Search This Blog

Wednesday, 15 May 2019

மாயநதி விமர்சனக்கூட்டம் 12.5.2019



எதுவுமேயின்றி என்ன வேண்டுமானாலும் பேசி விட முடிகிறது ஆர்ஜேக்களுக்கு. அட.. கூட்டம் கூட தேவையில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..


பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. படைப்பில் பயின்று வரும் திரண்ட கருத்தையெல்லாம் இவர் கேட்கவில்லை. படைப்பின் மீதான தெளிவான புரிதலும், தீர்க்கமான மொழியுமாக உரையாடினார். 

நிகழ்வை சுஜாதாசுந்தர் ஒருங்கிணைத்தார்.



Saturday, 11 May 2019

அன்னையர்

அன்னை என்ற வார்த்தையை விட அம்மா, அம்மை என்ற வார்த்தைகள் கூடுதல் பிணைப்புக்குள் இட்டுச் செல்கிறது. பெண்களுக்கென இயற்கை ஒதுக்கியிருக்கும் இச்செயல் பிழையுமன்று. கொண்டாட்டமுமன்று. இயல்பை, இயல்பாக்கவியலாத தருணங்களில் அன்னைகள் தனக்கென ஒரு உரு பெற்றுக் கொள்வதாக தோன்றுகிறது. தாய்மை மீது பொதிய வைக்கப்பட்ட “புனிதக்கட்டை“ அவிழ்ப்பதல்ல இப்பதிவின் நோக்கம்.அன்னையின் தன்மைகளை சற்றே விரிக்கத் தோன்றுகிறது. இதில் பாசம் என்பதை சற்று விலக்கி நிறுத்திக் கொண்டு அலசலாம்.
தாய்மையை கடமைகளுக்குள் நிறுத்தி அசராது உழைக்கும் பெண்கள் ஒருவகை. கற்பனைக்கெட்டாத தியாகமும் தன்னலமின்மையும் இதன் கூறுகள். ஆனால் இவையேதும் அவர்கள் உணர்வதில்லை. துாசிவரும்போது கண்களை இறுக்கிக் கொள்வது போன்று இதை அனிச்சை செயலாகவே கருதிக் கொள்கிறார்கள்.
சிலரால் இதை பிரித்தறிய முடியும். தம் மக்களுக்கு, தாயாக தாம் செய்தவற்றை உரிய நேரங்களில் பட்டியிலிடலாம். தனக்குவதாது என்ற தெரிந்த பிறகு, சிலபல சாபங்களால் நிறைக்கலாம். உறவில்லை என்று விலகலாம். ஆனால் பெரும்பாலும் இவையெல்லாம் மேம்போக்கான செயல்பாடுகளாக இருக்கும். தம் மக்களுக்கு பிரச்சனையென்று வரும்போது, அவர்களால் வாளாவிருக்க முடியாது. மறைந்தும் ஒளிந்துமாக அவர்களின் கருத்தும் கவனமும், பெற்ற மக்களையே சுற்றி வருகிறது. சண்டையும் சச்சரவும் மேம்போக்காக சுற்றினாலும், பாசமும் அக்கறையுமான உள்ளுணர்வு ஒன்று ஓடிக் கொண்டிருக்கும்.
இன்னும் சிலதாய்மார்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒரு கணக்கிற்குள் அடக்கி கொள்ள முடிகிறது அவர்களால். தாய்மை இங்கு ஆயுதமாக பயன்படும். குடும்பத்தில் தன் முக்கியத்துவத்தை உருவாக்க அல்லது அதிகப்படுத்திக் கொள்ள தாய்மை ஒரு துருப்புச்சீட்டு அவர்களுக்கு. பாசம், அக்கறை என்ற போர்வைக்குள் சுயநலம் என்ற உணர்வை ஒளித்துக் கொள்வர். குழந்தையிலிருந்தே, தாய்மையின் “பேருரு“ குறித்த அதிகப்பட்ச போதனைக்கு ஆளாகும் அக்குழந்தைகள், பிற்பாடு “அம்மாக்கோண்டுகளாக“ மாறி விடுவர். அதற்காக, அம்மாக்கோண்டுகளின் தாய்மார்கள் ஒட்டுமொத்தமாக இந்த வகைமைக்குள் அடங்கி விடுவதில்லை.
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

