Search This Blog

Sunday 13 June 2021

மிலியின் சகோதரன்

 

அன்று மோகன்தாஸ் காந்தியை கைது செய்திருந்தார்கள். 1908 ஆம் ஆண்டின் அந்த ஜனவரி பத்தாம் நாளன்று ஜோஹானஸ்பர்க்கின் ஃபோர்ட் பிரிசன் சிறையில் அவரை உடைகளை களையச்செய்து உடல் எடை பார்க்கப்பட்டு அவரது விரல் ரேகைகள் பதியப்பட்டன.  பிறகு அவருக்கு சிறைக்கான உடைகள் அளிக்கப்பட்டபோது பொழுது நகர்ந்து மாலையாகியிருந்தது. இரவு உணவுக்காக எட்டு அவுன்ஸ் ரொட்டி கொடுத்து அவரை சிறையறைக்கு அனுப்பியபோது இலண்டனில் சட்டம் பயின்ற அந்த பாரிஸ்டருக்கு அது முன்பின் அறியாத புதிய அனுபவமாகவே இருந்தது. அவரை தவிர அவ்வறையில் பனிரெண்டு கைதிகள் இருந்தனர். அவர் கையோடு எடுத்துச்சென்றிருந்த பகவத்கீதையையும் டால்ஸ்டாய், சாக்ரடீஸ் ரஸ்கின் ஆகியோரின் புத்தகங்களையும் தம்மருகே வைத்துக் கொண்டார். இரவுணவுக்கு பின் மரப்பலகை படுக்கையில் படுத்துக் கொண்டார்.

 

டிரான்ஸ்வால் அரசாங்கம் கொண்டு வந்த புதிய ஏசியாட்டிக் அவசரச்சட்டத்தின்படி அங்கு வசிக்கும் இந்தியர்கள் அரசாங்கத்திடம் புதிதாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்பதிவுச்சான்றிதழை எந்நேரமும் தம்மோடு வைத்திருக்க வேண்டும் என்றும்  பதிவுச்சான்றிதழ் இல்லாதவர்கள் கைது செய்யப்படவோ டிரான்ஸ்வாலுக்கு வெளியே அனுப்பப்படவோ வேண்டியிருக்கும் என்ற நிலைக்கு எதிராக செப்டம்பர் 11 ஆம் தேதி எம்பயர் தியேட்டரில் தெளிவான, தீவிரமாக, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், அவரசச்சட்டத்தின் கசப்பான, கொடுங்கோலான பிரிட்டிஷ் இயல்புகளுக்கு மாறான உத்தரவுகளுக்கு கீழ்படிவதை விட டிரான்ஸ்வாலிலிருந்த ஒவ்வொரு இந்தியரும் சிறைவாசத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணியில் நடந்த தொடர் போராட்டம் மோகன்தாஸுக்கு ஏராளமான ஆதரவாளர்களையும் சிறை தண்டனையும் பெற்று தந்திருந்தது. 


நேட்டாலிலும் டிரான்ஸ்வாலிலும் அவர் கைதானதையடுத்து பல கடைகள் மூடப்பட்டன. அவரது ஐரோப்பிய நண்பர்கள் அவருக்கு ஆதரவாக கூட்டங்கள் போட்டு பேசினர். ரெவரண்ட் ஜோசப் டோக் காந்தியின் போராட்டத்தை மனசாட்சிக்கான வீரம் செறிந்த போராட்டம் என்று வர்ணித்தார். ஃபீனிக்ஸ் குடியிருப்பலிருந்த அவரது மனைவி கஸ்துார் மகன்களை தன்னருகே அமர்த்திக் கொண்டார். ஜோஹானஸ்பர்க்கின் பெல்லீவ்ஈஸ்ட்டில் அவருடன் ஒரே இல்லத்தில் தங்கியிருந்த அவரது உதவியாளரும் வழக்கறிஞருமான ஹென்றிபோலாக் எதையோ இழந்தது போல உணர்ந்தான். அவனது மனைவி மிலிகிரகாமுக்கு இதயத்திலிருந்து ஏதோவொன்று நகர்ந்தது போலிருந்தது. அவள் அதை தன் பழைய நினைவுகளால் இட்டு நிரப்பிக் கொள்ள எத்தனித்தாள். அவர்களுக்கு இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் இருந்தனர். அவள் தன் மூத்தமகனை விளையாட அனுப்பியிருந்தாள்.  குழந்தை உறங்க விரும்பாத நேரத்தில் அதை வலுக்கட்டாயமாக துாங்க வைப்பது சரியல்ல என்பார் காந்தி. இரண்டாவது மகன் பிறந்தபோது மிலியிடம்குழந்தைக்கேற்றார்போல தாய் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இரவோ பகலோ எந்த நேரமாக இருந்தாலும் குழந்தை உறங்கும் நேரத்தில் நீயும் துாங்க முயற்சி செய் என்பார். இப்போது அவளது இரண்டாவது குழந்தை உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அவளுக்குதான் உறக்கம் வராமலிருந்தது. 

காந்தியை மிலி முதன்முதலாக லண்டனிலிருந்து ஜோஹென்னஸ்பெர்க்கின் ஜெப்பி ரயில்நிலையத்தில் வைத்து சந்தித்திருந்தாள். நடைமேடையில் அவளுக்கு கணவனாக வரப்போகும் ஹென்றி போலாக்குடன் நி்ன்றிருந்த மோகன்தாஸ் அவளை நோக்கி சிநேகமாக வலதுக்கரத்தை நீட்டியபோது தடித்த உதடுகள் கொண்ட அந்த நடுத்தர வயது மனிதருடன் மனதளவில் இத்தனை நெருக்கமாகி விடுவோம் என்று அவள் கருதியிருக்கவில்லை. ஒருவேளை அவள் திருமணமாகி தென்னாப்பிரிக்கா வருவதற்கு முன்பே அவளிடம் அவர் தன் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டது அவளை கவர்ந்திருக்கலாம். இலண்டனிலிருந்த  அவளுக்கு எழுதிய கடிதத்தில், ஃபீனிக்ஸில் காசநோய் மருத்துவமனை நிறுவ இருப்பதால், இலண்டன் அருகே எங்கோ ஒரு டால்ஸ்டாய் பண்ணை இருப்பதாக கேள்விப்பட்டிருப்பதாகவும்  முடிந்தால் அங்கு சென்று பார்த்து எவ்விதமான கொள்கைகளின் அடிப்படையில் அது அமைந்திருக்கிறது என்று அறிந்து வருமாறும் எழுதியிருந்தார். 

அவளது கைகள், ரொட்டியை, உடைத்து ஊற்றிய கோழி முட்டைக்குள் முக்கியெடுத்து தணலில் வாட்டிக் கொண்டிருந்தாலும் மனம் அவரை பற்றிய நினைவுகளுக்குள் நழுவியோடியதை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. 

அப்போது அவளுக்கு திருமணமாகி ஓராண்டு நிறையாத தருணம். ஹென்றிபோலாக் எழுதுஅட்டையில் சொருகப்பட்டிருந்த தாள்களில் மளமளவென்று எழுதிக் கொண்டிருந்தான். அவன் இப்போதுஇந்தியன் ஒப்பீனியன் இதழின் பகுதி நேர ஆசிரியருமாகியிருந்தான். மிலி கிராகாமுடனான அவனது திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த இதழின் ஆசிரியர் எம்.ஹெச்.நாஸர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்து விட்டார். ஃபீனிக்ஸ் குடியிருப்பில் அவர் இறந்தபோது அவரருகே கீதை புத்தகம் திறந்திருந்ததாம். இதை கேள்விப்பட்ட கஸ்துார், நாஸருக்கு எத்தனை அருமையான சாவு வாய்த்திருக்கிறது என்று சிலிர்த்துக் கொண்டார்.  மோகன்தாஸ்காந்தியின் உறவினர் சகன்லால் இதழின் குஜராத்தி பக்கங்களை பார்த்துக் கொள்ள போலாக் ஆங்கிலப்பத்திகளை கவனித்துக் கொண்டான். 

மிலி கிண்ணம் நிறைய வறுத்த நிலக்கடலையை  கொண்டு வந்து கணவனருகில் வைத்தாள். அவர்களுக்கு அப்போது குழந்தைகள் இல்லை. பூசினாற்போன்ற உடல்வாகு கொண்டவள் அவள். கூந்தலை அழகாக நறுக்கியிருந்தாள்.  

வீட்டை எப்படியெல்லாம் மாத்தி வச்சிருக்கேன்னு எழுந்திரிச்சு வந்து பாருங்க ஹென்றி 

ஜோஹானஸ்பர்க்கில், பெல்லீவ் ஈஸ்ட்டிலிருந்த அந்த வீட்டில் அவர்களை தவிர மோகன்தாஸ் காந்தியும் இந்திய இளைஞன் ஒருவனுமிருந்தனர். அந்த சிறிய வீட்டில் அளவில் சிறியதான நான்கறைகள் மட்டுமே இருந்தன. குளியலறையில் கூட ஒழுங்கான குழாய் அமைப்போ கழிவு நீர் வெளியேற சரியான பாதையோ இல்லாமலிருந்தது. ஆனால் காந்தி தன் வழக்கறிஞர் வேலையை குறைத்துக் கொள்ள எண்ணியிருந்ததால் செலவுகளை கட்டுப்படுத்த சுமாரான வீட்டில்தான் இருந்தாக வேண்டும். 

கொஞ்சம் வெயிட் பண்ணு மிலிஇந்த ஆர்ட்டிகளை முடிச்சிடுறேன் 

ப்ளீஸ்ப்ளீஸ்இதை பாத்திடுங்க. அப்பறம் பாபூ வந்துட்டா நீங்க அவரோட பிசியாயிடுவீங்க 

பாபு, ஆப்ரிக்க அரசியல் நிறுவனத்தின் கூட்டமொன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்தார். மேலும் அவருக்கு மற்றுமொரு முக்கியமான பணியுமிருந்தது.  அனுமதி சீட்டுகள் வழங்குவதில் தாமதங்கள், விண்ணப்பத்தாரர்கள் சாட்சிகளை கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தப்படுவது, பெண்களுக்கு விதிவிலக்கு கொடுக்க மறுப்பது உள்ளிட்ட பதினாறு புகார்கள் கொண்ட பட்டியல் ஒன்றை அளித்ததன் தொடர்ச்சியாக பிரிட்டோரியாவில் காலனிய துணைச் செயலாளரை சந்திக்க வேண்டியிருந்தது. 

ஹென்றிபோலாக் புரொடக்டர் ஆஃப் ஏசியாட்டிக்ஸ் பொறுப்பிலிருக்கும் அதிகாரியான மாண்ட்ஃபோர்ட்சாம்னிக்கு காந்தி எழுத வேண்டிய கடிதங்களுக்கான தரவுகளை சேகரித்து வைத்திருந்தான். அது சம்பந்தமாக மோகன்தாஸ் வந்ததும் கலந்தாலோசிக்க வேண்டியவற்றை தனியாக குறிப்பெடுக்க வேண்டியிருந்தது.  தான் கூறும் முன்பே தன் வேலைகளை குறித்துப் புரிந்துக் கொள்ளும் புத்திசாலியான புதுமனைவியின் வேண்டுகோளை மறுக்கவியலாமல் குறிப்புத்தாள்களை அட்டையில் சொருகி வைத்து விட்டு எழுந்தான். ஞாபகமாக தன்னுடன் நிலக்கடலைகள் அடங்கிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டான். 

மிலி முதலாக அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். “இங்க பாருங்க ஹென்றிகிச்சன்லயே டைனிங்கை செட் பண்ணீட்டேன் 

ஓஒ ஐரோப்பிய ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களை உள்ளடக்கிய உணவு மேசை இல்லையா இது? பார்த்து பார்த்துதான் செட் பண்ணியிருக்கே  என்றான் ஹென்றி விளையாட்டாகவும் நிஜமாகவும். 

புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருந்த இடம் இப்போது உண்ணுமிடமாக மாறியிருந்தது. இரவுணவு நேரத்தில் மெதுவாக உண்டு நிறைய பேசிக் கொள்ளலாம். அது மோகன்தாஸுக்கு பிடித்தமானதுதான்.  உணவு மேசையில் பொதுவாக பிரார்த்தனை பாடலும் பிறகு உணவோடு கலந்த அரசியல் என்றுமிருக்கும். நேற்று கூட காந்தி, ஜுலுக்களின் பாம்பாத்தா கிளர்ச்சி நேட்டாலிலும் பரவி விட்ட நிலையில், இந்தியன் ஒப்பீனியன் இதழில் தான் எழுதியிருந்த கட்டுரைக்கு வந்திருந்த எதிர்வினைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அதில், காஃபிர்களின் கலகம் நியாயமானதா இல்லையா என்று தன்னால் உறுதியாக கூற முடியவில்லை என்றாலும் நேட்டாலில் நாமிருப்பது பிரிட்டிஷ் அதிகாரத்தின் மூலமாகவே என்பதால் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வது போன்ற முடிந்த உதவிகளை செய்யவேண்டியது நமது கடமை என்று எழுதியிருந்தார். அதற்காக முன்வரும் தன்னார்வலர்களில் தன் பெயரை முதலாவதாக சேர்த்துக் கொண்டதாகவும் பணவுதவியோடு ஓவர்கோட்டுகள், தொப்பிகள், காலுறைகள் போன்ற பொருளுதவியும் திரட்ட போவதாக கூறினார். 

அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிலி. அமைதியான குரலெழும்பாத பேச்சு என்றாலும் அதில் தீவிரவும் தீர்மானமும் இருக்கும். கஸ்துார் பா விடம் பேசும்போது கூடுதல் உரிமையுமிருக்கும். டிராய்வில்லில் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் வருவதை பார்த்திருக்கிறாள். அது பெரும்பாலும் இந்தியாவிலிருக்கும் அவர்களின் மூத்தமகன் ஹரிலாலை பற்றியதாக இருக்கும். அவர் அப்போது ஹரிலாலை தென்னாப்பிரிக்காவுக்கு வரவழைப்பதில் தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தார். மோகன்தாஸின் பேச்சில் நகைச்சுவைக்கு குறைவிருக்காது. இலண்டனிலிருந்து வந்து இறங்கியபோது ஹென்றி தனது வருங்கால மனைவியை கண்ட ஆனந்த அதிர்வில், “மிலிஎன்னால இதை கொஞ்சமும் நம்ப முடியில…” என்றான். அவன் கண்கள் இதயத்தின் பரபரப்பை நீராக ஏந்தி பளபளத்திருந்தது. 

இந்தியன் ஒப்பீனியனுக்கு அத்தனை சந்தா சேர்ந்துடுச்சா?”  என்றார் காந்தி சிரிக்காமலேயே. அவர் தென்னாப்பிரிக்காவிலிருக்கும் இந்தியர்களின் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழை இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு கோடைக்காலத்தில் தொடங்கியிருந்தார். 

மிலி அந்த புதிய நண்பரின் நகைச்சுவைக்கு புன்னகைத்தப்படியே தன்னை நோக்கி நட்பாக நீண்டிருந்த அவரது வலதுக்கரத்தை லேசாக பற்றி குலுக்கினாள். நடுத்தர உயரமும் மெலிந்த தேகமும் கொண்ட இந்த மனிதரா அரசாங்கத்தை வண்டு போல குடைந்துக் கொண்டிருக்கிறார்? தோன்றிய நேரத்திலேயே அவ்வெண்ணம் விடுப்பட்ட விட்டது. ஏனென்றால் அதை விட கவர்ச்சியான ஒரு பண்டம் இப்போது அவளிடமிருந்தது. அது அவளையே அன்புத்ததும்ப பார்த்துக் கொண்டிருந்தது. இதயக்கூடு இன்பத்தில் தாறுமாறாக துடிக்க, அந்த பண்டத்தின் கம்பீரமான ஆகிருதிக்குள் தன்னை ஒப்புக் கொடுக்க எண்ணிய உடலை நகர்த்தி விட்டு வலதுக்கரத்தை மட்டும் முன்னே நீட்டினாள் மிலி. புனிதமான ஏதோவொன்றை பற்றுபவன்போல ஹென்றி அதை ஒற்றியெடுத்து தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டான். இரவின் சோம்பலை உதறிக் கொண்டு அந்நாளின் விடியலில் மெல்ல இயங்கத் தொடங்கிய அந்நகரில் அவர்களது காதலுக்கு சாட்சியாக அந்த முப்பத்தாறு வயது பழுப்பு நிற மனிதன் சிறுவனின் உற்சாகத்தோடு நின்றுக் கொண்டிருந்தார். “ஓஒகாதலர்கள் சிரித்தபோது அவர் கண்களும் சேர்ந்துக் கொண்டன. 

மிலிகிரகாம் கணவனின் கண்களை தன் கரங்களால் விளையாட்டாக பொத்தியவாறு முன்னறைக்கு அழைத்து வந்தாள். கைகளை விலக்கியபோது அந்த அறையின் நேர்த்தி அவனை பிரமிக்க வைத்தது. இரண்டு நாட்களாகவே அவள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தது தெரியும். ஆனால் வீட்டை இத்தனை அழகாக மாற்றியிருப்பாள் என தெரியாமல் போயிற்று. புத்தகங்களும் அவர்கள் இருவருக்கான பொருட்களும் அங்கு சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “இனிமே பகல் நேர டிஸ்கஷனை இங்கேயே வச்சிக்கலாம்என்றாள். 

இலண்டனிலிருந்து வந்த நாலைந்து மாதங்களுக்குள் எல்லாவற்றையும் பழகிக் கொள்ள முடிந்த அவளுக்கு அவ்வப்போது எழும் சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை. ஒருவேளை அவள் வருவதற்கு முன்பே, அதாவது திருமணத்திற்கு முன்பே, மில்லிகிரகாமின் உடல்நிலையை காரணம் காட்டி திருமணத்தை முடிந்தமட்டிலும் தள்ளிப்போடுமாறு வலியுறுத்தி காந்திக்கு போலாக்கின் தந்தை எழுதிய கடிதம் அவளை காயப்படுத்தியிருக்கலாம்.  ஹென்றிஉங்க வீட்டாருக்கு உண்மையிலுமே என்னை பிடிக்கலையா? இல்லைன்னா என்மேல அவங்களுக்கு அவ்வளவு அக்கறையா?” என்று கேட்டபோது மில்லி கணவனின் அருகில் நெருங்கிப் படுத்திருந்தாள். இந்த வாய்ப்பு அடிக்கடி கிடைப்பதில்லை என்பது அந்த நெருக்கத்தில் தெரிந்திருந்தது. அவள் அவ்வப்போது தன் திருமணம் ஒரு இலட்சியவாத திருமணம் என்றெண்ணிக் கொள்வாள். ஹென்றிக்கு வழக்கமான கணவர்களை போல தன்னிடம் அதிக நேரம் செலவழிக்க முடியாது என்பதை அவளும் அறிந்திருந்தாள். அதில் அவளுக்கு பெருமையும் கூட. ஏனென்றால் அவளே தீவிர சமூக சீர்த்திருத்தவாதி. பெண்களின் ஓட்டுரிமையை ஆதரித்தவள். 

இத்தனை நாளுக்கப்பறம் ஏன் திடீர்ன்னு இந்த சந்தேகம்? நான் உன்னை சரியா நடத்தறதில்லையா?” 

இல்லல்ல…” அவரசமாக மறுத்தாள் மில்லி. “ஆனா நம்ப கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்லி உங்கப்பா பாபுவுக்கு லெட்டர் போட்டுருந்தாரே? 

அது உன்னோட உடல்நிலைக்காகதானே மிலி. லண்டன்ல வளர்ந்த பொண்ணு நீ. ஜோஹென்னஸ்பெர்க் சூழல் உனக்கு செட்டாவுமோ என்னமோன்னு அவங்களுக்கு பயமிருக்காதா?” ஹென்றி மனைவியை தன் பக்கமாக இழுத்து இறுக அணைத்துக் கொண்டான். இருபதுகளின் இனிமையும் காதலும் அவர்களுக்குள் ஊற்றாக பெருகிக் கொண்டிருந்தாலும் யூதரான கணவனின் வீட்டார் கிறித்துவரான தன்னை நிராகரித்ததும் அதற்காக கணவனை தென்னாப்பிரிக்காவிலிருக்கும் அவனது பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் அவள் மனதில் ஆழமாக தங்கியிருந்தது. உடலோ மனமோ களைத்திருக்கும் சமயங்களில் அவ்வெண்ணம் உயர்வாகவோ அல்லது தாழ்வுணர்ச்சியாகவோ வெளிப்பட்டு விடும். தன் வீட்டாரை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் ஹென்றியை அவளுக்கு நிறையவே பிடித்திருந்தது. மாணவனாக இருந்தபோதே யூத வார இதழொன்றில் அரசியல் விவகாரங்களை குறித்து கட்டுரைகள் எழுத தெரிந்திருந்தது அவனுக்கு. கேப்டவுனில் பெரியப்பாவின் வணிக நிறுவனத்தில் பணியாற்றியபோது டால்ஸ்டாயின் எழுத்துகளின் தீவிர ரசிகனாகவும் டிரான்ஸ்வால் கிரிட்டிக் என்ற உள்ளுர் செய்தித்தாள் நிறுவனத்தின் பணியாளனாகவும் இருந்த அறிவார்ந்த கணவனுக்கு மனைவியானதில் அவளுக்கு பெருமைதான். கூடவே மோகன்தாஸ் காந்தி என்ற துணிச்சலான மென்மையான இந்தியர் ஒருவருடன் கணவன் கொண்டிருந்த நட்பும் உரிமையும் அவளுக்கு பிடித்திருந்தது. 

திருமணமான கையோடு ஜோஹென்னஸ்பெர்க்கில், டிராய்வில்லில் அவர்கள் தங்கியிருந்த வீடு இதுபோல நெருக்கலின்றி இரண்டு தளங்களையும் எட்டு அறைகளையும் கொண்ட தனித்த வீடாக ஊரை விட்டு சற்று வெளியே நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது. அங்கு  காந்தியுடன் அவர் மனைவி கஸ்துாரும் இளைய மகன்கள் ராமதாஸும் தேவதாஸும் வசித்தனர். கூடவே தொலைத்தொடர்பு பணிகளை கவனிக்க ஆங்கிலேயே இளைஞன் ஒருவனும் இருந்தான். நாடும் உறவும் புதிதென்றாலும் கஸ்துார் என்ற அவளை விட வயதில் முதிர்ந்த தோழியும் அவள் குடும்பத்தாரும் அதை இயல்பாக மாற்றியிருந்தனர். கணவன் தன்னை இந்தியாவிலிருந்து அழைத்து வரும்போதே குடும்பத்துக்கு தன்னால் குறைந்த நேரமே செலவிட முடியும் என்று கூறியிருந்ததாக பா கூறுவார். ஆனால் பாபு காலையில் சீக்கிரமாகவே எழுந்துக் கொண்டு அன்றைய உணவுக்கான மாவு தயாரிப்பில் மனைவிக்கு உதவுவார். பிறகு கயிறு தாண்டும் பயிற்சி செய்து விட்டு பழங்களை நறுக்கி்த் தருவார். ஐந்து மைல் தொலைவில் ரிஸ்ஸிக் தெருவிலிருக்கும் தன் அலுவலகத்துக்கு நடந்து செல்லும்போது கையில் மதியத்துக்காக கோதுமைரொட்டியோடு, நிலக்கடலையும் வெண்ணெயும் கூடவே சில பழங்களும் எடுத்துச் செல்வார். வழக்குகளை எடுத்துக் கொள்வதோடு, அரசுக்கு கோரிக்கை மனுக்கள் எழுதுவதும் இந்தியன் ஒப்பீியன் இதழுக்கான வேலையில் ஈடுபடுவதுமாக அவரது நாட்கள் கழிந்தன. 

