ததும்பும் சொற்கள்
சொற்கள்… சொற்கள்.. சொற்கள்.. பெருகி வரும் சொற்கள்… அணியணியான சொற்கள்.. மணிமணியான சொற்கள்… உயிருக்குள் உயிர் நுழைந்து உயிரறுத்து வெளியேறி உயிரென எஞ்சி நிற்கும் உயிர்சொற்கள். மெய்யெனத் திரண்டு மெய்யுள் நிறைந்து மெய்யே அறுதியென்றாகும் காமம் கொண்ட மெய்சொற்கள், தாபமும் தவிப்பும் மோகவும் காதலுமாக உயிருள் மெய் கலந்த உயிர்மெய் சொற்கள். ததும்பி நிற்பன, பொங்கி வழிவன, திகைந்து நிலைப்பன, உயிர் அறுப்பனவென உயிரின் வழியெங்கிலும் சொற்கள் பாதையமைக்க அதனுள் நீலம் வழிந்தோடுகிறது. அதில் ராதை பிச்சியென உறைகிறாள். நிறைகிறாள், மிதக்கிறாள், திரள்கிறாள், அமிழ்கிறாள், ஆனந்திக்கிறாள். பெருகி நிற்கும் தன் உறவுலகுள் தன்னுலகு ஒன்றை கண்டுக் கொள்ளும் பித்தி அவள். பெற்றவளிடமிருந்து வளர்க்கப் போகிறவளுக்கு கை மாறும் நாளன்று அச்சின்னஞ்சிறு சிசு பிஞ்சுப்பாதங்களோடு அவளுலகில் நுழைகிறான். நுழைந்தவுடன் அவளுலகு மூடிக் கொள்கிறது. அவளுக்கும் அவனுக்குமான அவ்வுலகில் யாருக்கும் அனுமதியில்லை. புத்தம்புதிதாய் குடிநிறைந்து நிற்குமவளை ஊரும் உறவும் கொண்டாடி களி்த்திருக்க, அவளோ உஷைப்பொழுதில் தன் மைந்தனை, காதலனை, நண்பனை, பித்தனை தேடியோடுகிறாள். எண்ணமெல்லாம் அவனே… சொந்தமெல்லாம் அவனே… சித்தமெல்லாம் அவனே. ஒவ்வொரு சொல்லும் அவனே ஒரு சொல்லும் அவனல்ல.