Tuesday, 7 May 2019

தி.ஜா.வின் பாயாசம்


சாமநாதுவின் அண்ணன் மகன் சுப்பராயன். நல்ல புத்திசாலி. படிப்பு ஏறினாலும் செலவழிக்க பணமின்றி, படிப்பு முடிவதற்குள்ளாகவே ஊருக்கு அழைத்து வந்து விடுகின்றனர். அதேநேரம் சுப்பராயனுக்கு செய்தொழில் வசப்பட்டு விடுகிறது. சாமநாதுவின் மனைவி வாலாம்பாள். அவர்களுக்கு நாலைந்து பிள்ளைகள் உண்டு. ஆனால் யாரும் சுகப்படவில்லை. சுப்பராயனின் வாரிசுகளை கொண்டு கொடுத்த வகையில் ஏற்படும் சொந்தங்கள்.. அவரின் செல்வாக்கு.. அதனால் ஊருக்கு கிடைக்கும் நன்மைகள் எல்லாவற்றையுமே வன்மத்தோடு பார்க்கும் சாமநாதுவின் மனதை நெருக்கமாக அறிந்துக் கொள்ளும் வாலாம்பாள் கிட்டத்தட்ட அவரின் மனச்சாட்சியாக பேசுகிறாள். அவருக்கே கூட தன்னுடைய இயல்பு பிடிக்காமல்தான் போகிறது. அதனால்தான் இறந்துபோன மனைவியை ராட்சச முண்ட.. சாவற வரைக்கும் நியாய புத்தி.. தர்ம புத்தி.. என்று திட்டுகிறார். சுப்பராயனின் மூன்றாவது மகளோடு ஒரே பந்தலில் திருமணமான தனது முப்பத்தோறு வயது மகளின் நார்மடிக்கட்டுக்குள்ளிருக்கும் இளம் முகம்.. அண்ணன் மகன் வீட்டு திருமணத்தில் எடுபிடியாக அலையும் மகனி்ன் நிலை என குமையும் மனம், கேட்பாரின்றி தடுப்பாறின்றி பாயாச கொப்பரைக்கு முன் வந்து நிற்கிறது.

கடந்தவைகளும் நிகழ்பவைகளுமாக கதை தன்னியில்பாக நகர்கிறது. ஒரு சொல்லோ சம்பவமோ மிகையில்லை. இசைக்கச்சேரி தொடங்கி விட்டது. சங்கதிகளில் பிசகில்லை. இத்தனைக்கும் கச்சேரி உச்சஸ்தாயிலேயே நடக்கிறது. நாம் கண்களை மூடி லயித்துக் கிடக்கிறோம். ஜதிகளில் பிசகில்லை. உச்சஸ்தாயிலேயே குரல் தன்னியில்பாக மாயாஜாலம் நிகழ்த்துகிறது, சுருதி பிறழவில்லை. இயல்பு.. எல்லாமே இயல்பு. அடக்கவியலாத உச்சக்கட்டத்தில் பொங்கி பிரவகித்து ஓடுகிறது வன்மம். முள்ளாய் குத்தும் பார்வையை எதிர்க்கொள்ளும் திராணியின்றி, செயலுக்கு நியாயம் கற்பிக்க, மனம் பறந்தலைகிறது. நாயன இசை வாலாம்பாளின் குரலையொத்தது. பௌதீகமாக நடமாடிக் கொண்டிருந்த வாலாம்பாளிடம் இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் நீ என் ஆம்படையாளா.. அண்ணனோட ஆம்படையாளான்னு தெரியில.. என்பார் சாமநாது. ஸ்துாலமாகி போன சரீரத்தின் குரல் நாயனமாக ஒலிக்கும்போது அவரால் எதுவும் செய்து விட முடியாது.

