Search This Blog

Wednesday 7 June 2017

தேனீ சீருடையான்

அன்புத் தோழர் கலைச் செல்வி அவர்களுக்கு வணக்கம்.
தங்களின்சவுந்தரி வாசித்தேன். அனுபவப் போக்கும் தத்துவ நோக்கம் பதியமிட்டுள்ள நல்ல படைப்பு.
பூக்கள் மென்மையானவை என்று எந்தப் பூக்காரியும் சொல்வதில்லை என்ற வாசகம் அனுபவ வெளிப்பாடு. எல்லாக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் பூவை மென்மையின் குறியீடாகவே உச்சரித்து வந்துள்ளனர். பழைய பாடல்களிலோ நவீன படைப்புக்களிலோ பூ ஒரு வன்பொருள் என வாசித்ததாக ஞாபகம் இல்லை. பூக்கட்டும் சவுந்தரியிடமிருந்துதான் இத்தகைய சொல்லாடல் வரமுடியும். நீங்கள் ஓர் அரசு ஊழியராக இருந்தும் கூட ஒரு பூக்காரியின் கரடு தட்டிய விரல்களை அறிந்து வைத்ததிருப்பது சிறப்பு. வாழ்க்கையை வாசித்து உள்வாங்குபவரே நல்ல எழுத்தாளர் என்ற வரையறையை நீங்கள் நிறைவு செய்திருக்கிறீர்கள். 
அடுத்து தத்துவநோக்கு என்று பார்த்தால் விவிலிய வசனங்களும் தம்மபத வாசகங்களும் எளிமையாக வந்து விழுந்திருக்கின்றன என்பதுதான். "கிடைக்காமல் கிடப்பது பட்டினி: கிடைத்தும் உண்ணாமல் இருப்பது உண்ணாவிரதம்." கணவன் பிரிந்து போனபின் சவுந்தரிக்கு எத்தனையோ வாய்ப்புக்ககள் வந்தும் அதை அவள் நிராகரித்துவிட்டாள் என்பது போராட்ட உணர்வின் வெளிப்பாடு. கதையை வடிவமைத்த பாத்திரங்களும் கதையெங்கும் விரவிக் கிடக்கும் சொல்லாடல்களும் அதை நிரூபிக்கின்றன. பஸ் கண்டக்டர் முதல் வேறு பலரும் எவ்வளவோ முயன்றும் தற்காத்துக் கொள்ளும் கதாநாயகியின் உத்தி தனித்துவிடப் பட்டட பெண்களுக்கு ஓர் உந்துசக்தி. தன் குழந்தைக்காக எல்லா இன்பங்களையும் தியாகம் செய்கிறாள். பெண்கள் உணர்ச்சிக்கு அடிமையாக வேண்டாம் என்பது இக்கதையின் கலைவடிவச் செய்தி.அது  நல்ல செய்தி! மீண்டும் ஒரு நல்ல கதை வாசித்த திருப்தி உ;ணடாகிறது.
அதையும் தாண்டி இன்னொரு கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. காதல் கணவன், கடைசிவரை அன்பு குறையாதவன். இருவீட்டாரும் நிராகரித்த பின்னும் அன்யோன்யமாய் வாழ்கின்றனர். அவன் அவளைப் பிரிந்து ஏன் சாமியாராகவேண்டும்? காரணம் சொல்லப் படாமலேயே கதை முடிவடைந்திருக்கிறது.
இன்னொரு கேள்வியும் எனக்கு எழுந்தது. இளமையில் நிராதரவாய் விடப் பட்ட ஒரு பெண் தன் பாலியல் உரிமையை நிலைநாட்ட விரும்புவது தவறு. ஆகுமா? நமது மதக் கோட்பாடுகளும் சாதிய சட்டங்களும் "ஆம் தவறுதான்" என்று பதில் கூறுகின்றன. அதை மீறி எழுச்சியடையும்  பெண்ணை நாம் உற்சாகமூட்டி வரவேற்க வேண்டும்தானே?  என்னுடைய "ஊனோடு ஊன்கலந்து....." என்ற சிறுகதையை (பலரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை) அந்தக் கருத்தோடுதான் எழுதி இருந்தேன். கணவன் உடல்நலம் குன்றிவிட்டான் என்பதற்காக மனைவி வரண்ட விறகாய்க் கிடக்க வேண்டுமா என்பதே என் கேள்வி. தங்கள் கதையில் அவன் சாமியாரராகி அவளுக்குத் துரோகம்  செய்கிறான். அப்படியானால் அவள் தன் உரிமையை நிலைநாட்டுவது தவறில்லைதானே?
ஆனால் இன்றைய நிலையில் சமூதளத்தில்இந்த வாதாட்டங்கள்  எந்தப் பயனையும்  உண்டாக்கப் போவதில்லை என்று தெளிவடையும் போது சவுந்ததரியின் முடிவு சரியானதே.
நல்ல கதை! வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
தேனிசீருடையான்.

No comments:

Post a Comment