Search This Blog

Saturday 11 May 2019

அன்னையர்

அன்னை என்ற வார்த்தையை விட அம்மா, அம்மை என்ற வார்த்தைகள் கூடுதல் பிணைப்புக்குள் இட்டுச் செல்கிறது. பெண்களுக்கென இயற்கை ஒதுக்கியிருக்கும் இச்செயல் பிழையுமன்று. கொண்டாட்டமுமன்று. இயல்பை, இயல்பாக்கவியலாத தருணங்களில் அன்னைகள் தனக்கென ஒரு உரு பெற்றுக் கொள்வதாக தோன்றுகிறது. தாய்மை மீது பொதிய வைக்கப்பட்ட “புனிதக்கட்டை“ அவிழ்ப்பதல்ல இப்பதிவின் நோக்கம்.அன்னையின் தன்மைகளை சற்றே விரிக்கத் தோன்றுகிறது. இதில் பாசம் என்பதை சற்று விலக்கி நிறுத்திக் கொண்டு அலசலாம்.
தாய்மையை கடமைகளுக்குள் நிறுத்தி அசராது உழைக்கும் பெண்கள் ஒருவகை. கற்பனைக்கெட்டாத தியாகமும் தன்னலமின்மையும் இதன் கூறுகள். ஆனால் இவையேதும் அவர்கள் உணர்வதில்லை. துாசிவரும்போது கண்களை இறுக்கிக் கொள்வது போன்று இதை அனிச்சை செயலாகவே கருதிக் கொள்கிறார்கள்.
சிலரால் இதை பிரித்தறிய முடியும். தம் மக்களுக்கு, தாயாக தாம் செய்தவற்றை உரிய நேரங்களில் பட்டியிலிடலாம். தனக்குவதாது என்ற தெரிந்த பிறகு, சிலபல சாபங்களால் நிறைக்கலாம். உறவில்லை என்று விலகலாம். ஆனால் பெரும்பாலும் இவையெல்லாம் மேம்போக்கான செயல்பாடுகளாக இருக்கும். தம் மக்களுக்கு பிரச்சனையென்று வரும்போது, அவர்களால் வாளாவிருக்க முடியாது. மறைந்தும் ஒளிந்துமாக அவர்களின் கருத்தும் கவனமும், பெற்ற மக்களையே சுற்றி வருகிறது. சண்டையும் சச்சரவும் மேம்போக்காக சுற்றினாலும், பாசமும் அக்கறையுமான உள்ளுணர்வு ஒன்று ஓடிக் கொண்டிருக்கும்.
இன்னும் சிலதாய்மார்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒரு கணக்கிற்குள் அடக்கி கொள்ள முடிகிறது அவர்களால். தாய்மை இங்கு ஆயுதமாக பயன்படும். குடும்பத்தில் தன் முக்கியத்துவத்தை உருவாக்க அல்லது அதிகப்படுத்திக் கொள்ள தாய்மை ஒரு துருப்புச்சீட்டு அவர்களுக்கு. பாசம், அக்கறை என்ற போர்வைக்குள் சுயநலம் என்ற உணர்வை ஒளித்துக் கொள்வர். குழந்தையிலிருந்தே, தாய்மையின் “பேருரு“ குறித்த அதிகப்பட்ச போதனைக்கு ஆளாகும் அக்குழந்தைகள், பிற்பாடு “அம்மாக்கோண்டுகளாக“ மாறி விடுவர். அதற்காக, அம்மாக்கோண்டுகளின் தாய்மார்கள் ஒட்டுமொத்தமாக இந்த வகைமைக்குள் அடங்கி விடுவதில்லை.
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

No comments:

Post a Comment