மிலியும் பா வும் மாலை நேரங்களில் வீட்டை சுற்றிலுமிருந்த தோட்டத்தை சீர் செய்வார்கள். அப்போது அவள் பா வுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவாள். மோகன்தாஸ் தன் மகன்களுக்கு குஜராத்தி இலக்கணம் கற்றுத்தருவார். ஹென்றி, பாபு, குஜராத்திக்கு பதிலாக மகன்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தரலாம், என்று மனைவியிடம் அபிப்பிராயப்பட்டிருக்கிறான். ஆனால் அவரிடம் நேரிடையாக சொல்வதில்லை. அவரிடம் விவாதிப்பத்தற்கென்றே வந்தவள் போல மிலி இருப்பதில் ஹென்றிக்கும் கஸ்துாருக்கும் உடன்பாடுதான். 

காலன்பாக் இங்க வரும்போது சாக்லேட்டோ பொம்மைகளோ வாங்கீட்டு வராதீங்கன்னு சொல்லணும் மிலி…” ரொட்டிக்கான மாவை பிசைந்துக் கொண்டே பேசினார் கஸ்துார். அந்த வீட்டுக்கு அடிக்கடி வருகைத்தரும் ஹெர்மன்காலன்பாக்கின் வாழ்க்கை முறை தன் சின்னஞ்சிறு மகன்களை ஏங்க வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். மிலி உருளைக்கிழங்குகளை வேக வைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாள். அவளுக்கு சமையலறை வேலைகள் இப்போதுதான் மெல்ல பழக்கமாகிக் கொண்டிருக்கிறது. 

மிலிகாலன்பாக் வரும்போது இந்த விஷயத்தை ஞாபகப்படுத்திறியா 

சாரி பா. நான் வேர்க்கடலை மேலேயே என்னோட முழுக்கவனத்தை செலுத்திக்கிட்டிருந்தேன். நீங்க சொன்னதை கவனிக்கலஆச்சர்யமாக புருவத்தை உயர்த்திய கஸ்துார்காலன்பாக் இங்க வர்றப்போ ராமாவுக்கும் தேவாவுக்கும் எதையாவது வாங்கிட்டு வந்துடுறாரு. இது பழக்கமாகிப்போச்சுன்னா அவர் வர்றதை விட அவர் வாங்கீட்டு வர்ற பொருள் மேல பசங்களுக்கு நாட்டம் உண்டாகிடும். ராமா அவரை மாதிரி சூட், ஷுவெல்லாம் போட்டுக்கணும்னு ஆசைப்படறான் 

அப்டி விரும்பினாதான் என்ன தப்பு பா?” கிழங்குகள் நீராவியில் வேகத்தொடங்கியிருந்தன. 

அப்டீன்னா நீ உங்க பாபுக்கிட்ட சொல்லி மகன்களுக்கு அதெல்லாம் வாங்கித்தர சொல்லு கணவனிடம் கேட்பதற்கு மிலியை சிபாரிசுக்கு அழைத்திருந்தாலும் கஸ்துாரின் முகத்தில் அவநம்பிக்கைதான் அதிகமிருந்தது. ஆனால் மிலிக்கு அது குறித்து பாபுவிடம் பேசுவதில் எந்த தயக்கமும் இல்லை. ஒருவேளை அவள் திருமணமாகி வரும் முன்பே அந்த மனிதர் ஹென்றியின் வீட்டாரிடம் அவளுக்கு சாதகமாக பேசியதன் காரணமாக இருக்கலாம். அல்லது அந்த பழுப்புநிற மனிதன், தங்கள் திருமணத்துக்கு சாட்சியாக நின்றதில் ஏற்பட்ட அபிப்பிராயமாக இருக்கலாம். அவரை பாபூ என்று அழைத்தாலும் மூத்த சகோதரனாகவே எண்ணிக் கொள்வாள். அதுவே அவளுக்கு அவரிடம் கூடுதல் பிரியமும் உரிமையும் அளித்திருந்தது. காந்தியோ, இந்துவான தான், தன்னுடைய பேச்சில் அடிக்கடி கிறித்துவின் சொற்களையும் போதனைகளையும் பயன்படுத்துவதுதான் இந்த அன்புக்கு காரணம் என்று வம்புக்கிழுப்பார். 

அது உண்மையில்லை என்று அவள் கருதினாலும், அவரது அலுவலகத்தில் கிறிஸ்துவின் படம் இருப்பது குறித்து அவள் மகிழ்ந்திருக்கிறாள். அது குறித்து அவள் மோகன்தாஸிடம் கேட்டபோது அவர், கிறித்துவின் பொறுமையும் மென்மையும் கருணையுமான உரு அவரை கவர்ந்ததாக கூறினார். துாற்றப்படும்போதும் தாக்கப்படும்போதும் திருப்பித் தாக்காமல் மற்றொரு கன்னத்தைக் காட்ட சொல்லி தம் சீடர்களுக்கு உபதேசித்த நிறை மனிதரல்லவா அவர்? என்றார். ஒருவேளை கிறித்துவின் கண்களை போல பாபுவின் கண்களும் கருணையானவையோ? ஆனால் அவரை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க அவளுக்கு பிடித்திருந்தது. 

ஆனா நீங்க கிறித்துவத்தை ஏற்கலையே பாபூ? 

ஒரு நல்ல இந்துவாக இருப்பதே நல்ல கிறித்துவனாக இருப்பதுவுமாகும்பாபுவின் உடனடியான பதில் அவளுக்கு சற்று கோபமூட்டியிருக்க வேண்டும். அவள் இந்தியாவில் நிலவும் சாதி பாகுபாடுகள் குறித்து அறிந்திருந்தாள். 

கிறித்துவம் போதிப்பதுபோல், உங்கள் மதத்திலும் சகோதரத்துவம் வலியுறுத்தப்படுதுன்னு நெனைக்கிறீங்களா? 

மிலிமனிதர்களோட குறைப்பட்ட புரிதல்களை கொண்டு மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. உலகத்தில் நிலவும் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் குற்றங்களையும் பார்த்த பிறகும் கிறித்துவ உலகம் சகோதரத்துவத்துடன் வாழுதுன்னு சொல்வாயா நீ?   

அதுசரி. மனிதனின் இலட்சியங்கள் எப்போதுமே அவர்களுக்கு எட்டாத தொலைவில்தானே இருக்கின்றனஎன்றாள் தொய்வாக. 

நாம் இலட்சியங்களை அடைஞ்சுட்டோம்ன்னா போராடி அடைய எதுவுமே இருக்காதில்லையா? 

தியாசபிகல் சொசைட்டியில் இது குறித்து  அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை அவளும் கேட்டிருந்தாள். இந்துமதம், சமூக விவகாரங்களில் சாதியின் முக்கியத்துவம், சமய விஷயங்களில், பலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம், தார்மீக விஷயங்களில், சுய ஒறுத்தலின் முக்கியத்துவம் என்று மூன்று துாண்களின் மீது நின்றுக் கொண்டிருக்கிறது. சமணமோ வாழும் உயிர்கள் அனைத்தின் மீதும் கவனத்துடன் மரியாதை செலுத்துகிறது. இஸ்லாத்தின் சமத்துவக்கொள்கை சாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் வெகுமக்களின் விருப்பத்துக்குரியதாக இருக்கிறது. இந்த உள்ளார்ந்த பலத்துடன் வாளின் பலமும் சேர்ந்துக் கொண்டதால் அது பலரை மதம் மாற செய்வதாக அவர் ஆற்றிய உரை இந்தியன் ஒப்பீனியன் இதழில் வெளிவந்தபோது, காந்தி இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டதாக முஸ்லிம்களிடமிருந்து கண்டனம் வந்ததையும் அவள் அறிந்திருந்தாள். 

தாழ்ந்த சாதி இந்துக்கள் முஸ்லிம்களாக மாறினால் அது இஸ்லாத்தோட மேன்மையதானே காட்டுது..என்றான் போலாக். 

அன்று இரவுணவு மேசையில்  வழக்கம்போல கஸ்துார் கீதையிலிருந்து சில வரிகளை படித்துக் காட்டி விட்டு, பின் மகன்களுக்கு அதை எளிதாக விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். “பகவான் கிருஷ்ணன் எல்லா உறவுகளிடத்திலும் சமமாக இருக்கிறார். அவருக்கு  நண்பனுமில்லை. பகைவனுமில்லை. அவரை யார் பக்தியுடன் பூஜிக்கிறார்களோ அவர்களிடம் அவர் வந்து விடுவார் மிலி ஒருவேளை கணவரிடம் சம்மதம் பெற்று விட்டாளெனில் அவர் மகன்களும் கோட்டும் ஷுக்களும் அணி்ந்துக் கொள்வார்கள். 

எல்லோரும் உண்ண ஆரம்பித்தபோது பாபூநாமெல்லாமே இப்போ வெவ்வேறு பொறுப்பில இருக்கோமில்லையா?” மிலி மெல்லப் பேச்சை தொடங்கினாள். 

மோகன்தாஸ் ரொட்டியின் மீது வெண்ணெயை தடவிக் கொண்டேஎந்தவகையான பொறுப்பை பத்தி கேட்கிற?” 

இந்து மதம் பகுத்து வச்சிருக்கற பொறுப்பு பத்திதான் சொல்றேன். ராமாவுக்கும் தேவாவுக்கும் இப்போ விளையாட்டுத்தனமான, பெற்றோரின் அன்பான அரவணைப்பில வளரும் பருவம் இல்லையா?” 

மோகன்தாஸ் புன்னகையோடு வேக வைத்த பயிறுகளை எடுத்து ராமதாஸின் தட்டில் பரிமாறினார். தேவதாஸ் எலுமிச்சை பானத்தை பருக எத்தனித்ததை பார்வையாலேயே தடுத்து பாலால் செய்யப்பட்ட பதார்த்தத்தை எடுத்து நீட்ட, அவன் தயங்கி பின் வாங்கிக் கொண்டான். “ம்சொல்லுஎன்றார். 

அப்றம் மாணவப்பருவம்பிறகு இல்லறத்தில நுழையணும். அது கவலைகளும் அழுத்தங்களும் நிறைந்த பருவம். அந்த பருவத்திலதான் நீ்ங்களும் பாவும் இப்போ இருக்கீங்க 

யெஸ்அதுக்கு பிறகு தியானமும் சிந்தனையுமான மோன நிலையில் வாழ்வின் ஆன்மாவையும் தன் ஆன்மாவையும் காண அவன் தன் கண்களை பழக்கப்படுத்திக் கொள்ளலாம் 

அப்டீன்னா பெண்களோட நிலை? நீங்க சொல்றத பார்த்தா அவள் தன் புறதேவைகளைத் துறந்து ஆன்ம வேட்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மரணத்துக்கு அப்பாலானதற்கு தன் ஆன்மாவை துணியச் செய்யும் புள்ளியொன்று இந்து சிந்தனையில் இருப்பதாகவே தோணலியே? 

சூட்டும் காலணிகளும் கேட்க சொன்னதற்கு மாற்றாக பேச்சு எங்கெங்கோ திசை திரும்புகிறதே என்ற கவலையோடு கவனித்தார் கஸ்துார். 

.. மோகன்தாஸ் தன் கரத்தை உயர்த்தி விரலால் சுட்டினார். “வனம் புக வேண்டிய அவசியமோ துறவு கொண்டு கடவுளை தியானிக்க வேண்டிய தேவையோ பெண்களுக்கில்லஒரு ஆணை திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அவங்கள கவனத்துக் கொள்வதை விட மேலுலகம் போக வேற பயிற்சி தேவையா என்ன அவங்களுக்கு? 

அதாவது ஆண் அமைதியாக உட்கார்ந்து தியானித்துக் கொண்டிருக்கும்போது அவள் மட்டும் உடற்பாரத்துக்கான சுமைகளை தேர்ந்தெடுத்துக்கணும்னு சொல்றீங்க. பெண் மாபெரும் சக்திங்கிறீங்க. ஆனா நடைமுறையில பெண்ணுங்கிறவ ஆணுக்காக படைக்கப்பட்ட பண்டம் போலதானே நடத்தப்படறாங்க. மனைவியை குறைந்தபட்சம் தனக்கு சமமானவளாக நினைக்கலாமில்லையாஅதுவும் இந்திய கணவர்கள் ரொம்பவும் மோசம். அவங்களுக்கு எல்லாமே வாய்ச்சிருக்கு. மனைவிகளுக்கோ வேலை வேலை வேலைதான்.. 

