Search This Blog

Thursday 11 May 2017

எழுத்தாளர் ஜெயமோகன் தளத்திலிருந்து

“மஞ்சுக்குட்டி“ சிறுகதைக் குறித்து..

லைச்செல்வியின் மஞ்சுக்குட்டி வழக்கமாக பெண்கள் எழுதும் குடும்பச்சித்திரத்தைஅல்லது பெண்ணியக் கொள்கைகளையோ நோக்கிச் செல்லாமல் சற்று அசாதாரணமான ஒரு வாழ்க்கைச் சூழலை நோக்கிச் சென்றிருப்பது ஒரு முக்கியமான இலக்கியக்கூறு என்று நினைக்கிறேன். ஜி.நாகராஜன் முதல் இமயம் வரை எழுதிக்காட்டிய அடித்தள மக்களின் வாழ்க்கை. அங்கு செயல்படும் இச்சை,வன்முறை. அதில் மறைந்து எங்கோ ஓர் இடத்தில் மேலெழும் அறத்தின் வெளிப்பாடு.
பலவகையிலும் இயல்பான மொழிநடையுடன் ,அயர்ச்சி தெரியாது எழுதப்பட்டுள்ளது இக்கதை .தமிழில் வழ்க்கமாக இத்தளத்தில் எழுதப்படும் கதைகளில் இருக்கும் வலிந்த சித்திரங்களும் இல்லை. சுப்ரபாரதிமணியன் பாவண்ணன் போன்ற முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் அடைந்த இயல்பான தொடக்கம்சரளமான உரையாடல்நிகழ்வுகளிலிருந்து நினைவுகளுக்கு சென்று மீண்டும் வருதல் என்னும் ஊசலாட்டம் ஆகியவை சிறப்பாக இக்கதையில் அமைந்துள்ளன்நம்பகமான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது இக்கதையில் நிகழ்ந்துள்ளது
மஞ்சுவின் சித்திரம் ஆரம்பத்திலிருந்து நுணுக்கமாகச் சித்தரிக்கபப்ட்டு எழுந்துவந்து இயல்பான அறவெளிப்பாடொன்றில் திருப்பம் கொள்கிறது. சிறுகதையின் வடிவத்தில் சரியாகக் கதை அடைந்திருப்பதைக் காட்டுகிறது இது. மனைவியை விட்டு காதலியுடன் வந்தவன் உள்ளத்தின் ஆழத்தில் அம்மனைவி குடிகொள்வதும்அந்த நெருக்கடியின் குற்றஉணர்வு அவனை நோயென பீடிப்பதும் ,அந்த நோயுற்ற நிலையிலும் காதலி மேல் கொண்ட மோகம் அவனை ஆட்டுவிப்பதும் கதையில் தன்னியல்பாகவே நிகழ்கிறது. அனைத்து இழிவுகளையும் அவளுக்காக அவன் தாங்கிக் கொள்கிறான். மலம் நடுவே தூங்கும் நிலை வரை.
ஒரு கட்டத்தில் அந்த மோகம் கரைந்துவிட்டதென்பதை காதலி காண்கிறாள். அதன்பிறகு அவனை இயக்குவது அவளை அழைத்து வந்துவிட்டோம் என்ற பொறுப்புணர்வுதான். மனைவியை விட்டு வந்தவன் காதலியைக் கைவிட்டுச் செல்ல தயங்குகிறான். எங்கோ ஓரிடத்தில் அதை அக்காதலி உணருகிறாள் . அவனுள் வாழும் மனைவியின் சித்திரத்தை உணர்ந்ததும் அவனை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள். கதைப்பரப்புக்குள் பேசப்படாத ஒரு நுண்ணிய உளநகர்வு இக்கதைக்குள் நிகழ்ந்திருப்பதால் இதை ஒரு நல்ல கதை என்று சொல்லலாம்.
இக்தையை மேலும் கூர்மைபடுத்துவது என்றால் சிலவற்றைச் சொல்லலாம். காந்திமதியின் சித்திரம் இத்தனை அழுத்தமாக கதைக்குள் வந்திருக்க வேண்டியதில்லை. மீண்டும்மீண்டும் அவள் வருவதும் மஞ்சுவின் முன்னால் நின்று பூசலிடுவதுமான சித்திரங்கள் சற்று வழக்கப்படி உள்ளவை. அவன் கிளம்பி வரும்போது அமைந்திருந்த அதே சித்திரத்தில்ஆழமான அமைதியுடன் உறைந்திருப்பதுபோல அப்படியே விட்டிருந்தால் மேலும் அழுத்தம் நிகழ்ந்திருக்கும். அந்த அழுத்தத்தை நோக்கி அவன் திரும்பிச் செல்வதாகத் தோன்றும்
மஞ்சுவின் குணச்சித்திரத்தில் இருக்கும் ஒரு கட்டற்ற தன்மை ஆரம்பம் முதலே சரியாக வந்திருக்கிறது. அவள் குமாரை மணம் செய்ய முடிவெடுக்கிறாள். அந்தக் குமார் கதைக்குள் இன்னும் தெளிவான ஒரு முகத்துடன் வந்திருக்கலாம். மனைவி இன்னொருவனுடன் இருக்கையில் அவனுக்காகவும் சேர்த்து பிரியாணி வாங்கிச்செல்லும் அவனுடைய உளவியல் சொல்லப்படாதுகுறிப்பும் உணர்த்தப்படாது விட்ப்படுகிறது.
இக்கதையில் முடிவுக்குப்பின் நீளும் அடுத்த கட்டமென ஒன்றில்லை என்பதே முக்கியமான குறையென தோன்றுகிறது. மஞ்சுவின் மனதில் நிகழும் அந்த மெல்லிய மாற்றத்திற்கு அப்பால் இக்கதை நமக்குணர்த்தும் வாழ்க்கைஉண்மை என்பது எதும் இல்லை. அதேசமயம் இத்தருணத்தையே வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்துக்கான ஒரு பிரதிநிதித்துவ நிகழ்வாகக் கொள்ளவும் முடியவில்லை. அக்காரணத்தாலேயே வாழ்க்கையின் ஒருதருணத்தை நோக்கி வெளிச்சம் காட்டும் சிறுகதை என்ற அளவிலேயே இது நின்றுவிடுகிறது.
இத்தகைய கதைகளை தமிழ் முன்னோடி எழுத்தாளர்கள் பலகோணங்களில் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பது இக்கதையை ஒருபடி கீழிறக்கும் அம்சம். இலக்கியப் படைப்புக்கு இருந்தாகவேண்டிய பிறிதொன்றிலாத தன்மை இதிலில்லை. இக்கதையை படிக்கும்போதே குறைந்தது பத்துபதினைந்து வெவ்வேறு கதைகளின் நினைவில் எழுந்து மறைகின்றன. இரண்டாவது பெண் என்பதும் சரி ,அடித்தள வாழ்க்கையைச் சேர்ந்த பெண்ணின் அறம் என்பதும் சரி ,மிகச் சம்பிரதாயமாக சொல்லி செய்து வந்த கதைக்கருக்கள். அது ஒன்றே இக்கதையின் குறைபாடென்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment