக்கன்றை இளந்திமிலோடு சேர்த்தணைப்பதுபோல ராதை கண்ணனைத் தழுவுதல் கண்டு தோழி லலிதை, கோகுலத்தின் இளமகன் வளர்ந்து விட்டான். அதை உன் விழியறியவில்லை என்றாலும் கையறியவில்லையா என்கிறாள். ராதை விழிசுருக்கி, யார் வளர்ந்தது? கண்ணனா.. நானறியேனடீ” என்கிறான். ராதை சற்றே சினந்து, “பிச்சி… மலையில் மழை விழுந்து யமுனை பெருகுவதை நீர் நோக்கி அறிய முடியாது. கரையோர மரம் நோக்கி அறிய வேண்டும். கண்ணனை நோக்காதே… உன்னை நோக்கு என்கிறாள். 

பருவம் வரைந்த அழகை அவள் உணராவிடினும் குடும்பமும் குலமும் அவளை நோக்குகிறது. அபிமன்யூ என்ற ஆயர் மகனுடன் அவளுக்கு திருமணம் நடந்தேறுகிறது. கண்ணனின் குழல்நாதமும் அவனின் அரூப இருப்பும் அவளை ஏதொன்றிலும் ஒட்டவிடாமல் செலுத்துகிறது. அவள் பித்தேறி நிற்கிறாள். வீடும் குலமும் நெறியும் முறையும் துறந்து இங்கு வந்த நானொரு அபிசாரிகை. என் இல்லம் புகுந்து இருளில் வந்து உள்ளம் கவர்ந்துச் சென்ற நீயும் ஒரு அபிசாரன், மாண்பிலாதோன், மானசசோரன், களவுக்கு நிகராக களிப்பூட்டுவதேது? காரிருளோனே.. கள்வனே… கள்ளத்தில் இருப்போருக்கு ஐந்தாயிரம் புலன்கள், ஐந்து இலட்சம் மனங்கள், ஐந்தாயிரம் கோடி கற்பனைகள், கல்லை மணியாக்குகிறது களவுஃ கண்படுவதிலெல்லாம் கதை வந்து நிறைகிறது. ஒரு உடலுக்குள் ஒன்றையொன்று ஒலிக்கின்றன இரு அகங்கள். ஒன்றையொன்று கண்டு திகைக்கின்றன இரு விழைவுகள். பெருவழிகின்றன முகம் கொண்டமைந்த ஆடிகள் இரண்டு. கள்ளத்தில் களியாடும் கரியவனே. இதோ நீ பெருகி நுரைத்த கள்குடம் நான், என்கிறது அவள் உள்ளம். 

இதற்கிடையே ஜராசந்தன் கை விட்ட நிலையில் பன்னிரு யாதவக் குலங்களும் கம்சன் மேல் சினந்திருந்த நிலையில், இந்நகரும் இதன் முடிவும் அன்னை வழியில் நந்தகோபரின் வளர்ப்பு மைந்தனுக்குரியவை என்ற உண்மை எடுத்து வைக்கப்படுகிறது. அதனை ஏற்பதுபோல நயவஞ்சகமாக பேசி நந்தனின் இளமைந்தனையும் அவன் மூத்தவனையும் மதுராபுரிக்கு வரமாறு அழைக்கிறான் கம்சன். கள்குடமென ராதேயனாக ததும்பி நிற்குமவன் மதுராபுரி செல்கிறான். அங்கு தாய்மாமனும் மாமன்னனுமான கம்சனை நெஞ்சுடைத்துக் கொல்கிறான்.  செங்குருதி வழியும் நீலத்திருமேனியுடன் கை விரித்து, “இந்நகரும் முடியும் இமிழ்முரசும் கோலும் நான் கொள்கிறேன். எதிர்ப்பவர் எவரெனினும் என் முன் எழுக” என்றெழுகிறான். குலங்கள் பணிகின்றன. கண்ணனுக்கே அடைக்கலம் கன்றோட்டும் இக்குலங்கள் என்கின்றன. மதுராபுரியின் அரசன் கற்சிறையிலிருக்கும் அன்னை தந்தையை மீட்கிறான். 

மதுராபுரியின் மன்னரும் ஆயர்குலத்து அதிபரும் மாநகர் துவாரகையை ஆளும் மாமன்னருமான கிருஷ்ணதேவரின் அரசப்படகு அன்று பர்சானபுரிக்கு வருகிறது. வாழ்த்தொலிகளுக்கிடையே கருமுகம் விரிய இருகரம் கூப்பி கால்களை எட்டி வைத்து நடந்து வந்தார் கிருஷ்ணர். அவரின் குழல் சூடிய பீலியின் நீல விழியை மட்டுமே ராதை நோக்கியிருந்தாள். ராதையின் தமையனான ஸ்ரீதமனின் மகனும் ஊர்தலைவருமான சக்திதரன் கன்னித்தாயான ராதை தெய்வமாகிக் குடிக்கொண்ட கோவிலுக்கு அவரை அழைத்துச் செல்கிறான். பீலிவிழி விரிந்த தலையும் புன்னகைப் பெருகும் இதழுமாக யமுனையாற்றின் பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலுாதி நின்றிருந்தான் கண்ணன்.

அவள் தேடியது எதை? கண்டடைந்தது நிறைத்தது எதை? அது மண்ணில் காலுான்றும் மானுடர் அறியாத மந்தணம். அவளை அறிந்தோர் இப்புவியில் எவருமில்லை. உன்மத்தம் கொண்ட மனம் அதை கவியென வெளியேற்றி களிக்கொள்கிறது, அது நீலமென்றாகி நிறைந்து வழிந்தோடுகிறது.

                                    ---

               

 

 

No comments:

Post a Comment