பா அரிந்து வைத்திருந்த பச்சை வெங்காயங்களை கணவனின் தட்டில் எடுத்து வைத்தார். “மிலிநீ புறத்தோற்றத்தை யதார்த்தம்னு தவறாக புரிஞ்சுக்கிட்டே. “சாமானிய தளத்தில் அவள் ஆணுக்கு ஊழியம் செய்யறதுனால இந்த கருத்து உனக்கு வந்திருக்கலாம். இப்படி யோசிச்சுப்பாரேன்தன்னை விட சிறியவர்களுக்கு தொண்டு செய்வது மகத்தானவர்களுக்கு ஒரு பெருஞ்செயல் இல்லையா? 

இதையெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தறதுக்கு சொல்லப்படுற அலங்கரிப்பு வார்த்தைகள்சட்டென்று மறுத்தாள் மிலி. 

பா மேசையிலிருந்த சாஸரில் மகன்களுக்கு சாலட்டை நிரப்பி வைத்தார். மோகன்தாஸ் விளையாட்டாக குரலை தாழ்த்திஉனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா ஆண்கள் இன்னும் அந்த இலட்சிய நிலையை எட்டலை. வாழ்வின் உயர்தளங்களில் பெண் ஆணுக்கு சமமானவளாகவும் சொல்லப்போனா உயர்ந்தவளாவும் இருக்கிறாங்கிற உண்மையை அவங்களோட இதயங்களில் உணர்வாங்கசரி.. அதை விடுநீ ஏதோ சொல்லணும்னு நெனக்கிறேஆம் கரக்ட்? 

மிலி அதை கண்டுக்கொள்ளாதவள் போல, பெத்தவங்க அரவணைப்புல இருக்கவேண்டிய பருவத்தில பிள்ளைகளுக்கு வேணுங்கறதை  செய்ய வேண்டியது பெத்தவங்களோட கடமையில்லையா? இப்போ இருக்கற காலக்கட்டத்தில  கோட்டும் ஷுக்களும் அணியணும் நினைக்கறது சிறுவர்களின் எளிய விருப்பம்தானே? 

கஸ்துாரின் கண்கள் பளபளத்தன. ஆனால் அவர் கணவரின் வார்த்தைகள் அத்தனை நாசுக்கானவை. “மனிதன் தனக்குரியதைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவனுக்குரியவர்கள் அவனில் ஒரு பகுதியே 

ஆனா கணவரோ தந்தையோ தன் மனைவி குழந்தைகள் மேல் உரிமை செலுத்தறதை என்னால ஏத்துக்க முடியாதுஎன்றபோது காந்தி மெதுவாக ஆப்ரகாம் தன் மகனை கடவுளுக்கு பலிக்கொடுத்த கதையை சொல்லத் தொடங்கினார். தெரிந்த கதையென்றாலும் எல்லோரும் பொறுமையாக காது கொடுக்க வேண்டியிருந்தது. 

பாபூநீங்க ஏன் இந்த கதையை இப்போ சொன்னீங்கன்னு தெரியில. ஆனா இந்த கதையினால உங்க பாயிண்ட் இன்னும் பலவீனமா போயிடுச்சு. அவருக்கு விருப்பம்ன்னா அவர் தன்னைதான் பலிக் கொடுத்துக்கணுமே தவிர தன்னோட பிள்ளைய அல்ல 

இந்த கதை உங்க வேதத்திலதானே இருக்கு? ஆபிரகாம்ட்ட அவரது மகனை பலிக்கொடுக்க சொன்னது உங்க கடவுள்தானே?வெண்ணெயை தடவிய கோதுமை ரொட்டியை மடித்து வாயில் வைத்தார். 

ஹென்றியோ மற்றவர்களோ எதுவும் பேசவில்லை. மிலி விவாதத்தை தொடரவே விரும்பினாள். 

கடவுள் ஆப்ரகாமிடம் அப்டியொரு படையல் கேட்டிருப்பாருன்னு தோணல. கடவுள் எப்படிப்பட்டவருன்னு மனிதன் தன் போக்கில் புரிஞ்சுக்கிட்டதோட விளைவு இது. குழந்தையை பிறக்க வைக்கறதில தான் ஒரு காரணிங்கிற உண்மையை அதை அழிக்க பயன்படுத்திக்கிற உரிமையா எடுத்துக்கிட்டான்னா அந்த ஆணை காட்டுமிராண்டின்னுதான் சொல்வேன் 

அப்டீன்னா நீ உங்க வேதத்தை ஏத்துக்கலைன்னு எடுத்துக்கவா? 

பா எலுமிச்சை பானத்தை மகனை நோக்கி நகர்த்தி வைத்தார். மிலி விடுவதாக இல்லை என்பதை போலிருந்தாள். 

பாபூஇது உண்மை நிகழ்வா கூட இருக்கலாம். ஆனா ஆப்ரகாம் ஈசாக்கை பலி கொடுக்கணும்னு கடவுள் எதிர்ப்பார்த்தார்ங்கிறதை நான் நம்பல. தன் மனைவி குழந்தைகளோட உயிர் மேல ஒரு மனிதனுக்கு உரிமை இருக்குங்கிற நம்பிக்கை கூட எனக்கு பிடிக்கல 

மிலிஇந்த கதையை ஆப்ரகாமோட துயரமும் நம்பிக்கையும் சோதிக்கப்படுறதா புரிஞ்சிக்கிட்டா வேறொரு கோணம் கிடைக்குமில்லையா? கதை கூட அதனாலதான் அவரை மையப்படுத்தி சொல்லப்பட்டிருக்கு 

மிலி அவசரமாகபாபூநீங்கள் சொல்றது இதயத்துக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம். ஆனால் என்னோட மூளை அதை ஏத்துக்காதுஎன்றாள். 

அப்படின்னா உன் மூளை தவறு செய்யுதுன்னு அர்த்தம். அதை நீ நம்பாதே. யாராவது தன்னோட அவயங்களை பத்தி எப்பவும் நினைச்சுக்கிட்டோ அதிலே பிரத்யேக கவனம் செலுத்திக்கிட்டோ இருப்பாங்களா? அது அவங்களோட ஒரு பகுதி. அவ்ளோதானே? பிற பகுதிகளை கவனித்துக் கொள்ளும்போதே அதுவும் கவனிக்கப்பட்டு விடுகிறது 

நோநோபாபூ.. இதுல எனக்கு உடன்பாடில்லைன்னுதானே சொல்றேன். நம் அன்புக்குரியவங்களுக்கு வேணும்னே மரியாதை கொடுக்காமல் இருப்பதும் அதேசமயம் தங்களுடைய நல்ல தன்மைகளை அந்நியரிடத்தில் காட்டுவதையும் என்னால நியாயப்படுத்தவே முடியாது 

அவள் சகோதரனும் பிடிவாதக்காரர்தான். “நீ எப்போதாவது எவரையாவது அவர் எது சொன்னாலும் சரியாயிருக்கும்னு முழுசா நம்பியிருக்கியா? 

இதுவரைக்கும் இல்ல. அப்படியே நம்புணும்னா அவங்க எல்லையற்ற அறிவுடையவங்களா இருக்கணும் 

ராமதாஸ் சாப்பிட்டு முடித்திருந்தான். அவன் தட்டு காலியானது குறித்த திருப்தி கஸ்துாரின் முகத்தில் பிரதிபலித்தது. அவர் தேவதாஸை உண்ணுமாறு கூறினார். 

நீ யாரிடமும் மண்டியிட மாட்டாய்அப்டிதானே?என்றார் காந்தி கேள்வி கேட்கும் தோரணையில். ஆனால் கண்கள் ஒளிர்ந்தன. 

ஆமா பாபூநான் யார்ட்டயும் என்னோட அறிவை முழுசா ஒப்படைக்கமாட்டேன் 

அப்டீன்னா உனக்கு குரு என்று யாருமே இருக்க முடியாது மிலி 

பாபூநான் சொல்றது அகங்காரமா தெரியலாம். நான் என்னை உண்மையை தேடி செல்பவளா நினைக்கிறேன். அது யாரிடமும் முழுசா கிடைக்காது 

அதை உன்னால அடைய முடியும்னு நம்புறியா மிலி?“ 

இல்லஉண்மையை கண்டாச்சுன்னு நினைச்சேன்னாலே அது உண்மையில்லேன்னு தெரிஞ்சுடும். எல்லைகளற்ற ஒன்றை என்னோட குறைப்பட்ட அறிவால எப்படி உணர முடியும் சொல்லுங்க? 

நீ ஒருபோதும் அமைதியடைய முடியாது மிலிபாபுவின் குரலில் துயரமிருந்தது. எலுமிச்சைச்சாற்றை மெலிதாக உறிஞ்சினார். பா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் மறைமுக கோரிக்கை நிறைவேறுமா இல்லையா என்பது போலிருந்தது அவரது பார்வை. 

மிலிஆன்மாவின் தேவைகளை காணக்கூடிய அகக்கண்ணை மறைக்கும் விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காம இருக்கறதுதான் நல்லதுஎன்றார் முத்தாய்ப்பாக. எதிர்பார்த்த பதில்தான். கல்விக்கே அவரிடம் அளவுக்கோல் இருக்கும்போது இம்மாதிரியான சிறுப்பிள்ளைத்தனமான ஆசைகளையெல்லாம் அவர் முன் வைத்து விட முடியாது. கஸ்துாருக்கு ஏமாற்றமாக இருநதது. மூத்த மகன்கள் இருவரும் அருகில்லாதது கூட அவருக்கு ஏமாற்றம்தான். மூத்த மகன் ஹரிலால் இந்தியாவில் தங்கி விட்டதாகவும் அவனுக்கு அவன் தந்தையை போல கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வம் இருப்பதாகவும் பா மிலியிடம் கூறியிருந்தார். மோகன்தாஸ் தனது பதிமூன்று வயதான இரண்டாவது மகன் மணிலாலை ஃபீனிக்ஸ் குடியிருப்பிற்கு அனுப்பி விட்டார். ஃபீனிக்ஸ் நிலையம் அருகில் நார்த்கோஸ்ட் லைன் பகுதியில் ஒரு பண்ணையை வாங்கி அதை ரஸ்கின் மற்றும் டால்ஸ்டாயின் சிந்தனைகளை கறாரான வர்த்தகக் கோட்பாடுகளுடன் இணைக்கும் பரிசோதனை முயற்சி அது. இந்தியன் ஒப்பீனியன் இதழின் அச்சுப்பணிகளும் அங்கேயே நடைப்பெற தொடங்கியிருந்தன. இன்னும் முதிராத அந்த குடியிருப்பின் பெரிய நிலப்பகுதியை சுத்தப்படுத்துவதும் தாவரங்களை உண்டாக்கி பேணுவதும் மேலும் மேலும் அறிதலை வளர்க்கும் என்பது அந்த தகப்பனின் கருத்தாக இருந்தது. மகனை கண்காணிக்கும் பொறுப்பை அங்கிருந்த தன் உறவினரான சகன்லாலிடம் ஒப்படைத்திருந்தார். 

இப்போது சிறைக்கு சென்றிருக்கும் இத்தருணத்தில் கூட இந்தியன் ஒப்பீனியன் இதழை சகன்லாலிடமும் ஹென்றி போலாக்கிடமும் ஒப்படைத்திருந்தார். அந்த இதழின்ஜோஹானஸ்பர்க் லெட்டர் பகுதியில்Passive Resistance’ என்பதற்கு இணையான இந்தியச் சொல்லுக்கான யோசனைகளை முன்னரே வரவேற்றிருந்தார். வந்திருந்த பல யோசனைகளில் மகன்லால் காந்தியின் சதாக்கிரகம்என்ற வார்த்தை காந்திக்கு பிடித்திருந்தது. “நல்ல நோக்கத்தில் உறுதியாக இருப்பதுஎன்று சொல்லிப்பார்த்துக் கொண்டபோது அது மிலிக்கும் கூட பிடித்துதானிருந்தது. அதை கொஞ்சம் துல்லியமாக்கிசத்தியாக்கிரகம்என்று பாபு சொன்னபோதுவாவ்என்றாள் மிலி. அவரோ இது passive என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும் பரிசுக்குரிய வார்த்தை கிடைக்கும் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு பெருந்தன்மையாக ஒப்புக் கொள்பவர் போல முகத்தை வைத்துக் கொண்டு மிலியை நோக்கினார். அதை கண்டு அவள் சிரித்த போது அவரும் பகபகவென்று சிரித்தார்.  

