Search This Blog

Wednesday 10 May 2017

ஆழம் கதை குறித்து

அன்புள்ள கலைச்செல்வி அவர்களுக்கு.
வணக்கம். 

உங்களுடைய "ஆழம்" என்ற  சற்றே பெரிய சிறுகதை படித்தேன். நல்லதொரு கதை. ஒரு பொதுவான வழக்கமான பாராட்டு சொல்ல இதை நான் எழுதவில்லை என்பதை முன்பாகவே நட்புடன் சொல்லி விடுகிறேன். 

இது சாதாரண கருவைக் கொண்ட ஒரு கதைதான்.  ஆனால் எது இதை சராசரி கதை என்று தள்ளாமல் உயர்த்திப் பிடிக்கிறது என்றுதான் யோசித்தேன். வறிய குடும்பம் குடிப்பழக்கம் உள்ள கணவன் சொத்து இருந்தும் வறுமை எதிர்பாரா இழப்பு மரணம் போன்றவை ஒரு சம்பிரதாய சிறுகதைக்குள் வந்துவிடும் விஷயங்கள்.  ஆனால் இதை நீங்கள் சொல்லியிருக்கும் முறை இதற்கு வலு சேர்க்கிறது.  அந்த முறை கூட ஒரு உத்தியாக நின்றுபோகாமல் வேறு சில இதை படிக்க விரும்பும் கதையாக மாற்றி இருக்கிறது. 


 வறிய குடும்பத்தின் சிறிய ஆண் குழந்தை ஒன்று ஆழ்குழாய் கிணற்றில் சிக்கி இறந்து போகிறது என்பது செய்திக்கதையாகி விடும்.  ஒரு நேர்க்கோட்டில் சொல்லிப் போயிருந்தால் நசநசத்துப் போயிருக்கும்.

மயக்கத்தில் கிடக்கும் வரலட்சுமியின் நடப்பில் தொடங்கி கதை முன்னும் பின்னுமாக வெட்டி முன் நகர்கிறது. அது தொடர்பை அறுக்காமல் செல்கிறது. இந்த நல்ல உத்திதான் கதையின் நீளத்தையும் முடிவு செய்திருக்கிறது. 

கதையில் உள்ள உரையாடல்கள் மண் வீச்சத்துடன் அமைந்துள்ளது இதன் பெரிய பலம்." நஞ்சைக்காடு ரெண்டு ஏக்கர் தேறும். நம்மைப் பயதேன்... ..முன்ன பின்ன பாக்காம செஞ்சுப்புட்டா காலத்துக்கும் ஓஞ்சு கிடக்கலாம்' என்ற வரி எப்படியான கதை மாந்தர்களை சந்திக்கப் போகிறோம் என்று சொல்லி விடுகிறது.  இடையிடையே ஒரு செழித்த குடும்பம் மழையின்மையாலும் பொருளாதார தேர்ச்சி இன்றியும் எப்படி நலிகிறது என்பதை தொட்டுக்காட்டிப் போகிறது கதை. 

வீட்டை சொல்லும்போது தானிய மூட்டை அறைதான் குடும்பம் நடத்த என்று சொல்லியதில் பெரும்பகுதி விளங்கி விடுகிறது. கூடத்தில் கட்டி இருந்த கொடிக்கயிறு துணிகளை சுமந்து தளர்ந்திருந்தது என்ற வரியில் ஒரு காட்சியும் அதில் அவர்கள் வறுமையும் தெரிந்து விடுகிறது. கொடியில் போடும் அளவுதான் துணி அல்லது அந்த அறையில்தான் எல்லாமே. சுமை ஏறித்தளர்ந்த  கொடிக்கயிறு ஒருவகையில் வரலட்சுமிதான். 

குழந்தை இல்லை என்ற நாலைந்து வருட" புழுத்தப் பாட்டுக்குப்" பிறகு பிறந்த குழந்தை என்ற வார்த்தையில்  உள்ள சுடும் நிஜம்.

எங்கிருந்தோ எப்படியோ வந்த கிழவி திண்ணையில் அப்படியே தங்கி விடுகிறாள். அதுவே அவள் இடமாகிறது. அவளிடம் குழந்தையை விட்டுவிட்டு இவள் வேலைக்கு சென்று வந்திருக்கிறாள். கிழவிக்கு இவளுக்கும் எந்த சொந்தமும் இல்லை. ஆனால் கிழவி இவளுடைய வீட்டில் ஒருத்தியாகிறாள் வீட்டுக்குள் இல்லாமலேயே . இவர்களை பொதுவில் இணைக்கும் கயிறு வறுமையும் கையறு நிலையும் மட்டுமே. ஆனால் அதில் இருக்கும் மனிதத்தின் ஈரம்தான் கிழவிக்கு திண்ணையில் இடம் தந்தது. குழந்தையை பார்த்துக்கொள்ள வைத்தது. வறட்சியில் அவளும் "உருண்டுவிட்டாள்' என்று ஒரு வரியில் ஒரு மிகச்சிறிய கதையையே   சொல்லிப் போகிறீர்கள். 

அந்த வறண்ட கிராமத்துக்கு மென் பான தயாரிப்பு நிறுவனம் வருவதை கப்பல் போல கார் வருகிறது. அகலமான சாலை வருகிறது. வசதியாக இருக்கிறது. விடலைகளுக்கு வேலை தருகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போய் ஜெயில் சுவர்களை போல உயர்ந்த மதில் சுவர்கள் மர்மத்தைக் கொண்டு வந்தன என்பதில் நிறுவனத்தின் லாப உத்தியை சந்தேக கண் ஒன்றால் சொல்லி விடுகிறீர்கள்.  இப்படியானவைதான் இந்த கதையில் சுவாரசியம். 

இறுதியில் குழாயில் விழுந்த   குழந்தையை இணையாக மற்றொரு பள்ளம் தோண்டி எடுப்பதை சொல்லி அது முகம் மண் மூடிக் கிடக்கிறது என்ற வரியில் குறிப்பாக சொல்லிப் போகிறீர்கள். எனக்கு சொல்ற தெகிரியத்தை எம் மவனுக்கு சொல்லுங்கய்யா..என்று சொன்ன குழந்தையின் அம்மாவின்  வார்த்தையிலும் மண் விழுகிறது. இதில் ஒரு சோகம் அந்த நிலம் அவளது நிலம். ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வந்து வெள்ளாமை செய்யலாம் என மூக்குத்தி விற்று தோண்டிய அந்த துளையிலேயே குழந்தை விழுகிறான். நீரும் இல்லை. நிலமும் இல்லை. மகவும் இல்லை. 

கையில் உள்ள வறுக்கியை நாய் கவ்வ முயல அதை தவிர்க்க முயலும் சிறுவன் காலை ஐந்தரை மணி இருளில் குழியில் நழுவி விழுகிறான். அருகில் அக்காவும் அம்மாவும் இருந்தும் அவன் விரித்த கை மட்டும் தெரிய அருகில் செல்வதற்குள் உள்ளே நழுவுகிறான் என்பது மனதை பிசையும் காட்சி.  இதை விட அவலம் தூங்கிய குழந்தை தண்ணீர் எடுக்க கிளம்பும் அம்மாவோடு தூக்கம் எழுந்து ஓடி வருகிறான். சிறுநீரில் நனைந்ததால் உடையை கழற்றி வீசிவிட்டு அம்மணமாய் வந்த சிறுவன் குழியில் விழுந்து விட்டான். கிராமத்து ஆட்கள் நாங்களும் முயற்சித்தோம். கம்பியை விட்டு சட்டையில் மாட்டி இழுத்துடலாம்னு பாத்தா பையன் அம்மணமா இருக்கான் என்கின்றனர்.  இந்த இடத்தில் நான் படிப்பதை நிறுத்தி விட்டேன். ஒரு பின் நிகழ்வுக்கு முன் அதற்கு சாதகமாக முன்நிகழ்வாக  என்னவெல்லாம் நடந்து விடுகிறது என்று துணுக்குற்று யோசித்தது மனம். இப்படி சின்ன சின்ன விஷங்களை நீங்கள்  கோர்த்திருக்கும் விதம் கதைக்கு  வலு.  

குடிகார கணவன் (அவனுக்கும் தன தவறு தெரிகிறது). வருவதற்கு காத்திருக்கிறாள். ஆழ்குழியில் விழுந்த குழந்தை - ஆண் குழந்தை இல்லை. இப்படி தோண்டிப் போட்டுவிட்டு போனால் அந்த நிலத்தை எப்படி என்ன செய்ய முடியும். இருக்கும் இரண்டு பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது அவள் முன் அந்த நொடி பெரிய கேள்வியாக எழுகிறது. இன்னுமும் ரெண்டு பொட்ட புள்ளைங்க இருக்குய்யா. அதை விஷம் வச்சா சாவடிக்கு? என்று கேட்கிறாள். அதை விட - அவள் பேச்சில் அழுகை கலந்திருக்கவில்லை என்ற கடைசி வரி - சொல்லப்படாத சொல்லமுடியாத இன்னொரு கதையை சொல்கிறது.
இந்த வரியின் கனம் தான் ஆழம் கதையின் ஆழம். அவைகளை அளவிட முடிவதே இல்லை என்றுதான் பொருள் கொள்ள வைக்கிறது.

வாழ்த்துக்கள்.

ரமேஷ் கல்யாண் 

No comments:

Post a Comment