அம்பையின் கதைகள்


பொதுவெளியில் பெண்களின் புழக்கம் வெகுவாக குறைந்திருந்த காலக்கட்டம் அது. கல்வி பயில்வதற்காகவும் பொருளீட்டவும் வெளிக்கிளம்பும் பெண்கள் கூட, பொதுவாக, இருக்கும் சட்டகத்துக்குள் எவ்வித முரண்களுமின்றி தங்களை பொருத்திக் கொள்ளவே விரும்பினர். இலக்கியத்தை பொறுத்தவரை, பரவலாக்கப்பட்ட கல்வியால், பெண்களுக்கு வாசிக்கவும் எழுதவும் வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் அவற்றுக்கு கிடைத்த அங்கீகாரம், எழுபதுகளில் பெண்ணெழுத்துகள் பெருகி வர காரணமாகின. ஆனால், அவை ஆண் மைய சமூகத்தின் பொது விதிகளை மீறாமல் அல்லது, ததும்பும் தன்மை கூட அற்று, விளிம்புகளுக்குள்ளேயே அடங்கியிருந்தன. அதன்பொருட்டே இத்தகைய அங்கீகாரம் என்பதை உணராத அவ்வெழுத்துகள், சமூகம் தம்மை நோக்கி வலியுறுத்துபவற்றையே தாமும் படியெடுக்கிறோம் என்ற தன்னுணர்வற்று நீண்டுக் கொண்டேயிருந்தன. விதிவிலக்குக்கான படைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைக்காட்டினாலும், பெரிதான வேறுபாடுகளற்று “இயக்கப்படும்“ படைப்புகளாகவே அவை நீடித்தன. போல சொல்லும் முறை, பழக்கமான சொல்லாடல்கள், கற்பிதமான உறவுநிலைப்பாடுகள் என்ற தளங்களில் அவை ஜல்லியடித்தன.

மறுபுறம், ”நீ சுத்தமாயிட்டேடி... உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி... நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே..“ என்ற ஜெயகாந்தனின் “அக்னிபிரவேசத்தின்“ புரட்சியை இலக்கிய உலகம் கொண்டாடித் தீர்த்தது.

ஐசக் டினேசன் – The Blank Page


மௌனச்சவால்

கதை போர்ச்சுகல்லில் நடக்கிறது. அங்கிருக்கும் கன்னிமடத்தை சார்ந்த கன்னியாஸ்த்ரிகள் ஆகச்சிறந்த சணலை சாகுபடி செய்பவர்கள்.  அச்சணலைக் கொண்டு செய்யப்படும் மிருதுவான லினன் துணி, அரசக்குடும்பத்தின் இளவரசிகளுக்கு, அவர்களின் மணஇரவுக்கான படுக்கைவிரிப்புகளாக பயன்படுவதை அம்மடம்  ஒரு மகத்தான நிகழ்வாக கருதிக் கொள்கிறது. 

உபயோகம் முடிந்த மறுநாளின் காலைப்பொழுதில், அரண்மனையின் முக்கிய பணியாளர் அந்த இரவின் விரிப்பை உப்பரிகையிலிருந்து தொங்க விட்டு “இப்பெண்ணை கன்னியென்று அறிவிக்கிறோம்“என்று பறைச்சாற்றுவார். அந்த விரிப்பு பிறகெப்போதும் உபயோகிக்கப்படுவதில்லை. குருதிப்படிந்த அப்படுக்கை விரிப்பின் நடுப்பகுதி அதே கன்னிமடத்துக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. அவை அங்கு தங்கமூலாமிட்ட சட்டகங்களில் அவ்விளவரசியின் பெயரோடு கிரீடமும் பொருத்தப்பட்டு கன்னிமடத்து தாழ்வாரத்தின் சுவர்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு, அவ்விளவரசிகள் பட்டத்தரசிகளாக அச்சட்டகங்களை பார்வையிட வருவதும் வழக்கம். இளவரசி ஒருத்திக்கு விசுவாசமான தோழியாகவும், ரகசியங்களை நம்பிக்கையுடன் பாதுகாத்த சினேகிதியாகவும் இருந்த தோழிப்பெண்ணொருவர் அச்சட்டகத்தை பார்வையிட வருகிறார். கன்னியாஸ்திரி அழைத்து வந்து முன்நிறுத்திய தங்கமூலாம் சட்டகங்களில் அடைப்பட்டு கிடந்த அச்சதுரவிரிப்பு பனி வெண்மை மாறாது வெற்றுப்பக்கமாகவே இருக்கிறது.

குருதிப்படியாத அச்சட்டத்தை உலகின் பார்வைக்கு வைக்கப்பட்ட மௌனச்சவால் எனவும் கொள்ளலாம். கன்னியாஸ்திரிகள் வாழ்ந்துப்பார்க்காத வாழ்வின் வெற்றுப்பக்கமாகவும் கொள்ளலாம். 