மிலி உறக்கதிலிருந்து எழுந்து அழுத தன் சின்னஞ்சிறு மகனை அள்ளியெடுத்துக் கொண்டாள். அது பாலுக்கான அழுகை. ஹென்றியும் அவளும் இரண்டு குழந்தைகளும் முக்கியமாக காந்தியும் இருந்த வீடு இப்போது யாருமற்ற வெறுமைக்குள் புகுந்துக் கொண்டிருந்தது. நேட்டால் இந்திய காங்கிரஸ் கூட அவர் கைதானதை எதிர்த்து பெரிய கூட்டமொன்று நடத்தியது. அக்கூட்டத்தில் டாக்டர் நாஞ்சி, காந்தி சிறைக்கு சென்றிருப்பது கஸ்துார் பாவுக்குதான் பெரிய இழப்பு என்றாராம். ஹென்றி இதை கூறியபோது மிலிக்கு ஃபீனிக்ஸ் குடியிருப்பிலிருக்கும் பா வையும் அவரது நான்கு மகன்களையும் பார்க்க வேண்டுமாய் தோன்றிய எண்ணத்தை உடனே செயல்படுத்தவும் செய்தாள். பா வுக்கு கணவனை பிரிந்ததில் வருத்தமிருந்தாலும் அதை அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தனது ஏறுமாறான வாழ்விலிருந்து இந்த கலையை அவர் ஏற்கனவே கற்றிருக்க வேண்டும். 

அன்று மிலி, கோட்டும் ஷுக்களும் உங்கள் குழந்தைகளுக்கு சிபாரிசு செய்ய இயலாததற்கு என்னை மன்னித்து விடுங்கள் பா என்று காந்தியுடனான தனது தோல்வியை ஒப்புக் கொண்ட போது, பா, அவர், தான் கற்றுக் கொண்ட குழந்தை ஆங்கிலத்தில் டோண்ட் லைக் திஸ் டைப் ஆஃப் ஆடிட்டியூட் ஃப்ரம் ஹி்ம்..” என்றார். மகன்களை இழுத்து வைத்து புராணக்கதைகளை சொல்வதிலும் கீதைக்கு விளக்கம் கூறுவதிலும் பா வுக்கு ஆர்வமிருந்தது. வீட்டு வேலைகள் அதிகமென்பதால் மகன்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போவது அவருக்கு வருத்தம்தான். ஆனால் அதை விட வருத்தமான விஷயம் அவரது கணவர் உணவு வகைகளில் பல்வேறு விதமாக பரிசோதனைகள் செய்வது. சில நாட்கள் உப்பில்லாமலேயே உணவுகள் தயாராகும். அடிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களினால் காய்ச்சப்படும் சர்க்கரையை நிராகரிப்பார். குழந்தைகளுக்கு பிடித்தமான வறுத்த உணவுகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்தன. முட்டைகோஸ் சூப்பும் பச்சை வெங்காயமும் அலுத்துப்போயின. மிலிக்கு தன் தோழியின் தாய்மை ஏக்கம் புரிந்திருந்தது. 

அவளுக்குமே டிராய்வில்லில் ஆல்பர்மர் தெருவில் பா வோடும் மகன்களோடும் வாழ்ந்த வீட்டிலிருந்து அவர்களை பிரிந்து வந்தது ஏக்கமாகதானிருந்தது. பாம்பாத்தா கலகம் வெடித்தபோது ஆம்புலன்ஸ் படையணியை உருவாக்குவதற்காக மோகன்தாஸ் நேட்டாலுக்கு செல்ல வேண்டியிருந்ததால் மனைவியையும் மகன்களையும் ஃபீனிக்ஸில் குடியமர்த்தினார்.  அவளுக்கு அந்த பயணம் இன்னும் நினைவிலிருந்தது. இரண்டு பகலும் ஒரு இரவும் பிடித்த அந்த ரயில் பயணம் அவர்களை மிகவும் களைத்துப்போக வைத்திருந்தது. சரியாக அமைக்கப்படாத கடினமான பாதையில் இரண்டு மைல் துாரம் மங்கலான விளக்கொளியில் வழியெல்லாம் பாம்புகள் பற்றிய பயத்தில் நடந்து சென்றதும் தேவதாஸ் களைப்பில் அழுதுக் கொண்டே வந்ததும் அங்கு போய் சேர்ந்துமே இரவு உறங்குவதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்துக் கொள்ள வேண்டியிருந்ததும் இப்போது எண்ணினாலும் பயமுறுத்தியது. பண்ணையிலும் பாம்புகளுக்கும் நரிகளுக்கும் பஞ்சமிருக்காது. எதையும் யாரும் கொல்லவோ துன்புறுத்தவோ முடியாது. தண்ணீரை அளவாக உபயோகிக்கும்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். ஜுலுக்களின் பிரச்சனை வேறு. பண்ணைக்கும் இரயில் நிலையத்துக்குமிடையே ஆயிரம் ஏக்கர் அளவில் பெரிய கரும்புத் தோட்டமிருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகிலிருக்கும் சிறிய கடையை விட்டால் பொருட்கள் வாங்க வேறிடம் கிடையாது. 

கஸ்துார் மிலியின் மகனை கையிலெடுத்துக் கொஞ்சினார். மதிய உணவுக்கு பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், தன் கணவர் கைதானதில் தனக்கு வந்து ஏராளமான தந்திகளை எடுத்துக் காட்டினார். அவற்றில் பொதுவாக, இந்தியர்களின் நலனுக்காக திரு காந்தி சுடர் விட்டு பிரகாசிக்கும் தியாகத்தைப் புரிந்திருக்கும் இவ்வேளையில் திருமதி காந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களது கஷ்டங்களுக்காக எங்களின் உளப்பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்பதான வாசகங்கள் இருந்தன. 

அங்கிருந்து கிளம்பியபோது ஹரிலால்என்னோட அப்பா முறையான படிப்பு படிச்சிருக்கார். ஆனா எனக்கு மட்டும் ஏன் அது கூடாதுங்கிறாரு?என்றான் மிலியிடம். முகத்தில் கோபம் அழுத்தமாக படிந்திருந்தது. 

ஹரிஉன்னோட கேள்வி நியாயமானதுதான். இன் ஃபேக்ட்,  அவர் டர்பனில் இருக்கறப்போ மகன்களுக்கெல்லாம் முறையான கல்வி கொடுக்கணும்னுதான் நினைச்சிருந்தாராம். ஆனா எங்கே எப்படி கல்வியளிக்கறதுன்னு அவருக்கு தெரியில. மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளிகளில் அவர் சேர்க்க விரும்பல. ஐரோப்பியர்களுக்கான பள்ளிக்கு அனுப்பினா அது அவருக்கு கிடைச்ச சலுகையா போயிடும். அப்படியே சேர்த்தா கூட பிள்ளைகள் இனரீதியான ஏளனத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.. அப்றம் 

மிலியின் பேச்சை இடைவெட்டினான் ஹரிலால். எல்லாம் சரிதான். ஆனா முறையான கல்வி அவருக்கு கிடைச்சிருக்கலேன்னா இப்போ செஞ்சிக்கிட்டிருக்க வேலையை அவரால செய்ய முடியாது தெரியுமா? 

மிலி பதிலேதும் சொல்லவில்லை. அவன் அழுத்தமாகவும் கோபமாகவும்நானும் அவரை போல ஆகணும்என்றான். 

பல்வேறு எண்ணங்களில் மூழ்கியவளுக்கு பசியாறி விட்டு மடியிலேயே உறங்கிப்போன மகனின் நினைப்பு வந்து உறுத்த அவனை துாக்கி படுக்கையில் கிடத்தி விட்டு காந்தியின் அறையை எட்டிப்பார்த்தாள். அன்றைய தினம், இருக்கும் சிறிய அறைகள் இரண்டை தங்களுக்கொன்றும் பாபுக்கொன்றுமாக ஒதுக்கி விட்டு கணவனை அழைத்துக் காட்டியபோது அவன்ஓய்ரெண்டு ரூமையையும் அழகா மாத்திட்டியே?என்றான்.  பிரியமான நேரங்களில் மிலியை ஓய்என்று அழைப்பான். 

ஆமாஒண்ணு நமக்குஒண்ணு பாபுவுக்கு என்றாள். 

பாபுவுக்கான அலமாரியில் அவருடைய சட்டப்புத்தகங்கள்,  சைவ உணவு முறை குறித்த பிரசுரங்கள், குர்ரான், பைபிள், பகவத்கீதை மற்றும் சில இந்துசமய நுால்கள் இவற்றோடு டால்ஸ்டாயின் படைப்புகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. முன்வரிசையில் அவற்றை முந்திக்கொண்டு ஜான்ரஸ்கினின்கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற தலைப்பிட்ட புத்தகம் நின்றிருந்தது. காந்தியின் பல்வேறுப்பட்ட பணிகளில் அடுக்கி வைத்தல் போன்ற உதவிகள் அவருக்கு மிகவும் தேவையாக இருந்தன. ஜோஹானஸ்பர்க்கிலும் டர்பனிலும் அவர் ஆற்றிய சட்டப்பணி அவரது வருமானத்திற்கானது. டிரான்ஸ்வாலிலும் நேட்டாலிலும் இந்தியர்களின் உரிமைகளை காப்பதற்காக எடுக்கப்படும் அரசியல் முன்னெடுப்புகள் அவருக்கு சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுத் தந்திருந்தது. அவர் நடத்தி வந்த இந்தியன் ஒப்பீனியன் செய்தித்தாளில் அவரெழுதும் கட்டுரைகள் அவருடைய அரசியல் பணிகளுக்கு பிரச்சாரமாக அமைந்தன. 

இதழின் வேலைகள் தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கும்போது வெறுமனே வீட்டை சுற்றிப்பார்த்துக் கொண்டிருப்பது உள்ளத்தை உறுத்த வேர்கடலைகள் இருந்த கிண்ணத்தை மனைவியிடம் நீட்டிஎனக்கு போதும் மிலிநிறைய வேலையிருக்கு என்றான் ஹென்றி. 

ப்ளீஸ்ப்ளீஸ்ப்ளீஸ்இன்னும் ஃபைவ் மினிஸ்ட்ஸ் மட்டும்தான். இதை மட்டும் பாத்திருங்க கீழே.. கீழே பாருங்கஉங்க காலுக்கு கீழேஎன்றாள் துண்டுதுண்டாக. அவன் அப்போதுதான் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தையும் கூடவே சாளரங்களில் புதிதாக தொங்கவிடப்பட்டிருந்த திரைசீலைகளையும் கவனித்தான். திரைசீலை வாங்குவது தொடர்பாக பாபுவுக்கும் மிலிக்கும் ஏகப்பட்ட வாக்குவாதங்கள் நடந்தும் உடன்பாடு எட்டாமல் வழக்கு அவனிடம் வந்திருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. 

திரைச்சீலைகள் வீட்டை அழகுப்படுத்தும்ங்கிறது என்னோட கட்சி. ஆனா பாபு அது இயற்கையான வெளிச்சத்தை காட்சிகளையும் மறைச்சிடும்னு சொல்றாருஎன்றாள் மிலி கணவனிடம் புகார் சொல்லும் விதமாக. அவள் லேசாக கண்ணடித்தது போலிருந்தது ஹென்றிக்கு. காந்தி அவன் சொல்ல வருவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். 

