கணையாழி ஜனவரி 2018ல் வெளியானது.
கண்களை திறக்க முடியவில்லை அவளால். ஆனாலும் மூடிய இமைக்குள் விழிகள் எதையோ தேடுவது போல அவ்வப்போது நழுவி ஓடி நின்றன. அக்கம்பக்கத்து அஞ்சலம் அத்தை.. மரகதம் பெரீம்மா.. மாரியம்மா அக்கா.. கெங்கா சின்னம்மா.. எல்லோரும் அவளை எழுப்பி உட்கார வைத்து காபி கொடுப்பது நிஜமாக நடப்பது போலவே இருக்கிறது. ஒருமுறை சைக்கிளில் அடிப்பட்டு பேச்சு மூச்சின்றி கிடந்தபோது அப்படிதான் எழுப்பி உட்கார வைத்தனர். ஆனால் இப்போது வாயில் காபியும் இல்லை. அருகிலும் யாருமில்லை. ஏதேதோ நினைவுகள் மட்டும் ஓடிக் கொண்டேயிருந்தன.
என்றுமில்லாத திருநாளாக அவளின் எண்ணவோட்டங்களில் அம்மாவும் இருந்தாள். அவளை இடுப்பில் துாக்கிக் கொள்ள முயன்றாள்.. ஆனால் பதிமூன்று வயது பெண்ணான இவளால்தான் இடுப்பில் ஏறிக் கொள்ள இயலவில்லை. கால்கள் நீண்டு விட்டன. தரையை தொட்டு விடுமோ..? சிரிப்பு வந்தது. அவளுக்கு எதற்கெடுத்தாலும் சிரிப்புதான். சென்ற வருடம் பெரியவளான தருணத்தில் ‘பொசுக்குபொசுக்குன்னு பொட்டச்சிக்கு என்னாடீ சிரிப்பு..’ என்றாள் திண்ணைக் கிழவி ஒருத்தி. “இனிம சிரிச்சன்னா வாய் மேலயே போடுவன்..“ கனகாக்கா விளையாட்டாக கையை ஓங்க அப்போதும் சிரிப்பு பொங்கி வந்தது அவளுக்கு. இடுப்பிலிருந்து கால்கள் வழிந்து தரையை தொடுவதை நினைத்தபோதும் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிப்பதற்கு வாயை விரிக்க முனைந்தபோது கன்னங்கள் தீப்பிடித்தது போல் எரிந்தன. “ம்மா..“ தன்னையுமறியாமல் அனத்தினாள். மிக சன்னமான ஒலி. கிழிந்து கிடக்கும் வாயிலிருந்து அவ்வளவு ஒலியே அதிகம்தான்.