Monday, 6 May 2019

A clean well-lighted place


எர்னெஸ்ட் ஹெமிங்கவேயின் A clean well-lighted place என்ற கதையில் செவிக்கேளாத கிழவர் ஒருவர் மதுபானவிடுதியை நாடி வருகிறார். அந்த விடுதி சுத்தமான, ஒளியூட்டப்பட்ட இடமாக இருக்கிறது. நடுநிசியை கடந்தும் செல்ல மறுப்பவராக அவர் மேலும் மேலும் மதுவை நாடுகிறார். பரிமாறுனரில் ஒருவன் இளைஞன். மற்றொருவனுக்கு நடுத்தர வயதிருக்கலாம். இளம்பணியாளருக்கு விடுதியில் நேரம் கடத்துவதில் விருப்பமில்லை. அநாகரிகமான வார்த்தைகளை கையாண்டு கிழவரை அனுப்பி விடுகிறான். இருவரும் விளக்குகளை அணைத்து, கதவை மூடி விட்டு கிளம்புகின்றனர்.

இளைஞனுக்கு இளமை, வேலை, நம்பிக்கை கூடவே அவனுக்காக காத்திருக்கும் மனைவி இருக்கிறாள். வேலையை தவிர்த்து மற்றேதும் தன்னிடம் இருப்பதாக கருதாக நடுத்தரவயதாளன், வேறொரு விடுதிக்கு செல்ல விழைகிறான். துரத்தப்பட்ட கிழவர் அங்கேயும் சென்றிருக்கலாம். அவர்கள் பணிப்புரியும் விடுதியை போல இவ்விடுதி, சுத்தமான ஒளியூட்டப்பட்ட இடமாக இல்லாது, மினுக்கென்று இருப்பதாக எண்ணி அங்கிருந்து கிளம்பி அறைக்கு வருகிறான். சொல்லப்போனால், அவனுக்கு தான் வேலைசெய்யும் விடுதியை விட்டு கிளம்ப மனமில்லை. இம்மாதிரியான ஒளியூட்டப்பட்ட இடம் தன்னை போல வேறு யாருக்கேனும் தேவைப்படலாம்.  அறையில் உறக்கம்வராது புரளும்போது இன்சோம்னியாகவாக இருக்கும் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.

இந்நாள் கிழவருக்கு எல்லாமும் இருக்கிறது.. ஆனால் வயதேறி விட்டது. நாளைய கிழவனான நடுத்தரவயதாளனுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டு விட்டது. மதுபான விடுதியின் விளக்கொளியை அணைக்கும்போது ஏற்படும் இருளை, தன்னை சூழும் வெறுமை என்பதாக உணர்கிறான். ஒருவேளை  அந்த கிழவர் வெளிச்சமான அந்த விடுதிக்கு வெறுமையை விரட்டும் பொருட்டே வந்திருக்கலாம். இன்றைய இளைஞனுக்கு இவை எல்லாமே இருப்பதால், தன்னை சூழப்போகும் வெறுமையை உணராதவனாக இருக்கிறான். அவனை பொறுத்தவரை, அந்த கிழவர் பணக்காரராக இருந்து தற்கொலை முயற்சி செய்ததை அர்த்தமற்றதாக எண்ணிக் கொள்கிறான். இளமை, அழகு, நம்பிக்கை, பணம் என்பதான புறவுலகின் இன்பங்கள் வயதாகும்போது வெறுமையாக மாறுவதை  மூன்று வெவ்வேறு பருவங்களின் வழியே கடத்தியிருப்பார் ஹெமிங்வே.

ஊட்டி ஆய்வரங்கு 2019ல் தெரிவு செய்யப்பட்ட கதை.
http://howzzatbyswe.blogspot.com/2019/04/blog-post.html?m=1

Monday, 1 April 2019

மின்னல்

குறி மே 2019 இதழில் வெளியான கதை


மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. யாருக்கு வேண்டும் இந்த மழை..?  போய் கிராமத்தில் கொட்ட வேண்டியதுதானே..? விவசாயமாவது செழிக்கும். ஆனால் மழைக்கு கிராமம், நகரம் என்று வரையறை ஏதேனும் உள்ளதா என்ன..? அல்லது எல்லாமே வரையறைக்குள்தான் நடக்கிறதா..? நினைவுகளின் அழுத்தத்தில்  உடலில் பாரம் ஏறியது போலிருந்தது. அதற்காக இப்படியே படுத்திருக்கவும் முடியாது. கசகசப்பான ஈரம் உடலில் குளிராக ஏறிக் கொண்டிருந்தது. சுவரின் காரைப்பெயர்ந்த பொத்தலில் கையை நுழைத்து, அதன் விசையில் உடலை எழுப்பிக் கொண்டான் அவன்.

சுழற்சி