அவன் தீவிரமான தொனியில் அண்ணா எது இயற்கையின்னு நமக்கு தெரியிலன்னு நெனக்கிறேன்என்றான். 

நோநோநமக்கது நல்லாவே தெரியும். நமது உள்ளுணர்வின் வழியாக அது மிக தெளிவாக நம்மிடம் பேசுகிறது. ஆனால் அதை நாம கூர்ந்து கேட்கணும் என்றார் அவரும் தீவிரமாக. 

அவர்கள் எண்ணங்களால் வேறெங்கோ செல்வது புரிந்து மிலி விளையாட்டு பேச்சை நிறுத்தி விட்டு கணவனை கெஞ்சலாக பார்க்க, அவன் அவரிடம் பேசி திரைசீலைக்கு ஒப்புதல் வாங்கித் தந்தபோது அவளுக்கு கணவன் மீது சற்று பொறாமையாக கூட இருந்தது. கூடவே நாற்காலிகளுக்கு மெத்தைகள் தைப்பது குறித்தும் அவள் அனுமதி வாங்கிக் கொண்டாள். அன்றிரவு அவனிடம் ரகசியமாக சுவரில் மாட்டுவதற்கு படமொன்று வாங்கியிருப்பதாக சொன்னபோது அவன் அதை காட்டுமாறு கேட்டான். அது அழகான குழந்தையொன்றின் படம். அவன் கண்கள் பளபளக்க நிமிர்ந்தபோது அவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 

மோகன்தாஸுக்கு மனைவி மகன்கள் அடங்கிய தனது பெரிய குடும்பத்துக்கான பொருள் தேடல் குறித்த கடமையோடு சுயம் அறியும் தேடலும் மதங்களுக்கிடையேயான உரையாடலும் உணவு மருத்துவம் ஆன்மீகம் என்று பெருகிய ஆர்வமும் அவரை ஓரிடம் நிற்காதவராக மாற்றியிருந்தன. கூடவே பிரம்மச்சரியத்தின் மீதும் பிடிப்பு வர தொடங்கியிருந்தது. இவள் பா விடம் இது பற்றி கேட்டபோது அவர் ஏற்கனவே நாலு பசங்கஎன்று சிரித்தார். 

தன் ரசனைக்கேற்ப மாற்றியிருந்த வீட்டை கணவனுக்கு காண்பித்த பிறகு நல்லாருக்கா..? நல்லாருக்கா? வீடு எப்டியிருக்குன்னு சொல்லு ஹென்றிஎன்றாள் மிலி கெஞ்சலாக.  சிறுபிள்ளையாய் மலர்ந்ததிருந்த மனைவியின் தோற்றம் சட்டென்று நெகிழ்த்த அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஹென்றி. திண்மையான உடற்கட்டும் நேர்த்தியான உருவமும் கொண்ட இருபதுகளின் நடுவிலிருக்கும் யூத இளைஞன் அவன். அடர்ந்த அவன் தலைமுடியும் மூக்குக்கண்ணாடிக்கு பின்னிருந்த அவனது உருண்டையான அறிவார்ந்த விழிகளும் கூரிய நாசியும் அடர்ந்த புருவமும் மெல்லிய உதடுகளும் அந்த நீள்முகத்தில் பொருத்தினாற்போல் அமைந்திருந்த காதுகளும் அவனை மேலும் கவர்ச்சியானவனாக காட்டியது. இந்தியாவுக்கு வருவதற்குமுன்பே அந்நாட்டின் மீது நல்லவிதமான சித்திரம் கொண்டிருந்தான். இந்திய நலன்கள் மீதான முழுஅக்கறையும் பிடிவாதமான குறுகிய மனப்பான்மைக்கும் மதவெறிக்கும் முடிவுகட்ட வேண்டும் என்பதிலும் அவனுக்கு ஆர்வமிருந்தது. தன் சொந்த இனம், குழு அல்லது மதப்பிரிவின் விடுதலையில் அல்லாமல் மொத்த மனித இனத்தின் ஒன்றுபடுதலில் நம்பிக்கை கொண்டிருந்தான். 

எப்டீ.. எப்டீ மிலி ஒரே நாள்ல இதெல்லாம் சாத்தியம்?” கிண்ணத்திலிருந்த நிலக்கடலைகளை எடுத்து  வாயிலிட்டுக் கொண்டான். 

நான் யாரு? மிலி கிரகாம் போலாக். என்னால எல்லாமும் முடியும்நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாள் மிலி. எப்படியோ போராடி காதலனுடன் இணைந்து விட்ட திருப்தி அவளுடலை மெருகேற்றி மேலும் மென்மையாக்கியிருந்தது. 

அந்த இந்திய இளைஞனுக்கு இடம்?அவர்களுடன் இந்திய இளைஞன் ஒருவனும் தங்கியிருந்தான். 

முன்னறைதான் இப்போ ஃப்ரீ ஆயிடுச்சுல்ல. அவர் அங்கே தங்கிக்கலாம் 

அறைகலன்கள் இல்லாத முன்னறை தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறியிருந்தது. பாபூ சொல்வதுபோல உடைமைகளுக்கு அடிமையாவது பெரும் பிசகுதான் என்று தோன்றியது ஹென்றிக்கு. அறைகலன்களும் அநாவசிய பொருட்களும் இல்லாதது உடனுக்குடன் வீட்டை விடுப்பதற்கும் வசிப்பதற்கு மட்டுமே கொள்ளத்தக்க இடமாக அதனை கருதுவதற்கும்  வாய்ப்பளிக்கும். ஒருமுறை குஜராத்தை சேர்ந்த காந்தியின் சிறு வயது  நண்பரொருவர் வியாபாரம் நட்டப்பட்டு பணமுடை ஏற்பட்டுப்போனதால் மனம் நொந்து மோகன்தாஸை பார்ப்பதற்காக டிரான்ஸ்வாலிலிருந்து வந்திருந்தார். அவரின் பின்புலம் காந்திக்கு தெரிந்திருந்தது. 

நீங்க உங்க வீட்ல இருக்கற அவசியமில்லாத பொருள்களையெல்லாம் வித்துட்டா கணிசமான பணம் கிடைக்குமே?“ காந்தியின் தடாலடியான இந்த ஆறுதலை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர்கள் பரம்பரையாக தென்னாப்பிரிக்காவில் தொழில் செய்திருந்தமையால் அவர்களிடம் பொருட்கள் நிறையவே சேர்ந்திருந்தன. 

பரம்பரையாக வந்தவைகளோ பரிசாக கிடைச்சதோ எதுவானாலும் சரிஅதையெல்லாம் பாதுகாப்பதே பெரிய வேலையாகவும் பிறகு அதே கவலையாகவும் மாறிடும். பொருட்களை விட்டு விலகாமல் அவற்றின் மீது அதீதமா பற்று வைச்சிருந்தோம்னா அது ஆன்மாவை காயப்படுத்திக்கிறதுக்கு சமம். உங்களோட பிரச்சனை என்னன்னு சொல்லட்டுமா?என்றபோது அந்த நண்பர் பேசாமலேயே அமைதி காத்தார். நண்பரின் பேச்சில் அவருக்கு உடன்பாடில்லாமல் இருந்திருக்கலாம். 

மோகன்தாஸ் அதை சட்டை செய்யாதவராகஉங்களிடம் எவ்வளவு பொருள்கள் இருக்குதுங்கிறதை விட உங்களிடம் இருக்கற பொருள்களைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதுதான் முக்கியம். ஒற்றையாடையை மட்டுமே வச்சிருந்த துறவியொருத்தர் அரசரை பார்க்க வந்திருந்தாராம். துறவி உண்மையாகவே பொருளாசையிலிருந்து விடுதலையாகிட்டாரான்னு சோதிப்பதற்காக அரசர் தனது தவவலிமையால அந்த அரண்மனையை எரிச்சிட்டாராம். இப்போ அரண்மனையிலிருந்த அத்தனை பொருள்களோட அந்த ஒற்றையாடையும் எரிஞ்சுப்போச்சு. அந்த துறவி மிகுந்த கவலையாகிட்டார். அரசர், உங்களிடம் இருந்தது ஒரேயொரு ஆடை மட்டும். அதற்கு பதிலா எளிதாக வேறொரு ஆடையை பெற்றுக்கொள்ளலாம். ஆனா என்னோட அழகிய மாளிகைக்கும் அதிலிருந்த அபூர்வமான பொருள்களுக்கும் மாற்றே கிடையாது. ஆனா நீங்கதான் என்னை விட ரொம்ப வருத்தப்படுறீங்கன்னு சொல்லிட்டு அர்த்தத்தோட அந்த துறவியை பார்த்தாராம் பாபு இதை சொல்லிக்கொண்டே அந்த மனிதரை பார்த்தபோதும் அவர் பேசாமலேயே இருந்தார். மோகன்தாஸுக்கு நண்பரின் எண்ணவோட்டம் புரிந்தாலும் விடாப்பிடியாகநம் வாழ்க்கைய பொருட்களால் நிறைத்துக் கொண்டால் அதன்பின் நம்மால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாதுஎன்றார்.  அவர் கிளம்பிய பிறகு காந்தி, நான் இப்போ என்னோட நண்பருக்கு அன்புள்ள எதிரியாயிட்டேன் என்று சிரித்தது நினைவுக்கு வந்தது ஹென்றிக்கு.  

ஹரிலால் கூட கணவரின் அன்புள்ள எதிரியாகி விட்டதாக பா சொன்னார். அப்போது அவர்கள் டர்பனில் பீச்குரோவ் பகுதியில் வசித்திருந்தனர். அந்த வீடு தனியானது என்றாலும் தாராளமான அறைகளையும் ஐரோப்பியரின் வீட்டை போல அறைகலன்களும் அழகான தோட்டமும் கொண்டதாக இருக்குமாம். ஆனால் கிரே தெருவில் வசிக்கும் குஜராத்தி பெண்களை சந்தித்து பேச வேண்டுமென்றால் கூட அதற்கென தனியாக மெனக்கெட வேண்டியிருக்கும் என்றார். அங்கு அவர்களுடன் குஜராத்தி சமையல்காரரும் தமிழ் பேசும் எழுத்தரான வின்சன்ட் லாரன்ஸ் என்பவரும் இருந்தனராம். அவர்களின் பதினாறு வயது மூத்த மகன் ஹரிலால் தகப்பனை போலவே இருப்பானாம். பம்பாய் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவதற்காக வேண்டி இந்தியாவிலேயே தங்கி விட்டதில் அவருக்கு நிறைய வருத்தமிருந்தது. ஆனால் மிலியும் ஹென்றியும் அவரை சந்தித்த நாளொன்றில், பா, ஹரிலால் காதலில் விழுந்து விட்டான் என்றார். சற்று பதற்றமாகதான் பேசினார். அது மகிழ்ச்சியிலா? வருத்தத்திலா என கண்டுப்பிடிக்க இயலவில்லை அவர்களால். மகன், இந்தியாவில் ராஜ்கோட் வழக்கறிஞர் ஹரிதாஸ் வோரா என்பவரின் மகளை காதலிக்கிறான் என்றும் அதை கணவனிடம் சொல்லும் துணிச்சல் தனக்கில்லை என்றும் ரகசியமாக கூறினார். ஒருவேளை  இதற்கும் மிலியின் சிபாரிசு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த துணிச்சல் மிலிக்குமே இல்லை. இருந்திருந்தால் அன்று காந்தி அலுவலகத்துக்கு கிளம்பிய பிறகு அவரை மருதாம்பா தேடி வந்த விஷயத்தை அப்போதே கூறியிருந்திருப்பாள். 

அப்போது மருதாம்பா சுப்பையாவின் மீது காதல் கொண்டிருந்தாள். அவள் டாக்டர் பூத்திடன் உதவியாளராக பணியாற்றியவள். தனக்கென சொந்தம் யாருமற்றவள். அது மிலி லண்டனில் இருந்த காலக்கட்டம். சுப்பையா, பிரிட்டிஷாருக்கு ஆதரவாக போயர்களுக்கு எதிராக போரிட வேண்டி தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வந்தவன். கப்பல் பயணம் உடலை முடக்கி இறக்கக்கிடந்தவனை வைத்தியம் பார்க்கும்பொருட்டு மோகன்தாஸ் மிகுந்த நெருக்கடிக்கிடையே பெற்றுக் கொண்டிருந்தார். பிரிட்டிஷாருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவனை குணம் பெற செய்து, அவர்கள் செய்த உதவிக்கு கைமாறாக ஆம்பலன்ஸ் படையில் அவனை ஈடுப்படுத்தியிருந்தார்.  

பாபூ எதுக்கு பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவா ஆம்பலன்ஸ் படை உண்டாக்கினாரு? அதுவும் இராணுவ அனுபவமே இல்லாதவங்களை வச்சு?மிலிக்கு எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ஆர்வமிருந்தது. 

ஆம்புலன்ஸ் படையில் இந்தியர்கள் செய்திருந்த உதவியை ஹென்றியும் அறிந்திருந்தான். போர் முனைக்கு அனுப்பப்பட்ட இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் இருபத்தைந்து மைல்கள் நடக்கவும் பல மணி நேரம் உணவும் தண்ணீரும் இல்லாமலிருக்கவும் திறந்த வெளிகளில் படுத்துறங்கவும் வேண்டியிருந்தது. தம்மை சுற்றிலும் குண்டுகள் விழுந்துக் கொண்டிருக்கும் நிலையில் அடிப்பட்டவர்களை பாதுகாப்பிடங்களுக்கு சுமந்து செல்லவும் சிப்பாய்களை முகாம் விட்டு முகாம் தொடர்ந்து பின்தங்கியவர்களை கவனித்துக் கொள்வதுமாக பழக்கமில்லாத வேலைகளில் அவர்கள் ஈடுப்பட்டனர். வேறு சிலர் எதிரியால் கைவிடப்பட்ட ரைஃபிள்களையும் ரவைகளையும் பொறுக்கிக் கொண்டு வர அனுப்பப்பட்டார்களாம். ஸ்பியன்கோப் பகுதியில் கோவேறு கழுதைத்தொடர், சக்தியற்று விழுந்து கிடந்த சிப்பாய்களுக்கு தண்ணீரை சுமந்துக் கொண்டு கோப் குன்றின் அபாயமான சரிவில் ஏறிச் சென்றதாம். 

பிரிட்டிஷ் பேரரசின் குடிமக்கள்ங்கிற முறையில் பிரிட்டிஷ் தரப்புக்கு ஆதரவு தரலாம்னு அவர் நினைச்சிருக்கலாம். ஏற்கனவே டர்பன்ல டாக்டர் பூத் நடத்திட்டு வந்த ஆஸ்பிடல்ல பாபு தன்னார்வ பணி செஞ்சுட்டிருந்தார். அவர் கூட பாபுவை ஊக்குவிச்சிருக்கலாம். பிரிட்டிஷ்காரங்க ஜெயிச்சா இந்திய மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும்னு பாபுவுக்கு எண்ணிமிருந்தது எனக்கு தெரியும்என்றான் ஹென்றி. 

திடகாத்திரமானவர்களேயே உருக்குலைக்கக்கூடிய இரவு நேர பணிக்கு பிறகு சோர்வாகவும் மன அழுத்தத்தோடும் இருக்கும் சிப்பாய்களை காந்தி, விருப்பு வெறுப்பற்ற பாவத்தோடும் உற்சாகமாகவும் உரையாடலில் தன்னம்பிக்கையோடும் அணுகுவாராம். அவர் அன்பான கண்கள் கொண்டவராக இருந்தார் என்பதாக  கண்டவர்கள் சொன்னபோது மிலிக்கு குறுகிய நெற்றியும் கரிய மீசையும் கொண்ட அந்த இந்தியருக்கு கருணை மிகுந்த கண்கள் இருப்பது உண்மைதான் என்றெண்ணிக் கொண்டாள். ஆனால் அந்த கண்களுக்கு மருதாம்பாவின் காதல் தெரிய வரவில்லை. 

அப்போது மருதாம்பா ஃபீனிக்ஸ் குடியிருப்புக்கு வந்து விட்டிருந்தாள். குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை இரும்பும் நெளித்தகடுகளையும் கொண்டு அமைத்துக் கொண்டனர். அங்கு நிலம் எந்த தனிநபருக்கும் சொந்தமானதாக இருக்கவில்லை. பாதைகளும் சிறு சாலைகளுமே  ஒருவர் நிலத்தை மற்றவர் நிலத்திலிருந்து பிரித்தது. குடியிருப்புவாசிகள் அவரவருக்கு தேவையான பயிர்களை பயிரிட்டுக் கொண்டனர். இந்தியன் ஒப்பீனியன் இதழ் வெளிவரும் நாளில் குடியிருப்பே பரபரப்பில் ஆழ்ந்து விடும். காந்தியும் ஹென்றிபோலாக்கும் கடைசி நிமிடம் வரை கட்டுரைகளை அச்சுக்கு தந்துக்கொண்டேயிருப்பார்கள். ஆயில் இன்ஜின் பழுதாகி விட்டால் கூட இதழ் வேலைகள் நின்று விடாது. இயந்திரத்தின் கைப்பிடிகளை சுழற்றுவதற்கு ஜுலுக்களின் குடியிருப்பிலிருந்து திடகாத்திரமான பெண்கள் வரவழைக்கப்படும்போது மருதாம்பாளும் வரிந்துக்கட்டிக் கொண்டு வேலையில் இறங்கி விடுவாள்.  கடைசிதாள் அச்சிடப்படும்போது எப்படியும் நடுநிசியாகி விடும். வேலைகளெல்லாம் முடிந்தபிறகு பாபுவையும் பா வையும் அவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டு இரவு வணக்கம் சொல்லி விட்டு அவரவர் வீடு திரும்பும்போது அடுத்த நாள் பிறந்து விடும். 

மருதாம்பா இளமையின் வசீகரமும் களையான முகமும்  கொண்டிருந்தாள். பாபுவின் நடவடிக்கைகளின் மீது புரிதலும் ஏற்பும் கொண்டவளாக, இலட்சியவாதம் பேசுபவளாக இருந்தாள். சேவைகள் செய்வதிலும் ஆர்வமிருந்தாலும் வயது அவளை வென்றிருந்தது. சுப்பையாவின் மீது காதல் வசப்பட்டிருந்தாள். இது பாபுவுக்கு தெரிய வந்தபோது அவர் மிக மிக வருத்தம் கொண்டார். 

மருதாம்பா பற்றி நான் முழுசா தெரிஞ்சிருக்கேன்னு நம்பினேன். ஆனா அது உண்மையில்ல மிலிஎன்றார். 

காதல் அத்தனை மோசமான விஷயமா பாபூ?” 

அது அடுத்தக்கட்டத்தை எட்டியிருந்தால் அது மோசமான விஷயம்தானே? மேலும் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்காம இருந்தது பெரிய தப்பு. ஒருவேளை அவள் ஆதரவற்றவள். யாரிடமும் அவள் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லைங்கிற எண்ணம் என் மனசில இருந்திருக்குமோ? அதனால்தான் நான் அவளை சரியா கவனிக்கலையோ?வருத்தத்தில் தோய்ந்து வந்தது அவரது குரல். 

இப்டியெல்லாம் நீங்க உங்க மேல பழியை சுமத்திக்க அவசியமில்லை பாபூ 

ஆனால் டாக்டர் பூத்திடம் மருதாம்பாவை ஒப்படைக்கும் வரை அவர் அது பற்றி நிறையவே வருந்தியது அவளுக்கு தெரியும். ஆனால் மருதாம்பா தான் சுப்பையாவிடம் காதல் கொண்டதில் தவறேதும் இல்லை என்று தெளிவாகவே நம்பினாள். அதையே பாபுவிடமும் கூறியிருந்தாள். சுப்பையா இப்போதும் ஃபீனிக்ஸில்தான் இருந்தான். அவன் திருமணம் செய்து கொள்ளாமல் தீவிர பிரம்மச்சரிய விரதத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றும், தான், அந்த விரதத்தை உரிய காலத்தில் முடித்து வைக்கும்வரை அது தொடர வேண்டும் என்றும் காந்தி கூறியிருந்தார். 

நீங்க சுப்பையாவுக்கு அப்டி ஒரு தண்டனையை கொடுத்திருக்க வேணாம் பாபூஎன்றாள் மிலி. 

அது தண்டனையில்லஒருவன் பிரமச்சரியத்தை கடைப்பிடித்தானெனில், பூரணத்தை நோக்கி அவனால் தன் முழு கவனத்தையும் செலுத்த முடியும் 

ஆனால் அது சாமானிய மனித சிரமங்களை புரிந்துக் கொள்ள உதவாது. பாபூநீங்க சூசகமாக குழந்தை பெத்துக்கறதே தப்புன்னு சொல்றீங்க 

இல்ல. நா அதை தவறுன்னு சொல்லல 

திட்டவட்டமா சொல்லலேன்னாலும் குழந்தை பெத்துக்கறது சதையின் மேலுள்ள வேட்கைக்கு சலுகை கொடுப்பது மாதிரி்ன்னு ஒரு தொனி தெரியுது உங்க நடவடிக்கையில. உடல் வேட்கை ஒண்ணுதான் குழந்தைகளை படைப்பதற்கான ஒரே வழியா இருக்கு. அது இல்லாமபோனா மனித இனமே அழிஞ்சு போயிடும். உடல் வேட்கை அத்தனை கொடுமையான விஷயமா?“ 

ஆமான்னு உறுதியா சொல்ல முடியில. ஏன்னா மனித இனம் நாம் நம்பும் பூரணத்துவம் அடையறவரைக்கும் தொடர்ந்து வளர்ந்தாகணுமே. ஆனா வாழ்க்கையில் மாபெரும் லட்சியமும் பணியும் அமையப்பெற்றவர்கள் தங்கள் ஆற்றலையும் பொழுதையும் ஒரு சிறு குடும்பத்தை கவனிப்பதில் செலவழிக்கறது சரியா? அவங்க அதை விட பெரிய பணிக்காக இங்க வந்தவங்க இல்லையா?” 

எனக்கு ஒண்ணு புரிஞ்சுக்க முடியுது பாபூபிரம்மச்சரியத்தை கடைபிடிப்பது பெற்றோராக இருப்பதை விட உயர்ந்தநிலைன்னு நீங்க நினைக்கிறீங்க 

அவர் பதிலேதும் கூறாது மென்மையாக சிரித்தார். அடுத்தநாள் குழந்தையோடும் கணவரோடும் வந்திருந்த மருதாம்பாவை கூட இதே போன்று மென்மையான சிரிப்புடன்தான் ஆசிர்வதித்திருந்தார். ஏனோ அந்த சிரிப்பை இப்போது பார்க்க வேண்டுமாய் தோன்றிய கணமே, அவர் சிறையிலிருக்கும் உண்மை நெஞ்சை வருத்தியது. 

அவசரச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்ததிலிருந்தே அவர் போராட்டம், கூட்டம், அதிகாரிகளை சந்திப்பது, கடிதம் எழுதுவது, மனு போடுவது என்று பரபரப்பாகவே இருந்தார். வீடு திரும்பும்போது இரவு பதினொன்றோ இரண்டோ கூட ஆகி விடும். அன்று வெகுநாட்களுக்கு பிறகு ஒன்பது மணிக்கு உணவு மேசை நிரம்பிய மகிழ்வில் போலாக், அர்னால்டின் Song Celestial பாடலை வாசித்தபோது அதை மோகன்தாஸ் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவசரச்சட்டம் குறித்த விவாதம் ஓடியது. அதன் முடிவில் மோகன்தாஸ் மிக வருத்தத்தோடு, “இந்த சட்டம் ஆசிய மக்களின் வருகையை அடைச்சுட்டு அதற்கு பதிலா டிரான்ஸ்வாலை வெள்ளையர்களுக்கான இடமா மாத்திடும்என்றார். அன்றைய பிரார்த்தனையில் கூட அவர் அளவுக்கதிகமாக உருகியது போலிருந்தது மிலிக்கு. 

என்னுயிரை ஏற்றுக்கொள், இறைவா,

அது உனக்கு படைக்கப்பட்ட தாகட்டும்.

என் நொடிகளையும் நாட்களையும் ஏற்றுக்கொள்

அவை, உன் துதியின் நீரோட்டமாகட்டும்

என் கரங்களை ஏற்றுக்கொள், அவை

உன் அன்பின் உந்துதலில் இயங்கட்டும்.

 

என் பாதங்களை ஏற்றுக்கொள், அவை

உனக்கென விரைந்து எழில் சேர்க்கட்டும்

என் குரலை ஏற்றுக்கொள், என் மன்னவன்

உனக்கென நாளும் அது பாடட்டும்.

என் உதடுகளை ஏற்றுக்கொள், அவை

உன் செய்திகளால் நிறைந்திருக்கட்டும்.

 

என் வெள்ளியும் தங்கமும் ஏற்றுக்கொள்

எனக்கெனச் சிறு துளியும் கொள்ளேன்.

என் அறிவை ஏற்றுக்கொள், என் ஆற்றல்கள்

உன் சித்தம் செயலாய் ஆகட்டும்.

என் முனைப்பை ஏற்றுக்கொள் -

உனதாகட்டும், அது இனியும் எனதன்று.

 

என் இதயத்தை ஏற்றுக் கொள், அது உனது.

இனியுன் அரச அரியணை யாகட்டும்.

என் அன்பை ஏற்றுக்கொள், இறைவா

அதன் செல்வங்களை உன் பாதங்களில் இடுகின்றேன்.

என்னை ஏற்றுக்கொள், என்றும்

உனக்கே உரியேன், யாவும் உனக்கே! 


பாபுவின் குரலிலிருந்த உருக்கம் மிலியின் மனதை நெகிழ்த்தியது.. கர்ப்பிணியான அவள் தனது பகல் நேர நடையை பாபுவின் நடைப்பயிற்சியோடு இணைத்துக் கொண்டாள். பாபூபோர்களை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? 

எலுமிச்சைச்செடிகளில் உபரியாக தொங்கிய முட்களை கழித்து அதற்கான உரக்குழியில் போட்டுக் கொண்டே, “ஒரு செயலுக்கோ அதன் விளைவுகளுக்கோ அஞ்சி அச்செயலை செய்யாமலிப்பது அறமல்லஎன்றார் மோகன்.

புரியில பாபூஅப்டீன்னா நீங்க போரை ஆதரிக்கிறீக்கன்னு எடுத்துக்கலாமா?” டாக்டர் பூத் அவளை நிறைய நடக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் பிரசவநாள் நெருங்கி விட்டதால் நடக்கும்போதே மூச்சிரைத்தது. 

படிப்பினை கிடைக்கறவரைக்கும் பணியாற்ற வேண்டியதுதான். ஒருவேளை உண்மையிலுமே படிப்பினை கிடைச்சிருச்சின்னா அதில் மேலும் ஈடுபடுவதற்கான தேவையே இருக்காது 

அப்டீன்னா நீங்க போர்களின் ஆதரவாளர்ன்னு எடுத்துக்கலாமா? அன்பு வெறுப்பையும் வெல்லும்னு சொல்வீங்களே பாபூ?“ 

யெஸ்.. ஆனா நான் பார்த்தவரைக்கும் என் நாட்டு மக்கள் வன்முறையை தவிர்ப்பது சக மனிதர் மேல இருக்கற அன்பினால் அல்ல. கோழைத்தனத்தாலதான். போர்க்களத்தின் வீரத்தை விட கோழைத்தனத்தின் அமைதி மோசமானது. பயந்து நடுங்கிட்டு இருக்கறத விட சண்டையிட்டு சாகறது மேல். ஆனா ஒரு இந்து என்ற முறையில் எனக்கு போர்கள் மீது நம்பிக்கையில்ல. ஆனால், ஏதாவது ஒரு விஷயம் என்னை ஓரளவுக்காவது அதை ஏற்கச்செய்யுமானால், அது போர்முனையில் நாங்கள் பெற்ற அனுபவமாகவே இருக்கும் 

ஆம்பலன்ஸ் உதவியி்ன்போது போர்க்களத்தில் செலவிட்ட நேரத்தினால் நீங்கள் அடைந்த விநோதமான சிக்கலான முடிவு இதுஎன்று சிரித்தாள் மிலி.

ஆமாஎதுவும் நிலையானதல்லஅவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார். 

அவர் ஹரிலாலுடன் சமாதானமாக போக விரும்பியதை கஸ்துாரிடம் சொன்னபோது பாஇனிமே என்ன செய்ய முடியும்? நிலைமை கை மீறிடுச்சு. ஹரி என் கொழுந்தனோட ஆதரவோடு அந்த பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டான்என்றார். 

கேள்விப்பட்டேன் பாகாந்தி புரொடக்டர் ஆஃப் ஏசியாடிக்ஸுக்கு ஹரிலாலோட பெர்மிட் சம்பந்தமா லெட்டர் போட்டிருக்கார் 

மகனோட திருமணத்தை பத்தி என்ன நினைக்கிறாராம்?பா வின் குரலில் ஆர்வமிருந்தது. 

அவருக்கு ஒப்புதல் இல்லேன்னாலும் மகனை மன்னிக்க தயாரா இருக்கறதாலதானே அந்த கடிதத்தையே எழுதியிருக்காரு 

மிலியின் பேச்சிலிருந்த உண்மை கஸ்துாரின் கண்களில் நீரை வரவழைத்தது. 

ஹென்றி வீடு திரும்பியபோது விளையாட சென்றிருந்த அவளின் மூத்த மகனும் தகப்பனின் கையை பிடித்தபடி வந்து சேர்ந்திருந்தான். மதிய நேரங்களில் உணவு மேசை ஆட்களின்றி இருப்பது வாடிக்கையென்றாலும், காந்தி சிறைக்கு சென்றிருந்த இந்நாளில் அது மேலும் வெறுமையாக தோன்ற, ஹென்றி தனக்கான உணவை தட்டில் எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தமர்ந்துக் கொண்டான். மிலி சிறிய தட்டில் ரொட்டியும் துருவிய பாலாடைக்கட்டியும் கேரட்டும் வைத்து மகனுக்கு எடுத்து வந்தாள். 

பாபுக்கு சிறையில மீலி பாப்தான் சாப்பிட கொடுக்கிறாங்களா?அவளுடைய குரலில் வருத்தமிருந்தது.  அது அவருக்கு செரிமானக் குறைவை ஏற்படுத்தும். 

இல்லஅந்த பிரச்சனையெல்லாம் இப்போ சரியாயிடுச்சு. அவருக்கு மேசை வச்சிக்கவும் பேனா மைக்குப்பி வச்சிக்கவும் கூட அனுமதி கிடைச்சிருக்கு 

நல்ல விஷயம்தான் 

ஆமாஆனா அதை விட நல்ல விஷயம் என்னான்னா அவர் விரைவில் விடுதலையாகிட வாய்ப்பிருக்கு. பாபுவை சமரசத்திட்டத்தின் ஷரத்துகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரட்டோரியாவுக்கு ஸ்மட்ஸை சந்திக்க அழைச்சிட்டு போயிருக்காங்க. வழக்குகளை திரும்ப வாங்கப்போறதாகவும் கைதிகளை விடுவிக்கப்போறதாகவும் அரசு ஊழியர்களாக இருந்த சத்தியாகிரகிகளை திரும்ப வேலையில சேர்த்துக்கறதாகவும் அதுக்கு பதிலா சத்தியாகிரகிகள் தாமாக முன் வந்து தங்களை பதிவு  செஞ்சுக்கணும் ஷரத்து தயாராகியிருக்கு 

பாபு இதை ஏத்துக்குவாரா? 

ஏத்துக்கலாம் என்றான்.

மிலியின் உடல், இரவுபகலாக குழந்தையை கவனித்துக் கொள்வதால் எழுந்த சோர்வினாலும் உறக்கமின்மையாலும் தளர்ந்திருந்தாலும் அவள் கேள்விப்பட்டிருந்த நல்ல செய்தியே அவளை விழித்தெழ வைத்தது. சற்றுநேரம் அதை அனுபவித்தப்படி படுக்கையில் அமர்ந்திருக்க மனம் விழைந்தாலும் செய்ய வேண்டிய வேலைகள் படக்காட்சி போல கண்களில் ஓடின. மூத்தமகன் எழுந்துக் கொள்வதற்குள் உணவு தயாரிக்க வேண்டும். அதற்குள் இளையவன் பாலுக்கு அழுவான். ஹென்றியை கிளப்பி விட வேண்டும். வீட்டு வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆனால் எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டபோது அந்த மந்திரவார்த்தை மனதிலிருந்து எழுந்துபாபு இன்று விடுதலையாகி விடுவார்என்று காதோரம் சொல்லி விட்டு சென்றது. 

ஹென்றி இந்தியன் ஒப்பீனியனுக்கான கட்டுரைகளை வேகவேகமாக எழுதிக் கொண்டிருநதான். 

நேட்டாலிலிருந்த வெள்ளையர்கள் டிரான்ஸ்வாலில் நடந்து கொண்டிருந்த போராட்டம் பற்றி முடிவெடுக்க முடியாமல் இருப்பார்கள் என்பதும் அந்தக் காலனியி்ன் இந்தியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதே. டிரான்ஸ்வாலில் இருக்கும் பதினைந்தாயிரம் ஆசியர்கள், முழு உலகுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இனப்போரை எதிர் கொண்டிருக்கிறார்கள். அந்தப்போர், ஆசியர்கள் எப்போதுமே அடக்கியாளப்பட வேண்டுமா அல்லது சமத்துவமாக நடத்தப்பட, சக மனிதர்களாக கருதப்பட மனிதனும் அடிமையும் என்ற நிலையில் அன்றி, மனிதனும் மனிதனும் என்ற நிலையில் நடத்தப்பட வேண்டுமா என்பதற்கான போராட்டம் 

என்பதாக அவன் எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பியிருந்த இரண்டு கட்டுரைகளுக்கடியில் அச்சுக்கு அனுப்பமுடியாத பாபுவுக்கு எழுதிய பிரத்யேக கடிதமொன்றும் இருந்தது. “ஒரு மனிதனை அவனது லட்சியமானது இந்த அளவுக்கு பீடித்து அவனை தன் சொந்த சுகத்தையும் தன் உடல் நலத்தையும் சொந்த ஆர்வங்களையும் குடும்பத்தையும் அவனுக்காக வேலை செய்பவர்களின் மகிழ்ச்சியையும் மறக்க செய்வது என்பது மிகவும் அபூர்வமானது. உண்மையை என்ன விலை கொடுத்தேனும் தேடிச் செல்ல வேண்டும் என்ற இப்சனின் கருத்தை நோக்கி நான் மேன்மேலும் நகர்ந்து வருகிறேன். மேலும் மிக உயர்ந்த மனிதன் என்பவன் தன்னந்தனியாக நிற்பவனே என்ற டாக்டர் ஸ்டாப்மேனின் வார்த்தைகளை நாளுக்குநாள் உணர்ந்து வருகிறேன். உங்களை அண்ணா என்று அழைக்கவே என் மனம் விழைகிறது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களேஎன்றிருந்தது.     

அன்று இரவுணவுக்கு பிறகு மிலி, உள்ளறையில் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட உணவுப்பொருட்களையும் சமையற்சாமான்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது முன்னறையிலிருந்து ஒலித்த குரல் அவளை சட்டென்று மலரச் செய்தது. அவள் ஆர்வமும் அன்புமாக எட்டிப்பார்த்தபோது பாபு, அவளுடைய மகன்களிடம் விளையாடிக் கொண்டிருந்தார். தாயை கண்டதும் பூவாய் மலர்ந்து சிரித்த குழந்தையோடு பாபுவும் சேர்ந்துக் கொண்டார். 

அந்த சிரிப்பில் சோர்வோ பயணக்களைப்போ ஏதுமில்லை.

            

5th April, 2021 பதாகையில் வெளியானது

No comments:

Post a Comment